settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ பெண்கள் தலையை முக்காடிட்டுக்கொண்டிருக்க வேண்டுமா?

பதில்


1 கொரிந்தியர் 11:3-16 வரையிலுள்ள வேதப்பகுதி பெண்களின் பிரச்சனையையும் மற்றும் அவர்கள் தங்கள் தலைகலை முக்காடிட்டுக்கொண்டிருக்கக்க வேண்டும் என்பதையும் விவரிக்கிறது. இந்த பத்தியின் சூழல் தேவன் கொடுத்த ஒழுங்கு மற்றும் "கட்டளையின் தொடர்ச்சி" க்கு சமர்ப்பணம் ஆகும். ஒரு பெண் தலையில் முக்காடிட்டு "மூடுதல்" என்பது ஒழுங்கு, தலைமை மற்றும் தேவனுடைய அதிகாரத்தின் விளக்கமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பத்தியின் முக்கிய வசனம் 1 கொரிந்தியர் 11:3, "ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன்." மீதமுள்ள பகுதி இந்த சத்தியத்தின் தாக்கங்களைக் கையாள்கிறது. அதிகாரத்தின் ஒழுங்கு பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன், மனிதன் அல்லது புருஷன் மற்றும் பெண் அல்லது மனைவி. ஒரு விசுவாசமுள்ள கொரிந்திய சபை ஸ்திரீயின் தலையில் முக்காடு அல்லது மறைத்தல் என்பது அவள் தன கணவனின் அதிகாரத்தின் கீழ் இருப்பதையும், அதனால் தேவனுக்கு அடிபணிவதையும் காட்டியது.

10-வது வசனம் சுவாரஸ்யமானது: "ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்." தேவதூதர்களுக்கு ஏன் ஒரு பெண் முக்காடிட்டுக்கொள்வது முக்கியம்? மனிதகுலத்துடனான தேவனின் உறவை தேவதூதர்கள் பார்த்து கற்றுக்கொள்ளுகிறார்கள் என்பதை நாம் அறிவோம் (1 பேதுரு 1:12). ஆகையால், தேவனுடைய அதிகாரத்திற்கு ஒரு பெண் சமர்ப்பிப்பது தேவதூதர்களுக்கு ஒரு உதாரணமாகிறாள். தேவனுக்கு முற்றிலும் அடிபணிந்த பரிசுத்த தேவதூதர்கள், கிறிஸ்துவின் சீடர்களாகிய நாமும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

13 வது வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்காடிட்டுக்கொள்ளுதல் ஒரு துணியாக இருக்கலாம், ஆனால் அது அடுத்த இரண்டு வசனங்களின் அடிப்படையில் ஒரு பெண்ணின் முடியின் நீளத்தையும் குறிக்கலாம்: "புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும், ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே" (1 கொரிந்தியர் 11:14-15). இந்த பத்தியின் பின்னணியில், தலைமுடியை அணிந்திருக்கும் ஒரு பெண் தன்னை ஒரு ஆணாக அல்லாமல் பெண்ணாக தெளிவாகக் குறிப்பிடுகிறாள். அப்போஸ்தலனாகிய பவுல், கொரிந்து பட்டணத்து கலாச்சாரத்தில், மனைவியின் தலைமுடி தன் கணவனை விட நீளமாக இருந்தபோது, அது அவருடைய தலைமைத்துவத்திற்கு அவள் அடிபணிவதைக் காட்டியது. ஆழ்ந்த ஆவிக்குரியப் பாடத்தை சித்தரிப்பதற்காக ஆண் மற்றும் பெண்ணின் பாத்திரங்கள் தேவனால் வடிவமைக்கப்பட்டுள்ளன, அதாவது தேவனுடைய விருப்பத்திற்கும் ஒழுங்கிற்கும் கீழ்ப்படிதல் ஆகும்.

ஆனால் கொரிந்து சபையில் முடி ஏன் ஒரு பிரச்சனையாக இருந்தது? அன்றைய கலாச்சாரத்தில் அதற்குப் பதில் உள்ளது. கொரிந்து நகரில் அன்பின் தேவதையான அப்ரோடைட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவில் இருந்தது, அந்த இடம் சடங்காக ஆசரிக்கும் விபச்சாரத்திற்கு மிகவும் பிரபலமானது. கோவிலில் பணியாற்றிய பெண்கள் தலையை மொட்டையடித்துக்கொண்டனர். கொரிந்து பட்டிணத்து கலாச்சாரத்தில், மொட்டையடித்த தலையுடன் ஒரு பெண் இருப்பது கோவில் விபச்சாரியாகக் குறித்தது. மொட்டையடிக்கப்பட்ட அல்லது தலை ஷேவ் செய்யப்பட்ட ஒரு பெண் சபையில் தன் தலையை முக்காடிட்டு மறைக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார் (1 கொரிந்தியர் 11:6), ஏனெனில் தலைமுடி கத்தரிக்கப்பட்ட ஒரு பெண் தனது "மகிமையை" இழந்தவள் ஆகிறாள், அவள் ஒரு கணவனின் பாதுகாப்பில் இல்லை என்றும் விளங்குகிறது. முக்காடிடப்படாத தலை அல்லது தலை மறைப்பு இல்லாமல் இருப்பது ஒரு செய்தியை அனுப்பியது: "நான் தேவனின் கட்டளைக்கு அடிபணிய மறுக்கிறேன்." எனவே, பவுல் கொரிந்தியர்களுக்கு, முடி நீளம் உள்ள அல்லது பெண் ஒரு முக்காடிட்டு தலையை "மூடுதல்" தேவனுக்கும் அவரது நிறுவப்பட்ட அதிகாரத்திற்கும் சமர்ப்பிப்பதற்கான வெளிப்புற அறிகுறியாகும் என்று கற்பிக்கிறார். கொரிந்து சபை அவர்களைச் சுற்றியுள்ள சீர்கெட்ட அந்நிய கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டுத் தனியாக இருக்க இது ஒரு வழியாகும் (2 கொரிந்தியர் 6:17).

இந்த பத்தியில் பெண் ஆணுக்கு தாழ்ந்தவள் அல்லது அவள் ஒவ்வொரு ஆணுக்கும் அடிபணிந்தவளாக இருக்க வேண்டும் என்று கற்பிக்கவில்லை. இது திருமண உறவில் தேவனின் கட்டளை மற்றும் ஆவிக்குரிய தலைமைத்துவத்தை போதிக்கிறது. கொரிந்து கலாச்சாரத்தில், ஆராதனையின் போது அல்லது பொதுவான கூட்டங்களில் இருக்கும் போது தலையை மூடிக்கொண்டு இருக்கும் ஒரு பெண் கணவனின் அதிகாரத்திற்கு தனது சமர்ப்பணத்தை வெளிப்படுத்தினாள்.

இன்றைய கலாச்சாரத்தில், ஒரு பெண் தலையை மறைப்பதை சமர்ப்பிப்பதற்கான அடையாளமாக நாம் இனி பார்க்க மாட்டோம். பெரும்பாலான நவீன சமுதாயங்களில், தாவணி மற்றும் தொப்பிகள் ஃபேஷன் வகை தலை முக்காடுகள், அதற்கு மேல் எதுவும் இல்லை. இன்றும் ஒரு பெண் தன் கணவனின் அதிகாரத்திற்கு அடிபணிந்ததற்கான அறிகுறியாகக் கருதினால் தலையை மறைக்கும் விருப்பம் உள்ளது. இருப்பினும், இது ஒரு தனிப்பட்ட தேர்வு மட்டுமே ஆகும் மற்றும் ஆவிக்குரிய வாழ்விற்கு ஒரு அடையாளம் அல்ல. உண்மையான பிரச்சினை கீழ்ப்படிதல் மற்றும் "கர்த்தருடைய" அதிகாரத்திற்கு அடிபணிதல் ஆகியவற்றின் இருதய அணுகுமுறையாகும் (எபேசியர் 5:22). தேவன் வெளிப்படையாக தலையை மறைப்பதை விட இருதயத்தில் உள்ள அணுகுமுறையில் அதிகம் அக்கறை காட்டுகிறார்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ பெண்கள் தலையை முக்காடிட்டுக்கொண்டிருக்க வேண்டுமா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries