settings icon
share icon
கேள்வி

கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுதல் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


நற்செய்தி நூல்களில் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்), "என்னைப் பின்பற்றி வா" என்ற இயேசுவின் கட்டளை மீண்டும் மீண்டும் தோன்றுகிறது (எ.கா, மத்தேயு 8:22; 9:9, மாற்கு 2:14; லூக்கா 5:27; யோவான் 1:43). பல சந்தர்ப்பங்களில், இயேசு தம்முடைய சீடர்களாக மாறும் பன்னிரண்டு பேரை அழைத்தார் (மத்தேயு 10:3-4). ஆனால் மற்ற சமயங்களில், அவர் வழங்கியதை யார் விரும்பினார்களோ அவர்களுடன் பேசினார் (யோவான் 3:16; மாற்கு 8:34).

மத்தேயு 10:34-39 இல், இயேசு தம்மைப் பின்பற்றுவதன் அர்த்தம் என்ன என்பதை தெளிவாகக் கூறினார். அவர் சொன்னார், "பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்து போவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.."

இயேசு ஒரு "வாளை" கொண்டுவந்து, குடும்ப உறுப்பினர்களை ஒருவருக்கொருவர் எதிராகத் திருப்புவது, "அவரை விசுவாசிக்கிறவான் எவனோ அவன் கெட்டுப்போவதில்லை" (யோவான் 3:16) போன்ற வார்த்தைகளுக்குப் பிறகு கொஞ்சம் கடுமையாகத் தோன்றலாம். ஆனால் இயேசு ஒருபோதும் சத்தியத்தை மென்மையாக்கவில்லை, சத்தியம் என்னவென்றால், அவரைப் பின்பற்றுவது கடினமான தேர்வுகளுக்கு வழிவகுக்கிறது. சில நேரங்களில் மனந்திரும்புவது மிகவும் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம். இயேசுவின் போதனை அருட்கொடைகளிலிருந்து (மத்தேயு 5:3-11) வரவிருக்கும் சிலுவைக்குச் சென்றபோது, அவரைப் பின்பற்றிய பலர் விலகிச் சென்றனர் (யோவான் 6:66). அவர் கைது செய்யப்பட்ட இரவில் இயேசுவைப் பின்தொடர்வது மிகவும் கடினம் என்று சீடர்கள் கூட முடிவு செய்தனர். அவர்களில் ஒவ்வொருவரும் அவரை விட்டு விலகினார்கள் (மத்தேயு 26:56; மாற்கு 14:50). அந்த இரவில், கிறிஸ்துவைப் பின்பற்றுவது என்பது சாத்தியமான கைது மற்றும் மரணதண்டனை. தன்னுடைய ஜீவனைப் பணயம் வைப்பதற்குப் பதிலாக, பேதுரு இயேசுவை மூன்று முறை அவரை அறிந்திருக்கவில்லை என்று மறுதலித்தார் (மத்தேயு 26:69-75).

கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுவதென்றால் அவர் நமக்கு எல்லாமுமாகிவிட்டார். எல்லோரும் எதையாவது பின்பற்றுகிறார்கள்: நண்பர்கள், பிரபலமான கலாச்சாரம், குடும்பம், சுயநல ஆசைகள் அல்லது தேவன். நாம் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே பின்பற்ற முடியும் (மத்தேயு 6:24). அவருக்கு முன்பாக வேறு தெய்வங்கள் நமக்கு இருக்கக்கூடாது என்று தேவன் கூறுகிறார் (யாத்திராகமம் 20:3; உபாகமம் 5:7; மாற்கு 12:30). கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுவதென்றால் நாம் வேறு எதையும் பின்பற்றக்கூடாது. லூக்கா 9:23 ல் இயேசு சொன்னார், "ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை அனுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்." "பாதிவழி சீடன்" என்று எதுவும் இல்லை. சீஷர்கள் விளங்கப்பண்ணினபடி, ஒருவராலும் கிறிஸ்துவைப் பின்பற்ற முடியாது. தங்கள் சொந்த பலத்தில் தேவனுக்குக் கீழ்ப்படிய முயற்சித்தவர்களுக்கு பரிசேயர்கள் சிறந்த எடுத்துக்காட்டுகள். அவர்களின் சுயமுயற்சி தேவனுடைய பிரமாணத்தின் முழு நோக்கத்தையும் ஆணவத்திற்கும் சிதைப்பதற்கும் வழிவகுத்தது (லூக்கா 11:39; மத்தேயு 23:24).

இயேசு தம்மை உண்மையாகப் பின்பற்றுவதற்கான இரகசியத்தை சீடர்களுக்குக் கொடுத்தார், ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. அவர் கூறினார், "ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது” (யோவான் 6:63). மேலும் "ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார்" (வசனம் 65). சீடர்கள் மூன்று வருடங்கள் இயேசுவோடு நடந்து, கற்று, கவனித்து, அவருடைய அற்புதங்களில் பங்கு பெற்றனர். ஆனாலும், அவர்களால் கூட தங்கள் சொந்த பலத்தில் அவரை உண்மையாக பின்பற்ற முடியவில்லை. அவர்களுக்கு உதவியாளர் தேவைப்பட்டார்.

தாம் பிதாவினிடத்தில் ஏறிச் சென்றவுடன், அவர்களுக்கு ஒரு "தேற்றரவாளரை" அனுப்புவேன் என்று இயேசு பலமுறை வாக்குறுதி அளித்தார் — பரிசுத்த ஆவியானவர் (யோவான் 14:26; 15:26). உண்மையில், அவர் பரிசுத்த ஆவியானவர் வருவதற்காக, அவர்களுடைய நன்மைக்காகவே அவர் போகிறார் என்று அவர்களிடம் கூறினார் (யோவான் 16:7). பரிசுத்த ஆவியானவர் ஒவ்வொரு விசுவாசியின் இருதயத்திலும் குடியிருக்கிறார் (கலாத்தியர் 2:20; ரோமர் 8:16; எபிரெயர் 13:5; மத்தேயு 28:20). இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை எச்சரித்தார், "உன்னத்ததிலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும்" அவர்கள் அவரைப் பற்றி சாட்சியமளிக்க வேண்டாம் (லூக்கா 24:49; அப்போஸ்தலர் 1:4). பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவர் அந்த முதல் விசுவாசிகள் மீது வந்தபோது, அவர்கள் திடீரென்று கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்குத் தேவையான அனைத்து பெலனையும் பெற்றனர், தேவைப்பட்டால் மரிக்கவும் கூடத் தயாராக இருந்தனர் (அப். 2:1-4; 4:31; 7:59-60).

இயேசுவைப் பின்பற்றுவது என்பது அவரைப் போல் இருக்க முயற்சி செய்வதாகும். அவர் எப்பொழுதும் தம்முடைய பிதாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தார், அதனால் நாம் அதைச் செய்ய முயற்சி செய்கிறோம் (யோவான் 8:29; 15:10). கிறிஸ்துவை உண்மையாகப் பின்பற்றுவதென்றால், அவரை எஜமானராக்குவதாகும். இயேசுவை நம் வாழ்வின் கர்த்தராக ஆக்குவதன் அர்த்தம் இதுதான் (ரோமர் 10:9; 1 கொரிந்தியர் 12:3; 2 கொரிந்தியர் 4:5). எல்லாவற்றிலும் அவரை மகிமைப்படுத்தும் குறிக்கோளுடன் ஒவ்வொரு முடிவும் கனவும் அவருடைய வார்த்தையின் மூலம் வடிகட்டப்படுகிறது (1 கொரிந்தியர் 10:31). கிறிஸ்துவுக்காக நாம் செய்யும் காரியங்களால் நாம் இரட்சிக்கப்படுவதில்லை (எபேசியர் 2:8-9) ஆனால் அவர் நமக்காகச் செய்ததன் மூலம். அவருடைய கிருபையின் காரணமாக, எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்த விரும்புகிறோம். நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பரிசுத்த ஆவியானவர் முழுமையான கட்டுப்பாட்டை வைத்திருக்க நாம் அனுமதிப்பதால் இவை அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன (எபேசியர் 5:18). அவர் வேதவசனங்களை விளக்குகிறார் (1 கொரிந்தியர் 2:14), ஆவிக்குரிய வரங்களால் நம்மை பலப்படுத்துகிறார் (1 கொரிந்தியர் 12:4-11), நம்மை ஆறுதல்படுத்துகிறார் (யோவான் 14:16), நம்மை வழிநடத்துகிறார் (யோவான் 14:26). கிறிஸ்துவைப் பின்பற்றுவதென்றால், அவருடைய வார்த்தையிலிருந்து நாம் கற்றுக்கொண்ட சத்தியங்களைப் பின்பற்றி, இயேசு நமக்குப் பக்கத்தில் நேரில் நடந்ததைப் போல வாழ்வோம்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுதல் என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries