settings icon
share icon
கேள்வி

நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே பாவத்தைச் செய்தால் தேவன் உங்களை மன்னிப்பாரா?

பதில்


இந்த கேள்விக்கான சிறந்த பதிலை அளிக்க, நாம் வேதத்தின் இரண்டு சக்திவாய்ந்த வேதப்பகுதிகளைப் பார்க்கப் போகிறோம். முதல் வேதப்பகுதி சங்கீத புத்தகத்தில் காணப்படுகிறது: "மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்" (சங்கீதம் 103:12). கிறிஸ்தவர்கள் மீது சாத்தான் செய்யும் மிகச் சிறந்த தந்திரங்களில் ஒன்று, தேவனுடைய வார்த்தையில் தெளிவாக வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், நம் பாவங்கள் உண்மையில் மன்னிக்கப்படவில்லை என்பதை நமக்கு உணர்த்துவதாகும். நாம் உண்மையிலேயே இயேசுவை இரட்சகராக விசுவாசத்தால் பெற்றிருந்தால், உண்மையான மன்னிப்பு இருக்கிறதா இல்லையா என்று யோசித்து அந்த சங்கடமான உணர்வு இருந்தால், அது பிசாசின் தாக்கங்களிலிருந்து வந்திருக்கலாம் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். மக்கள் தங்கள் பிடியிலிருந்து விடுபடும்போது பிசாசுகள் அவர்களை வெறுக்கின்றன, மேலும் நம் இரட்சிப்பின் உண்மைத்தன்மை பற்றி நம் மனதில் சந்தேக விதைகளை விதைக்க முயற்சிக்கின்றன. அவனுடைய பரந்த தந்திரங்களில், சாத்தானின் மிகப்பெரிய கருவிகளில் ஒன்று, நமது கடந்த கால மீறுதல்களை தொடர்ந்து நமக்கு நினைவூட்டுவதாகும், மேலும் தேவன் நம்மை மன்னிக்கவோ அல்லது மீட்கவோ முடியாது என்பதை நிரூபிக்க அவன் அவற்றைப் பயன்படுத்துகிறான். பிசாசின் தாக்குதல்கள் தேவனுடைய வாக்குறுதிகளில் நிலைத்திருப்பது மற்றும் அவருடைய அன்பை நம்புவது நமக்கு ஒரு உண்மையான சவாலாக அமைகிறது.

ஆனால் இந்த சங்கீதம் தேவன் நம் பாவங்களை மன்னிப்பது மட்டுமல்லாமல், அவற்றை அவருடைய சமுகத்தில் இருந்து முற்றிலும் நீக்குகிறார் என்றும் சொல்கிறது. இது ஒரு ஆழமான விஷயம்! எவ்வித கேள்வியும் இல்லாமல், மெய்யாகவே இது மனிதர்களுக்குப் புரிந்துகொள்வது கடினமான கருத்தாகும், அதனால்தான் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக கவலைப்படுவது மற்றும் ஆச்சரியப்படுவது நமக்கு மிகவும் எளிதானதாக இருக்கிறது. நாம் வெறுமனே சந்தேகங்களையும் குற்ற உணர்ச்சிகளையும் கொண்டிருப்பதை கைவிடுவதும், அவருடைய மன்னிப்பின் வாக்குறுதிகளில் நிலைத்திருப்பதும் மிக முக்கியமாகும்.

மற்றொரு வேதப்பகுதி 1 யோவான் 1:9, "நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்." என்ன ஒரு நம்பமுடியாத வாக்குறுதி! தேவனிடத்தில் அவருடைய பிள்ளைகள் தாங்கள் பாவம் செய்யும்போது சென்றால் தேவன் அவர்களை மன்னிக்கிறார், அவர்கள் அவரிடம் மனந்திரும்பிய மனப்பான்மையுடன் வந்து மன்னிக்கும்படி கேட்கவேண்டும். தேவனுடைய கிருபை மிகவும் பெரியது, அது பாவியின் பாவத்திலிருந்து அவனை சுத்தப்படுத்த முடியும், அதனால் அவன் தேவனுடைய பிள்ளையாகிறான். நாம் தடுமாறும்போது கூட, நாம் இன்னும் மன்னிக்கப்படலாம்.

மத்தேயு 18: 21-22 இல் நாம் வாசிக்கிறோம், "அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து, ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.'” அவர் மிகவும் தாராளமாக இருப்பதாக பேதுரு நினைத்திருக்கலாம். தனக்கு எதிராக பாவம் செய்த ஒரு நபருக்கு சமமான பழிவாங்கலுடன் திருப்பிச் செலுத்துவதற்குப் பதிலாக, பேதுரு அந்த சகோதரருக்கு ஏழு முறை வரை மன்னிப்பதற்கு சில சலுகைகளைக் கொடுக்க பரிந்துரைத்தார். ஆனால் எட்டாவது முறை, மன்னிப்பு மற்றும் கருணை தீர்ந்துவிடும். ஆனால், மன்னிப்பு உண்மையிலேயே தேடுவோருக்கு எல்லையற்றது என்று கூறி, பேதுரு பரிந்துரைத்த கிருபையின் பொருளாதாரத்தின் விதிகளை கிறிஸ்து சவால் செய்தார். சிலுவையில் கிறிஸ்துவின் சிந்தப்பட்ட இரத்தத்தின் மூலம் சாத்தியமான தேவனுடைய எல்லையற்ற கிருபையால் மட்டுமே இது சாத்தியமாகும். கிறிஸ்துவின் மன்னிக்கும் வல்லமை காரணமாக, நாம் தேவனுடைய மன்னிப்பைத் தாழ்மையுடன் நாடினால், நாம் பாவம் செய்தபிறகு எப்போதும் சுத்தமாக முடியும்.

அதே சமயத்தில், ஒரு நபர் தொடர்ந்து பழக்கவழக்கமாக அதனை ஒரு வாழ்க்கைமுறையாக பாவம் செய்வது மற்றும் அதேவேளையில் ஒரு விசுவாசியாக இருப்பது வேதாகமத்தின்படியானது அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் (1 யோவான் 3:8-9). இதனால்தான் பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார் “நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்” (2 கொரிந்தியர் 13:5). கிறிஸ்தவர்களாக, நாம் தடுமாறுகிறோம், ஆனால் நாம் தொடர்ச்சியான, மனந்திரும்பாத பாவத்தின் வாழ்க்கை முறையை வாழ்வதில்லை. நம் அனைவருக்கும் பலவீனங்கள் உள்ளன, நாம் விரும்பாவிட்டாலும், பாவத்தில் விழலாம். அப்போஸ்தலனாகிய பவுல் கூட அவன் சரீரத்தில் கிரியை செய்யும் பாவத்தின் காரணமாக அவன் செய்ய விரும்பாத பாவத்தைச் செய்தான் (ரோமர் 7:15). பவுலைப் போலவே, விசுவாசியின் பதிலும் பாவத்தை வெறுப்பது, அதிலிருந்து மனந்திரும்புவது மற்றும் அதை வெல்வதற்கு தெய்வீக கிருபையைக் கேட்பது (ரோமர் 7:24-25). தேவனுடைய போதுமான கிருபையின் காரணமாக நாம் வீழ்ச்சியடையத் தேவையில்லை என்றாலும், சில சமயங்களில் நாம் நமது போதிய பலத்தை நம்பியிருப்பதால் பாவம் செய்கிறோம். நம் நம்பிக்கை பலவீனமடையும் போது, பேதுருவைப் போல, நாம் நம் கர்த்தரை வார்த்தையிலோ அல்லது வாழ்க்கையிலோ மறுக்கிறோம், அப்போதும் கூட மனந்திரும்பவும், நம் பாவத்திலிருந்து மன்னிக்கப்படவும் ஒரு வாய்ப்பு உள்ளது.

சாத்தானின் மற்றொரு தந்திரம் என்னவென்றால், நம்பிக்கை இழந்து, நம்மை மன்னிக்கவும், குணப்படுத்தவும், மீட்கவும் சாத்தியமில்லை என்று நினைக்க வைப்பது ஆகும். தேவனுடைய மன்னிப்புக்கு நாம் இனி தகுதியற்றவர்களாக உணரக்கூடாது என்பதற்காக அவன் நம்மை குற்ற உணர்ச்சியில் சிக்க வைப்பான். ஆனால், தேவனுடைய கிருபைக்கு நாம் எப்போதே தகுதியானவர்கள்? தேவன் நம்மை நேசித்தார், நம்மை மன்னித்தார் மற்றும் அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டார் (எபேசியர் 1:4-6), நாம் செய்த ஒன்றின் காரணமாக அல்ல, ஆனால் “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்" (எபேசியர் 1:12). தேவனுடைய கிருபையால் அணுகமுடியாத இடம் ஒன்று இல்லை, ஆம் நாம் செல்லதத்தக்க அப்படி ஒரு இடம் இல்லை என்பதையும், தேவன் நம்மை இனி வெளியே இழுக்க முடியாதபடிக்கு எந்த ஆழமும் இல்லை என்பதையும் நாம் எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். அவருடைய கிருபை நம் பாவங்கள் அனைத்தையும் விட பெரியது. நாம் வழிதவறத் தொடங்கினாலும் அல்லது நாம் ஏற்கனவே நம் பாவத்தில் மூழ்கி போயிருந்தாலும், கிருபையைப் பெற முடியும்.

கிருபை என்பது தேவனுடைய ஈவு (எபேசியர் 2:8). நாம் பாவம் செய்யும்போது, ஆவியானவர் பாவத்தை நமக்கு உணர்த்துவார், அதனால் ஒரு தெய்வீக துக்கம் ஏற்படும் (2 கொரிந்தியர் 7:10-11). நம்பிக்கை இல்லாதது போல் அவர் நம் ஆத்துமாவை கண்டிக்க மாட்டார், ஏனென்றால் கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு இனி எந்த ஆக்கினைத்தீர்ப்பும் இல்லை (ரோமர் 8:1). நமக்குள் உள்ள ஆவியின் நம்பிக்கை அன்பு மற்றும் கிருபையின் இயக்கம். கிருபை பாவத்திற்கு ஒரு சாக்குபோக்கு அல்ல (ரோமர் 6:1-2), அது துஷ்பிரயோகம் செய்யத் துணியாது, அதாவது பாவம் "பாவம்" என்று அழைக்கப்பட வேண்டும், மேலும் அது பாதிப்பில்லாதது அல்லது பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருத முடியாது. மனந்திரும்பாத விசுவாசிகள் அன்புடன் எதிர்கொள்ளப்பட்டு அதிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு வழிகாட்டப்பட வேண்டும், மேலும் அவிசுவாசிகள் மனந்திரும்ப வேண்டும் என்று சொல்லப்பட வேண்டும். ஆயினும் நாமும் பரிகாரத்தை வலியுறுத்துவோம், ஏனென்றால் நமக்கு கிருபையின் மேல் கிருபை கொடுக்கப்பட்டுள்ளது (யோவான் 1:16). கிருபை என்பது நாம் எப்படி வாழ்கிறோம், எப்படி இரட்சிக்கப்படுகிறோம், எப்படி பரிசுத்தமாக்கப்படுகிறோம், நாம் எப்படி வைக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுவோம் என்பதாகும். நாம் பாவம் செய்யும்போது அதிலிருந்து மனந்திரும்பி தேவனிடம் நம் பாவத்தை ஒப்புக்கொண்டு கிருபையைப் பெறுவோம். தேவனுடைய பார்வையில் கிறிஸ்து நம்மை முழுமையாகவும் சரியாகவும் செய்ய முன்வருகையில், ஏன் பாவமான வாழ்க்கையை வாழ வேண்டும்?

English



முகப்பு பக்கம்

நீங்கள் மீண்டும் மீண்டும் ஒரே பாவத்தைச் செய்தால் தேவன் உங்களை மன்னிப்பாரா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries