settings icon
share icon
கேள்வி

சுவிசேஷ செய்தியின் அத்தியாவசியங்கள் என்ன?

பதில்


"சுவிசேஷம்" என்ற வார்த்தைக்கு "நற்செய்தி" என்று பொருள், அது இயேசு கிறிஸ்துவின் பிராயச்சித்தக் கிரியையின் மூலம் பாவ மன்னிப்புக்கான செய்தியாக சிறந்த முறையில் வரையறுக்கப்படுகிறது. இது ஒரு தேவனுடைய மீட்பின் திட்டமாகும், இது அவருடைய தெய்வீக குமாரனை நம்புவோருக்கு ஒரு நீதியுள்ள மற்றும் பரிசுத்தமான தேவனுடன் ஒப்புரவாக்குதல் ஆகும். இந்த இரட்சிக்கிற செய்தியின் அத்தியாவசிய உள்ளடக்கம் வேதாகமத்தில் நமக்கு தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

கொரிந்தியர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய முதல் கடிதத்தில், அவர் சுவிசேஷ செய்தியின் உள்ளடக்கத்தை விவரிக்கிறார், “அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள் நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பப்பட்டார்” (1 கொரிந்தியர் 15:1-4).

இந்த வேதப்பகுதியில், சுவிசேஷ செய்தியின் மூன்று முக்கிய கூறுகளை நாம் காண்கிறோம். முதலில், "நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்" என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமானது. ரோமர் 3:23 நமக்குச் சொல்வது போல், "எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகிப்போனோம்." பாவத்தின் யதார்த்தத்தை இரட்சிப்புக்காக தேவனுடைய சிங்காசனத்தை அணுகும் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். பாவமன்னிப்பு பெற தேவனுக்கு முன்பாக தனது குற்றத்தின் தன்மையை ஒரு பாவி ஒப்புக்கொள்ள வேண்டும், மேலும் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும் (ரோமர் 6:23). இந்த அடிப்படை சத்தியம் இல்லாமல், எந்த நற்செய்தி விளக்கமும் முழுமையடையாது.

இரண்டாவதாக, கிறிஸ்து என்னும் நபரும் அவரது கிரியையும் நற்செய்தியின் இன்றியமையாத கூறுகள் ஆகும். இயேசு தேவன் (கொலோசெயர் 2:9) மற்றும் மனிதன் ஆவார் (யோவான் 1:14). நம்மால் ஒருபோதும் வாழ முடியாத பாவமற்ற வாழ்க்கையை இயேசு வாழ்ந்தார் (1 பேதுரு 2:22) மற்றும் அவர் மட்டுமே பாவிக்கு மாற்றாக மரிக்க முடியும். எல்லையற்ற தேவனுக்கு எதிரான பாவத்திற்கு எல்லையற்ற பலி தேவைப்படுகிறது. எனவே, வரையறுக்கப்பட்ட ஒரு மனிதன், நரகத்தில் எல்லையற்ற காலத்திற்கும் அபராதம் செலுத்த வேண்டும், அல்லது எல்லையற்ற கிறிஸ்து ஒரு முறை அதை செலுத்த வேண்டும். நம்முடைய பாவத்திற்காக தேவனுக்கு நாம் செலுத்த வேண்டிய விலைக்கிரயத்தை செலுத்த இயேசு சிலுவைக்குச் சென்றார், அவருடைய பலியால் மூடப்பட்டவர்கள் தேவனுடைய ராஜ்யத்தை ராஜாவின் பிள்ளைகளாக பெறுவார்கள் (யோவான் 1:12).

மூன்றாவதாக, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நற்செய்தியின் ஓர் இன்றியமையாத அம்சமாகும். உயிர்த்தெழுதல் தேவனுடைய வல்லமைக்கு சான்று. ஜீவனை உருவாக்கியவர் மட்டுமே மரணத்திற்குப் பிறகு அதை உயிர்ப்பிக்க முடியும், அவரால் மட்டுமே மரணத்தின் கொடூரத்தை மாற்ற முடியும், மேலும் அவரால் மட்டுமே மரணம் மற்றும் கல்லறையின் வெற்றியை அடைய முடியும் (1 கொரிந்தியர் 15:54-55). மேலும், மற்ற எல்லா மதங்களையும் போலல்லாமல், கிறிஸ்தவம் மரணத்தை வென்று வெற்றிவாகை சூடிய ஒரு ஸ்தாபகர் மற்றும் அவருடைய சீஷர்கள் அதையே செய்வார்கள் என்று உறுதியளிக்கின்றார். மற்ற எல்லா மதங்களும் மனிதர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் நிறுவப்பட்டன, அதன் முடிவு கல்லறையாக இருந்தது.

இறுதியாக, கிறிஸ்து தனது இரட்சிப்பை ஒரு இலவச பரிசாக வழங்குகிறார் (ரோமர் 5:15; 6:23) இது நம் பாகத்தில் உள்ள எந்த கிரியை அல்லது தகுதியைத் தவிர, விசுவாசத்தால் மட்டுமே நாம் பெற முடியும் (எபேசியர் 2:8-9). அப்போஸ்தலனாகிய பவுல் நமக்குச் சொல்வது போல், "...முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது" (ரோமர் 1:16). அதே உந்தப்பட்ட எழுத்தாளர் நம்மிடம் கூறுகிறார், "கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்" (ரோமர் 10:9).

இவைதான் நற்செய்தியின் இன்றியமையாத கூறுகள்: எல்லா மனிதர்களின் பாவம், அந்தப் பாவங்களுக்குப் பரிகாரமாக கிறிஸ்துவின் சிலுவை மரணம், அவரைப் பின்பற்றுபவர்களுக்கு நித்திய ஜீவனை வழங்க கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மற்றும் அனைவருக்கும் இரட்சிப்பின் இலவச ஈவு.

English



முகப்பு பக்கம்

சுவிசேஷ செய்தியின் அத்தியாவசியங்கள் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries