settings icon
share icon
கேள்வி

கடைசிக் காலங்களின் கள்ளத்தீர்க்கதரிசி யார்?

பதில்


கடைசிக் காலங்களின் கள்ளத்தீர்க்கதரிசி குறித்து வெளிப்படுத்துதல் 13:11-15 இல் விவரிக்கப்பட்டுள்ளது. அவன் "இரண்டாவது மிருகம்" என்றும் குறிப்பிடப்படுகிறான் (வெளிப்படுத்துதல் 16:13, 19:20, 20:10). அந்திக்கிறிஸ்து மற்றும் சாத்தானுடன் சேர்ந்து, அவர்கள் இருவரையும் அதிகாரம் செய்கிற, கள்ளத்தீர்க்கதரிசி அசுத்தமான திரித்துவத்தில் மூன்றாவது நபர் ஆவான்.

அப்போஸ்தலனாகிய யோவான் இந்த நபரை விவரிக்கிறார் மற்றும் அவன் வரும்போது அவனை அடையாளம் காண்பதற்கான குறிப்புகளை நமக்கு அளிக்கிறார். முதலில், அவன் பூமியிலிருந்து வெளியே வருகிறான். இதன் பொருள் அவன் நரகத்தின் குழியிலிருந்து நரகத்தின் அனைத்து சாத்தானிய சக்திகளுடனும் அவனது கட்டளைப்படியும் வருகிறவனாய் இருக்கிறான். அந்திக்கிறிஸ்துவின் வலது கையாக உலக அரங்கில் தோன்றி வெளிப்படும் வரை அவன் இரகசியமான மற்றும் அறியப்படாத தாழ்ந்த சூழ்நிலைகளில் இருந்து வருகிறவன் என்றும் அர்த்தம். அவன் ஒரு வலுசர்ப்பத்தைப் போல பேசுகையில், ஆட்டுக்குட்டியைப் போல கொம்புகளைக் கொண்டவனாக சித்தரிக்கப்படுகிறான். ஆட்டுக்குட்டியின் கொம்புகள் ஆடாக வளரும் வரை ஆட்டுக்குட்டிகளின் கொம்புகள் அதன் தலையில் சிறியவைகள் மட்டுமே. அந்திக்கிறிஸ்துவின் தலைகள் மற்றும் கொம்புகளின் பன்முகத்தன்மையைக் காட்டிலும், தனது சக்தியையும் வலிமையையும், கடுமையான தன்மையையும் காட்டிலும், கள்ளத்தீர்க்கதரிசி மற்றவர்களிடமிருந்து அனுதாபத்தையும் நல்லெண்ணத்தையும் வெளிப்படுத்தும் தூண்டுதலான வார்த்தைகளுடன் ஒரு ஆட்டுக்குட்டியைப் போல சாந்தமாக வருகிறான். அவன் ஒரு அசாதாரண பிரசங்கியாகவோ அல்லது பேச்சாளனாகவோ இருக்கலாம், அவனுடைய சாத்தானிய அதிகாரம் பெற்ற வார்த்தைகள் மக்களை வெகுவாய் ஏமாற்றும். ஆனால் அவன் ஒரு வலுசர்ப்பத்தைப் போல பேசுகிறான், அதாவது அவனது செய்தி ஒரு வலுசர்ப்பத்தின் செய்தியாகும். வெளிப்படுத்தல் 12:9 பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் என்று அடையாளம் காட்டுகிறது.

வசனம் 12 பூமியில் கள்ளத்தீர்க்கதரிசியின் பணியை நமக்கு வழங்குகிறது, இவன் மனிதகுலத்தை அந்திக்கிறிஸ்துவை வணங்க கட்டாயப்படுத்துவான். அந்திக்கிறிஸ்துவின் அனைத்து அதிகாரமும் அவனிடம் உள்ளது, ஏனெனில் அவனைப் போலவே, கள்ளத்தீர்க்கதரிசியும் சாத்தானால் அதிகாரம் பெற்றவன். அந்திக்கிறிஸ்துவை ஆராதிக்கும்படிக்கு மக்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்களா அல்லது இந்த சக்திவாய்ந்த உயிரினங்கள் மூலமாக அவர்கள் ஈர்க்கப்பட்டிருக்கிறார்களா என்பது தெளிவாக இல்லை, அவர்கள் ஏமாற்றத்தில் விழுந்து அவநை விருப்பத்துடன் ஆராதிக்கிறார்கள். இரண்டின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட இரண்டாவது மிருகம் அடையாளங்களையும் அற்புதங்களையும் அதிசயங்களையும், வானத்திலிருந்து வரும் அக்கினி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துகிறது என்பது மக்கள் அவர்களுடைய வல்லமையையும் செய்தியையும் அங்கீகரித்து ஆராதிப்பதில் மக்கள் தங்கள் முன்பாக விழுந்துவிடுவார்கள் என்பதைக் குறிக்கிறது. 14 ஆம் வசனம், வஞ்சித்தல் மிக அதிகமாக இருக்கும் என்று கூறுகிறது, அந்திக்கிறிஸ்துவுக்கு மக்கள் சிலை அமைத்து ஆராதிப்பார்கள். இது நேபுகாத்நேச்சரின் (தானியேல் 3) பெரிய பொற்சிலையை நினைவூட்டுகிறது, அதற்கு முன்பாக அனைவரும் வீழ்ந்து வணங்கி மரியாதை செலுத்த வேண்டும். வெளிப்படுத்துதல் 14:9-11, எனினும், அந்திக்கிறிஸ்துவின் உருவத்தை ஆராதிப்பவர்களுக்கு காத்திருக்கும் கொடூரமான விதியை விவரிக்கிறது.

மகா உபத்திரவத்தின் பயங்கரத்திலிருந்து தப்பிப்பிழைப்பவர்கள் இரண்டு கடினமான தேர்வுகளை எதிர்கொள்வார்கள். மிருகத்தின் உருவத்தை வணங்க மறுப்பவர்கள் மரணத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் (வசனம் 15), அதேசமயம் அவனை வணங்குபவர்கள் தேவனுடைய கோபத்திற்கு ஆளாக நேரிடும். அந்திக்கிறிஸ்துவின் சொரூபம் அசாதாரணமாக இருக்கும், அதனால் "பேச" முடியும். அதன் அர்த்தம் அது உயிர்பெற்று வரும் என்பதல்ல—இங்குள்ள நியூமா என்னும் கிரேக்க வார்த்தை "மூச்சு" அல்லது "உயிரோட்ட" காற்று என்று பொருள்படும், பயோஸ் ("ஜீவன்") என்ற வார்த்தை அல்ல—ஆனால் அது அந்திக்கிறிஸ்து மற்றும் கள்ளத்தீர்க்கதரிசியின் செய்தியைக் கொண்டுள்ள ஒருவித திறனைக் கொண்டிருக்கும் என்று அர்த்தமாகும். அவர்களுக்கான செய்தித் தொடர்பாளராக இருப்பதுடன், அசுத்த திரித்துவத்தை ஆராதிக்க மறுப்பவர்களை மரண தண்டனைக்கு உட்படுத்தும். நாம் உள்ள இந்த தொழில்நுட்ப உலகில், இதுபோன்ற ஒரு சூழ்நிலையை கற்பனை செய்வது அவ்வளவு கடினமானது அல்ல.

கள்ளத்தீர்க்கதரிசி யாராக மாறினாலும், கடைசி உலக வஞ்சித்தலும் கடைசி விசுவாச துரோகமும் பெரியதாக இருக்கும், மேலும் உலகம் முழுவதும் அதில் சிக்கிவிடும். இன்று நாம் காணும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் கள்ளப்போதகர்கள் அந்திக்கிறிஸ்து மற்றும் கள்ளத்தீர்க்கதரிசியின் முன்னோடிகள் ஆகும், அவர்களால் நாம் ஏமாற்றப்பட்டுவிடக்கூடாது. இந்த கள்ளப்போதகர்கள் ஏராளம், அவர்கள் நம்மை கடைசி சாத்தானிய ராஜ்யத்தை நோக்கி நகர்த்துகிறார்கள். இயேசு கிறிஸ்துவின் இரட்சிக்கும் நற்செய்தியை நாம் உண்மையாக அறிவிக்க வேண்டும் மற்றும் வரவிருக்கும் பேரழிவிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்களின் ஆத்துமாக்களை மீட்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

கடைசிக் காலங்களின் கள்ளத்தீர்க்கதரிசி யார்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries