settings icon
share icon
கேள்வி

ஒருவருக்கு உதவுவதற்கும், உங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒருவரை அனுமதிப்பதற்கும் இடையே எங்கே/எப்படி நீங்கள் வரம்பை வைக்கிறீர்ர்கள்?

பதில்


லூக்கா 6:30, 35-36 ஆகிய வசனங்கள், "உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே." "உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன் கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மைசெய்கிறாரே, ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள்” என்று கூறுகிறது. இந்த வசனங்களும், வேதாகமத்தில் உள்ள பல வசனங்களும், கிறிஸ்தவர்கள் அன்பானவர்களாகவும், இரக்கமுள்ளவர்களாகவும், சுய தியாகம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நமக்குக் கற்பிக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள ஜனங்களின் தேவைகளைப் பார்க்கும்போது, நம் பரலோகத் தகப்பன் இரக்கம் காட்டுவது போல் நம் இதயமும் இரக்கத்தால் நிறைந்திருக்க வேண்டும். எல்லா ஜனங்களுக்கும் காண்பிக்க வேண்டும். "கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது" (சங்கீதம் 145:9).

மற்றவர்களுக்கு தொடர்ந்து கொடுக்கிற இருதயம் இருப்பது சரியானது, மேலும் இந்த அற்புதமான பண்புகளை நம் வாழ்வில் காண்பது தேவனுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இருப்பினும், கொடுக்கல் மற்றும் உதவுதல் என்ற இந்தப் பகுதியில், நமக்கு ஞானமான பகுத்தறிவு இருக்க வேண்டும் என்றும் வேதாகமம் கற்பிக்கிறது (மத்தேயு 10:16). மற்றவர்களுக்கு நம்முடைய நேரத்தையும் பணத்தையும் கொடுக்கும்போது நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில தரங்களை தேவன் நமக்குத் தருகிறார். நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேதாகமம் நமக்குச் சொல்லும் போது, தீங்கு விளைவிக்கும் அளவிற்கு இதைச் செய்வது ஒருபோதும் நோக்கமல்ல. நம்மால் முடிந்ததைச் செய்வது நல்லது, ஆனால் 2 தெசலோனிக்கேயர் 3:10 நமக்கு நினைவூட்டுகிறது, "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது." எந்த ஒரு பொறுப்புணர்ச்சியும் இல்லாத ஒரு பொறுப்பற்ற வாழ்க்கை முறையை வாழ விரும்பும் ஜனங்களும் உள்ளனர். எனவே வரம்புகள் இருக்க வேண்டும்; தேவைப்படும் ஒருவருக்கு நாம் உதவுவோம், ஆனால் அது ஒரு நாள்பட்ட வாழ்க்கை முறை என்று நாம் பார்த்தால், அதைத் தொடர்ந்து ஊக்குவிப்பது தவறு. மற்றவர்களின் மந்தநிலை, சோம்பேறித்தனம் மற்றும் முயற்சியின்மைக்கு பங்களிப்பது அவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். "மனிதனுக்கு ஒரு மீனைக் கொடு, அவன் ஒரு நாள் சாப்பிடுகிறான், அவனுக்கு மீன் பிடிக்கக் கற்றுக் கொடு, அவன் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுகிறான்" என்பது பழைய பழமொழி. ஒருவர் உண்மையாக முயற்சி செய்வதைப் பார்க்கும் வரை, தேவன் எந்த வழியில் வழிநடத்துகிறாரோ, அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

பெரும்பாலும், மற்றவர்களுக்கு உதவ மிகவும் பயனுள்ள வழி, வேதாகம ஆலோசனை, கொள்கைகள் மற்றும் ஊக்கத்தை வழங்க அவர்களுடன் சேர்ந்து வருவது. அவர்கள் செவிசாய்க்கவும் முயற்சி செய்யவும் தயாராக இருந்தால், அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியின் வல்லமையின் மூலம், மற்றவர்களைச் சார்ந்திருக்கும் இந்த முறையை மாற்றியமைக்க முடியும். இது நிச்சயமாக, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியின் தெளிவான விளக்கத்துடன் தொடங்குகிறது, யாருடைய அதிகாரமும் இல்லாமல், இந்த அளவிலான வாழ்க்கை முறை மாற்றங்கள் சாத்தியமில்லை.

நல்ல உக்கிராணக்காரர்களாக இருப்பதைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் தேவன் மீது நம்பிக்கை வைத்து அவரோடு நடக்கும்போது, அவர் நம் தேவைகளை வழங்குவதாக வாக்களிக்கிறார் (பிலிப்பியர் 4:19). கர்த்தர் நமக்கு வழங்குவதை நாம் ஞானமாக பயன்படுத்த வேண்டும். கர்த்தர் நமக்குக் கொடுப்பதில் ஒரு பகுதியை நாம் அவருக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும்; நமது குடும்பங்களின் தேவைகளுக்கு நாம் வழங்க வேண்டும்; மற்றும் நாம் நம்முடைய கட்டணங்களை செலுத்த வேண்டும். நமது நேரத்தை நாம் எவ்வாறு செலவிடுகிறோம் என்பதும் உக்கிராணத்துவத்தில் ஈடுபட்டுள்ளது; ஆராதனை, வேலை மற்றும் குடும்பத்தின் சமநிலை முக்கியமானது. இவை அனைத்தும் உக்கிராணத்துவத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அவை புறக்கணிக்கப்பட முடியாது, எனவே மற்றவர்களுக்கு உதவுவதில் நாம் எப்படி, என்ன செய்ய முடியும் என்ற முடிவில் அவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். பிறருக்குப் பண உதவி செய்வதன் மூலம், நம்முடைய சொந்தக் கடன்கள் மற்றும் பொறுப்புகளைச் சமாளிக்க முடியாமல் போனால், உதவி செய்வதற்கான முயற்சிகளில் நாம் சரியாகச் செயல்படுவதில்லை.

ஜனங்கள் மற்றவர்களைப் பயன்படுத்திக் கொள்ள பல வழிகள் உள்ளன. நாம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் விரும்புகிறாரோ அதை நமக்குக் காண்பிக்கும்படி கேட்பது, இதை ஜெபத்தின் விஷயமாக மாற்றுவது முக்கியம். உண்மையான தேவையை உணர்ந்து, வாய்ப்புக்கும் கவனச்சிதறலுக்கும் இடையே பகுத்தறியும் ஞானத்தை அவர் நமக்குத் தருவார் (யாக்கோபு 1:5). சில நேரங்களில், வாழ்க்கையின் சோதனைகள் மற்றும் தோல்விகளால் ஜனங்கள் மிகவும் தோற்கடிக்கப்படுகிறார்கள், அவர்களுக்கு நீண்ட கால நண்பராக இருக்க விரும்பும் ஒருவர் தேவை. இது ஒரு முயற்சியான உறவாக இருக்கலாம், ஆனால் இது மிகவும் பலனளிக்கும் ஒன்றாகவும் இருக்கலாம். உள்ளூர் திருச்சபைகள் தேவைப்படுபவர்களுக்கு சுமையாக இருப்பவர்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இருப்பினும், இந்த விஷயத்தில் தீர்வை நோக்கி எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இல்லாத ஒருவருக்கு உதவ முயற்சிப்பது நம்பிக்கையற்ற காரணமாக இருக்கலாம். மீண்டும், தேவனுடைய ஞானத்திற்காக ஜெபிப்பதும், அவர் அளிக்கும் பகுத்தறிவைப் பிபயன்படுத்துவதும் இந்தச் சூழ்நிலைகளில் முக்கியமானதாகும்.

English



முகப்பு பக்கம்

ஒருவருக்கு உதவுவதற்கும், உங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒருவரை அனுமதிப்பதற்கும் இடையே எங்கே/எப்படி நீங்கள் வரம்பை வைக்கிறீர்ர்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries