settings icon
share icon
கேள்வி

ஒரு உண்மையான வேதாகம ஆராதனைக் கூட்டத்தில் காணப்படவேண்டியவைகள் என்ன?

பதில்


மனிதர்கள் இயல்பாகவே ஆராதிக்கும் உயிரினங்களாகும். சங்கீதக்காரன் இதை இவ்வாறாக வெளிப்படுத்துகிறார், "மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது" (சங்கீதம் 42:1). கி.மு. முதல் நூற்றாண்டில் சிசரோ, மதம் அதன் வடிவத்தைப் பொருட்படுத்தாமல், மனிதனின் உலகளாவிய பண்பு என்று கவனித்தார். மக்கள் எதையாவது அல்லது ஒருவரை வணங்கப் போகிறார்கள் என்பதைப் பார்த்து, ஆராதனை என்றால் என்ன என்று நாம் கேட்க வேண்டும்? நாம் யாரை எப்படி வணங்க வேண்டும்? ஒரு வேதாகம ஆராதனை ஊழியம் என்றால் என்ன, மிக முக்கியமாக, நாம் "உண்மையாக ஆராதனை செய்பவர்கள்" (யோவான் 4:23) அல்லது கள்ள ஆராதனை செய்பவர்களாக இருப்போமா?

உண்மையான ஆராதனை செய்பவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளவேண்டும் என்று கிறிஸ்து கட்டளையிட்டார் (யோவான் 4:24). தேவனுடைய ஆவியானவரால் நாம் ஆராதிக்கிறோம் என்று அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார் (பிலிப்பியர் 3:3), அதாவது உண்மையான ஆராதனை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தினால் இரட்சிக்கப்பட்டு பரிசுத்த ஆவியானவரைத் தங்கள் இருதயங்களில் வாசஞ்செய்யும்படிக்கு பெற்றவர்களிடமிருந்து மட்டுமே வருகிறது. ஆவியில் தொழுதுகொள்வது முறையான இருதய அணுகுமுறையைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது, ஆசரிப்புகள் மற்றும் சடங்குகளை வெறுமனே கடைபிடிப்பது அல்ல. சத்தியத்தில் தொழுதுகொள்வது என்பது தேவன் தன்னைப் பற்றி வேதத்தில் வெளிப்படுத்தியதன் படி தொழுதுகொள்வதாகும். நம் ஆராதனை வேதாகமத்தின்படி இருக்க, அது கிறிஸ்துவின் கோட்பாட்டிற்குள் இருக்க வேண்டும் (2 யோவான் 1:9; உபாகமம் 4:12; 12:32; வெளிப்படுத்துதல் 22:18-19). உண்மையான ஆராதனை வேதாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை நம்பியுள்ளது மற்றும் அறிக்கைகளின் அல்லது அறிக்கைகள் அல்லாத புஸ்தகத்தின் மூலம் வழங்கப்படலாம், ஒழுங்கு விதிகள் அல்லது மனிதனின் அறிவுறுத்தல்கள் புஸ்தகம் அல்லது வழிகாட்டுதலில் வழங்கப்படலாம்.

முதல் நூற்றாண்டு சபை அவர்களின் ஆராதனை ஊழியங்களில் பல பக்திச் செயல்களில் ஈடுபட்டார்கள், இதிலிருந்து உண்மையிலேயே வேதாகம ஆராதனை ஊழியம் என்ன என்பதை நாம் தீர்மானிக்க முடியும்: கர்த்தருடைய பந்தி அனுசரிக்கப்பட்டது (அப். 20:7), ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன (1 கொரிந்தியர் 14:15–16), தேவனுடைய மகிமைக்காக பாடல்கள் பாடப்பட்டன (எபேசியர் 5:19), ஒரு தர்மபணம் சேகரிக்கப்பட்டது (1 கொரிந்தியர் 16:2), வேதம் வாசிக்கப்பட்டது (கொலோசெயர் 4:16), மற்றும் தேவனுடைய வார்த்தை அறிவிக்கப்பட்டது ( அப்போஸ்தலர் 20:7).

கர்த்தருடைய பந்தி இயேசு திரும்பி வரும் வரை அவரது மரணத்தை நினைவு கூறுகிறது (1 கொரிந்தியர் 11:25-26). ஜெபம் தேவனுக்கு மட்டுமே ஏறெடுக்கப்பட வேண்டும் (நெகேமியா 4:9; மத்தேயு 6:9), கத்தோலிக்க மதத்தின் நடைமுறையில் உள்ளதைப் போல மரித்துப்போன எந்தவொரு நபருக்கும் ஒருபோதும் செய்யக்கூடாது. ஜெபமாலை மணிகள் அல்லது புத்தமத “பிரார்த்தனை சக்கரங்கள்” போன்ற சாதனங்களை நம் ஆராதனையில் பயன்படுத்த நமக்கு அதிகாரம் இல்லை. மிக முக்கியமாக, நமது ஜெபங்கள் தேவனுடைய விருப்பத்திற்கு இசைவாக இருக்க வேண்டும் (1 யோவான் 5:14).

நமது ஆராதனையில், நாம் பாட வேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் நமக்குக் கட்டளையிடுகிறார், "சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்" (எபேசியர் 5:19-20). கர்த்தருக்கு ஒருவருக்கொருவர் பாடுவது இசை அமைக்கப்பட்ட சத்தியத்தை வெளிப்படுத்துகிறது (கொலோசெயர் 3:16).

உண்மையான வேதாகம ஆராதனையின் ஒரு பகுதி காணிக்கை கொடுப்பது, பவுல் கொரிந்து சபைக்கு அறிவுறுத்தியது: "பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். நான் வந்திருக்கும்போது பணஞ்சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்” (1 கொரிந்தியர் 16:1-2). கர்த்தருடைய பணிக்கான ஆதரவை நாம் தவறாமல் கொடுப்பது ஒரு முக்கியமான பொறுப்பாகும். கொடுப்பதற்கான வாய்ப்பை ஒரு மகிழ்ச்சியான ஆசீர்வாதமாக பார்க்க வேண்டும், முணுமுணுப்பதற்கான சுமையாக இருக்கும் விஷயமாக அல்ல (2 கொரிந்தியர் 9:7). கூடுதலாக, சபையின் வேலைக்கு நிதியளிப்பதற்கான ஒரே வெளிப்படையான வேதாகம முறை இலவசமாக கொடுப்பதுதான். சபைக்கு வணிகங்களை நடத்துவதற்கும், பிங்கோ பார்ட்டிகளை நடத்துவதற்கும், வீட்டு வாசலில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் அதிகாரம் இல்லை. கிறிஸ்துவின் சபை ஒரு வணிக நிறுவனமாக இருக்கக்கூடாது

இறுதியாக, பிரசங்கமும் போதனையும் உண்மையான வேதாகம ஆராதனையின் முக்கிய காரியங்கள் ஆகும். நம் போதித்தல் வேதாகமமாக மட்டுமே இருக்க வேண்டும், இது விசுவாசிகளை வாழ்க்கை மற்றும் தெய்வபக்திக்கு வளர்ப்பதற்கான ஒரே வழிமுறையாகும் (2 தீமோத்தேயு 3:16-17). தேவபக்தியுள்ள போதகர் அல்லது ஆசிரியர் தேவனுடைய வார்த்தையிலிருந்து மட்டுமே போதிப்பார் மற்றும் தேவனுடைய ஆவியானவரை சார்ந்திருப்பார், அவரைக் கேட்பவர்களின் மனதிலும் இருதயத்திலும் அவருடைய கிரியையைச் செய்வார். பவுல் தீமோத்தேயுவை நினைவூட்டியது போல், “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம் பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு” (2 தீமோத்தேயு 4:2). தேவனுடைய வார்த்தையை ஒரு முக்கிய அங்கமாக சேர்க்காத ஒரு சபைக் கூட்டம் வேதாகம ஆராதனை ஊழியம் அல்ல.

வேதத்தில் உண்மையான ஆராதனை முறையைப் பின்பற்றுவதால், தேவனை மிகுந்த ஆர்வத்துடன் வழிபடுவோம். நம் தேவனை வணங்குவது ஒரு சலிப்பான, உயிரற்ற சடங்கு என்ற எண்ணத்தை நாம் உலகுக்கு தெரிவிக்கக் கூடாது. நாம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டோம். ஆகவே, நம் சிருஷ்டிகரை அவருடைய பிள்ளைகளாகப் போற்றி, அவருடைய பெரும் ஆசிர்வாதங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம். "ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்" (எபிரெயர் 12:28-29).

English



முகப்பு பக்கம்

ஒரு உண்மையான வேதாகம ஆராதனைக் கூட்டத்தில் காணப்படவேண்டியவைகள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries