settings icon
share icon
கேள்வி

தேவனுக்குப் பயப்படுதல் என்றால் என்ன?

பதில்


அவிசுவாசிக்கு, தேவனுக்குப் பயப்படுவது என்பது தேவனுடைய நியாயத்தீர்ப்பிற்கு மற்றும் நித்திய மரணத்திற்கு, அதாவது தேவனிடமிருந்து நித்தியமான பிரிவினைக்கு பயப்படுதல் ஆகும் (லூக்கா 12:5; எபிரெயர் 10:31). விசுவாசிக்கு, தேவனுக்கு பயப்படுதல் என்பது மிகவும் வித்தியாசமானது ஆகும். விசுவாசியின் பயம் தேவனுக்குப் பயபக்தியுடன் உள்ளதாகும். எபிரேயர் 12: 28-29 வரையிலுள்ள வசனங்கள் இதற்கு ஒரு நல்ல விளக்கம் அளிக்கிறது: “ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.” இந்த பயபக்தியும் வியப்பும் தான் கிறிஸ்தவர்களுக்கு தேவனுக்குப் பயப்படுதல் என்பதன் பொருள் ஆகும். இது இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகருக்கு சரணடைவதற்கு ஒரு உந்துதல் காரணியாக இருக்கிறது.

நீதிமொழிகள் 1:7 இவ்வாறு விளம்புகிறது: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.” தேவன் யார் என்பதை நாம் புரிந்துகொண்டு அவருக்கு பயபக்தியாக இருக்கும் சுபாவத்தை வளர்த்துக்கொள்ளும் வரையில் உண்மையான ஞானம் நமக்கு இருக்காது. உண்மையான ஞானம் தேவன் யார் என்று புரிந்துகொள்ளுதலில் இருக்கிறது, அதாவது அவர் பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், மற்றும் நீதிபரர் என்பதாலேயே வருகிறது. உபாகமம் 10:12, 20-21 குறிப்பிடுகிறது, “இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.” தேவனுக்கு பயப்படுகிற பயம் அவரது வழிகளில் நடந்து, அவரைச் சேவித்து, ஆம், அவரில் அன்பு கூறுவதற்கு அடிஸ்தானமாக இருக்கிறது.

சிலர் விசுவாசிகளுக்கு தேவனுக்குப் பயப்படுதல் என்பது அவருக்கு "மரியாதை" செலுத்தவேண்டும் என்று புதிய வரையறையைக் கொண்டுவருகிறார்கள். தேவனுக்குப் பயப்படுங்காரியத்தில் மரியாதை நிச்சயமாக உட்பட்டிருக்கிறது என்கிறபோதிலும், அதை விட இன்னும் அதிகமாக அதில் உள்ளது. ஒரு வேதாகம தேவ பயம், விசுவாசிக்கு, தேவன் எந்த அளவிற்கு பாவத்தை வெறுக்கிறார் மற்றும் பாவத்தின் மீதுள்ள அவரது நியாயத்தீர்ப்புக்கு அஞ்சுதல் ஆகும் – இது ஒரு விசுவாசி வாழ்க்கையில் கூட பொருந்தும். எபிரெயர் 12:5-11-ல், விசுவாசியை தேவன் சிட்சை அளித்து திருத்துகிற செயலை விவரிக்கிறது. இது அன்பில் செய்யப்படும் போதும்கூட (எபிரெயர் 12:6), அது இன்னும் ஒரு பயமான காரியமாக இருக்கிறது. பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து ஒழுக்க நடவடிக்கை எடுக்கும்போது, இருக்கிற பயம் அவர்களை சில தீய செயல்களை செய்வதிலிருந்து தடுக்கிறது என்பதில் சந்தேகமில்லை. தேவனோடு நமக்குள்ள உறவில் இதுவே உண்மையாயிருக்கிறது. அவருடைய சிட்சைக்கு நாம் பயந்து, அவரைப் பிரியப்படுத்தும் விதத்தில் நம் வாழ்க்கையை வாழ முயலவேண்டும்.

விசுவாசிகள் தேவனைக்கண்டு திகிலடைவதில்லை. அவரைக்கண்டு நாம் திகிலடவைதற்கு ஒரு காரணமும் இல்லை. அவருடைய அன்பிலிருந்து எதுவும் நம்மை பிரிக்க முடியாது என்கிற அவருடைய வாக்குறுதியைப் பெற்றுள்ளோம் (ரோமர் 8:38-39). அவர் நம்மை ஒருபோதும் விட்டு விலகமாட்டார் அல்லது நம்மைக் கைவிட மாட்டார் என்கிற அவருடைய வாக்குறுதியைப் பெற்றிருக்கிறோம் (எபிரெயர் 13:5). தேவனுக்குப் பயப்படுவது என்பது, நாம் அவர்மேல் கொண்டிருக்கிற பயம், நம் வாழ்வை நாம் வாழ்கிற விதத்தில் அது பெரும் பாதிப்பைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. தேவனுக்கு பயப்படுகிற பயம் அவருக்கு மரியாதையையும், அவருக்கு கீழ்ப்படிந்து இருப்பதையும், அவரது சீர்பொருந்தும் ஒழுக்க நடவடிக்கைக்கு பரிபூரணமாக சமர்ப்பித்ததையும், மற்றும் பிரமிப்பில் அவரை வணங்கி நமஸ்கரிப்பதையும் காண்பிக்கிறது.

English



முகப்பு பக்கம்

தேவனுக்குப் பயப்படுதல் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries