settings icon
share icon
கேள்வி

சுவிசேஷங்களின் ஒத்திசைவு என்றால் என்ன?

பதில்


சுவிசேஷங்களின் "ஒத்திசைவு" என்பது நான்கு வேதாகம சுவிசேஷங்களின் உடன்பாடு ஆகும். நான்கு புதிய ஏற்பாட்டு சுவிசேஷங்களும் ஒரு நான்கு பகுதி பாடகர் குழுவில் உள்ள பாடகர்களைப் போன்றது. அவை ஒவ்வொன்றும் பாடுவதற்கு ஒரு தனித்துவமான பகுதியைக் கொண்டுள்ளன, ஆனால் பாகங்கள் ஒன்றிணைந்து ஒரு அழகான அமைப்பை உருவாக்குகின்றன. நான்கு நற்செய்தி நூல்களும் ஒவ்வொன்றும் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயேசுவினைக் குறித்த சாட்சியத்தை அளிக்கின்றன, ஆனால் அவை அனைத்தும் ஒரே கதையைச் சொல்கின்றன. இவ்வாறு, அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் ஒத்திசைவாக இருக்கிறார்கள். சுவிசேஷக் கணக்குகளை காலவரிசைப்படி சீரமைக்கும் புத்தகங்கள் நற்செய்தி நூல்களின் ஒத்திசைவுகள் என்று அழைக்கப்படுகின்றன, மேலும் சில வேதாகமங்களும் அதே காரியத்தைச் செய்யும் நற்செய்தி நூல்களின் ஒத்திசைவு என்ற குறிப்புப் பிரிவையும் உள்ளடக்கியுள்ளது.

மத்தேயு, மாற்கு மற்றும் லூக்கா ஆகியோர் எழுதின சுவிசேஷ புத்தகங்கள் "சமான" சுவிசேஷ புத்தகங்கள் என்று அழைக்கப்படுகின்றன, ஏனென்றால் அவை இயேசுவின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல நிகழ்வுகளை உள்ளடக்கியது (சினோப்டிக் (synoptic) என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒன்றாக காணுதல்"). மற்ற சுவிசேஷ புத்தகங்களுக்கு விட்டுச்செல்லும் இடைவெளிகளை நிரப்புகிற வகையில் யோவான் எழுதின சுவிசேஷம் தன்னிச்சையாக நிற்கிறது. இந்த நற்செய்தி நூல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு பார்வையாளர்களுக்காக எழுதப்பட்டது மற்றும் இயேசுவின் ஊழியத்தின் வெவ்வேறு அம்சங்களை இவை வலியுறுத்துகின்றன. மத்தேயு நற்செய்தி முதன்மையாக யூதர்களுக்காக எழுதப்பட்டது மற்றும் ஒரு ராஜரீக மேசியாவின் தீர்க்கதரிசனங்களை இயேசு எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை வலியுறுத்துகிறது. மாற்கு முதன்மையாக ரோமர்கள் அல்லது புறஜாதிய கிறிஸ்தவர்களுக்காக எழுதப்பட்டது, எனவே இது சில பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை உள்ளடக்கியது மற்றும் பல யூத வார்த்தைகள் மற்றும் பழக்கவழக்கங்களை விளக்குகிறது. இயேசு மார்க்கில் தெய்வீக ஊழியராக சித்தரிக்கப்படுகிறார். லூக்கா முதன்மையாக புறஜாதி விசுவாசிகளுக்காக எழுதப்பட்டது, எனவே இது பழைய ஏற்பாட்டின் ஒரு சில தீர்க்கதரிசனங்களை மட்டும் மேற்கோள் காண்பித்து கூடுதலாக யூத பழக்கவழக்கங்களை விளக்குகிறது மற்றும் கிரேக்க பெயர்களைப் பயன்படுத்துகிறது. லூக்கா இயேசுவின் வாழ்க்கையின் ஒரு முறையான ஒழுங்கில் அவரது ஜீவசரிதையை எழுதத் தொடங்கி மற்றும் இயேசுவை மனுஷகுமாரனாக முன்வைத்து, அவருடைய முழு மனிதத்தன்மையையும் வலியுறுத்தி கூறினார். யோவானின் நற்செய்தி இயேசுவை தேவனுடைய குமாரன் என்று வலியுறுத்துகிறது மற்றும் மற்ற நற்செய்தி நூல்களை விட தம்மைப் பற்றிய இயேசுவின் வெளிப்பாடுகளை உள்ளடக்கியது. இது இயேசுவின் கடைசி நாட்களில் நடந்த நிகழ்வுகளின் விரிவான சித்திரத்தையும் தருகிறது.

நற்செய்தி நூல்களில் கூறப்பட்டுள்ள விவரிப்புகளில் முரண்பாடுகளைக் காட்டுவதன் மூலம் சிலர் வேதாகமத்தை அவமதிக்க முயன்றனர். நிகழ்வுகள் வழங்கப்பட்ட வரிசையில் உள்ள வேறுபாடுகளை அல்லது அந்த நிகழ்வுகளுக்குள் மாறுபடுகிறதாக தோன்றுகிற சிறிய விவரங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நான்கு கணக்குகளும் அருகருகே வைக்கப்படும் போது, அவை அனைத்தும் ஒரே குறிப்பிட்ட காலவரிசையைப் பின்பற்றுவதில்லை என்பதைக் காண்கிறோம். ஏனென்றால், பெரும்பாலான நிகழ்வுகள் தலைப்புகளின் வரிசையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன, இதிலுள்ள நிகழ்வுகள் ஒத்த கருப்பொருளுக்கு ஏற்ப தொகுக்கப்படுகின்றன. நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு நாளும் உரையாடலைத் தொடர்வதுதான் இந்த தலைப்பு அணுகுமுறை.

கிறிஸ்துவின் கல்லறையில் தேவதூதர்களின் எண்ணிக்கை எத்தனை போன்ற சிறிய விவரங்களில் உள்ள வேறுபாடுகள் (மத்தேயு 28:5; மாற்கு 16:5; லூக்கா 24:4; யோவான் 20:12), வேதாகம உரை தன்னைப் பேச அனுமதிப்பதன் மூலம் பதிலளிக்கப்படுகிறது. மத்தேயு மற்றும் மாற்கு "ஒரு தேவதூதன்" என்று குறிப்பிடுகிறார்கள், அதே நேரத்தில் லூக்காவும் யோவானும் இரண்டு தேவதூதர்களைக் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும், மத்தேயுவும் மாற்கும் ஒரு தேவதூதன் மட்டுமே இருப்பதாக சொல்லவில்லை; அங்கே ஒரு தேவதூதன் இருப்பதாகச் சொல்கிறார்கள். இத்தகைய வேறுபாடுகள் நிரப்பக்கூடியவை தான், முரண்பாடானவை அல்ல. புதிய தகவல்கள் சேர்க்கப்படலாம், ஆனால் பழைய தகவலின் உண்மைத்தன்மையை அது ஒருபோதும் மறுக்காது.

வேதத்தின் மற்ற பகுதிகளைப் போலவே, நான்கு சுவிசேஷங்களும் மனிதனுக்கு தேவன் வெளிப்படுத்தியதற்கான ஒரு அழகான சாட்சியாகும். ஆயக்காரன் (மத்தேயு), பயிற்சியற்ற பாதியில் கைவிட்டுப்போன ஒரு யூத இளைஞன் (மாற்கு), ஒரு ரோம மருத்துவர் (லூக்கா) மற்றும் ஒரு யூத மீனவன் (யோவான்) ஆகியோர் இயேசுவின் வாழ்க்கையின் ஒத்திசைவான சாட்சிகளை எழுதுவதை கற்பனை செய்து பாருங்கள். தேவனுடைய தலையீடு இல்லாமல், இந்த அற்புதமான துல்லியமான கணக்குகளை அவர்கள் எழுதியிருக்க வழி இல்லை (2 தீமோத்தேயு 3:16). வரலாறு, தீர்க்கதரிசனம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து இயேசுவின் மிகச்சிறந்த துல்லியமான சித்திரத்தை உருவாக்குகின்றன—மேசியா, ராஜா, வேலைக்காரன் மற்றும் தேவனுடைய குமாரன்.

English



முகப்பு பக்கம்

சுவிசேஷங்களின் ஒத்திசைவு என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries