settings icon
share icon
கேள்வி

கலாச்சார சார்பியல்வாதம் என்றால் என்ன?

பதில்


கலாச்சார சார்பியல்வாதம் என்பது அனைத்து விதமான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவை தனிநபரின் சொந்த சமூக சூழலுக்குள் தொடர்புடையவை என்னும் பார்வையாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், "சரி" மற்றும் "தவறு" ஆகியவை கலாச்சாரம் சார்ந்தவை; ஒரு சமூகத்தில் தார்மீகமாகக் கருதப்படுவது மற்றொரு சமூகத்தில் ஒழுக்கக்கேடானதாகக் கருதப்படலாம், மேலும், உலகளாவிய ஒழுக்க நெறிகள் எதுவும் இல்லாததால், மற்றொரு சமூகத்தின் பழக்கவழக்கங்களை சரியில்லை என்று நியாயந்தீர்ப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

நவீன மானுடவியலில் கலாச்சார சார்பியல்வாதம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. கலாச்சார சார்பியல்வாதிகள் அனைத்து கலாச்சாரங்களும் தங்கள் சொந்த உரிமைக்கு தகுதியானவை மற்றும் சமமான மதிப்பு கொண்டவை என்று நம்புகிறார்கள். கலாச்சாரங்களின் பன்முகத்தன்மை, முரண்பட்ட தார்மீக நம்பிக்கைகளைக் கொண்டவை கூட, சரி மற்றும் தவறு அல்லது நல்லது மற்றும் கெட்டது ஆகியவற்றின் அடிப்படையில் கருதப்படக்கூடாது. இன்றைய மானுடவியலாளர் அனைத்து கலாச்சாரங்களையும் மனித இருப்பின் சமமான சட்டபூர்வமான வெளிப்பாடுகள் என்று கருதுகிறார், அது முற்றிலும் நடுநிலையான கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

கலாச்சார சார்பியல்வாதம் நெறிமுறை சார்பியல்வாதத்துடன் நெருக்கமாக தொடர்புடையது, இது சத்தியத்தை மாறக்கூடியது மற்றும் முழுமையானது அல்ல என்று காண்கிறது. எது சரி எது தவறு என்பது தனிமனிதனால் அல்லது சமூகத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. சத்தியம் என்பது புறநிலை அல்ல என்பதால், அனைத்து கலாச்சாரங்களுக்கும் பொருந்தும் புறநிலை தரநிலை எதுவும் இவற்றிற்கு இருக்க முடியாது. வேறொருவர் சரியா தவறா என்று யாரும் சொல்ல முடியாது; இது தனிப்பட்ட கருத்து, எந்த சமூகமும் மற்றொரு சமூகத்தின் மீது நியாயத்தீர்ப்பு வழங்க முடியாது.

கலாச்சார சார்பியல்வாதம் எந்தவொரு கலாச்சார வெளிப்பாட்டிலும் உள்ளார்ந்த தவறு (மற்றும் உள்ளார்ந்த நல்லது) எதையும் பார்க்கவில்லை. எனவே, பழங்கால மாயன்களின் சுய சிதைவு மற்றும் மனித பலி ஆகியவை நல்லவை அல்லது கெட்டவை அல்ல; ஜூலை நான்காம் தேதி சுடும் வானவேடிக்கைகளை நிகழ்த்தும் அமெரிக்க வழக்கத்திற்கு ஒப்பான கலாச்சார தனித்தன்மைகள் அவை. மனித பலி மற்றும் வானவேடிக்கை - இரண்டும் தனித்தனி சமூகமயமாக்கலின் வெவ்வேறு தயாரிப்புகள்.

ஜனவரி 2002 இல், ஜனாதிபதி புஷ் பயங்கரவாத நாடுகளை "தீமையின் அச்சு" என்று குறிப்பிட்டபோது, கலாச்சார சார்பியல்வாதிகள் நொந்து போனார்கள். எந்தவொரு சமூகமும் மற்றொரு சமூகத்தை "தீயது" என்று அழைப்பது சார்பியல்வாதிகளுக்கு வெறுப்பு. தீவிரவாத இஸ்லாத்தை "புரிந்துகொள்வதற்கான" தற்போதைய இயக்கம் - அதை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக - சார்பியல்வாதம் லாபம் ஈட்டுகிறது என்பதற்கான அறிகுறியாகும். கலாச்சார சார்பியல்வாதி, மேற்கத்தியர்கள் தங்கள் கருத்துக்களை இஸ்லாமிய உலகில் திணிக்கக்கூடாது என்று நம்புகிறார், இதில் பொதுமக்களின் தற்கொலை குண்டுவெடிப்பு தீயது. மேற்கத்திய நாகரிகத்தின் மீதான நம்பிக்கையைப் போலவே ஜிஹாத்தின் அவசியத்தில் இஸ்லாமிய நம்பிக்கையும் செல்லுபடியாகும், என்று சார்பியல்வாதிகள் வலியுறுத்துகின்றனர், மேலும் 9/11 தாக்குதல்களுக்கு பயங்கரவாதிகளைப் போலவே அமெரிக்காவும் குற்றம் சாட்டுகிறது.

கலாச்சார சார்பியல்வாதிகள் பொதுவாக மிஷனரி பணியை எதிர்க்கிறார்கள். நற்செய்தி இருதயங்களில் ஊடுருவி வாழ்க்கையை மாற்றும் போது, சில கலாச்சார மாற்றங்கள் எப்போதும் பின்பற்றப்படுகின்றன. உதாரணமாக, டான் மற்றும் கரோல் ரிச்சர்ட்சன் 1962 இல் நெதர்லாந்தின் நியூ கினியாவின் சாவி பழங்குடியினருக்கு சுவிசேஷம் அறிவித்தபோது, சாவி பழங்குடியினர் மாற்றம் அடைந்தார்கள்: குறிப்பாக, அவர்கள் நீண்ட காலமாக நரமாமிசம் உண்ணுதல் மற்றும் விதவைகளை தங்கள் கணவர்களின் இறுதிச் சடங்குகளில் எரித்தல் ஆகியவற்றைக் கைவிட்டனர். கலாச்சார சார்பியல்வாதிகள் ரிச்சர்ட்சன் மற்றும் அவரது துணைவியாரை கலாச்சார ஏகாதிபத்தியத்திற்காக குற்றம் சாட்டலாம், ஆனால் நரமாமிசத்தை முடிவுக்கு கொண்டுவருவது ஒரு நல்ல விஷயம் என்று உலகின் பெரும்பாலானோர் ஒப்புக்கொள்வார்கள். (சாவிகளின் மனமாற்றத்தின் முழுமையான கதை மற்றும் கலாச்சார சீர்திருத்தம் பற்றிய விளக்கத்திற்கு, டான் ரிச்சர்ட்சனின் சமாதானக் குழந்தை (Peace Child) என்னும் புத்தகத்தைப் பார்க்கவும்.)

கிறிஸ்தவர்களாக, கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து ஜனங்களையும் நாம் மதிக்கிறோம், ஏனென்றால் எல்லா ஜனங்களும் தேவனுடைய சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம் (ஆதியாகமம் 1:27). கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை ஒரு அழகான விஷயம் என்பதையும், உணவு, உடை, மொழி போன்றவற்றில் உள்ள வேறுபாடுகள் பாதுகாக்கப்பட்டு பாராட்டப்பட வேண்டும் என்பதையும் நாம் அங்கீகரிக்கிறோம். அதே நேரத்தில், பாவத்தின் காரணமாக, ஒரு கலாச்சாரத்தில் உள்ள அனைத்து விதமான நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள் தெய்வீக அல்லது கலாச்சார ரீதியாக நன்மை பயக்காது என்பதையும் நாம் அறிவோம். சாத்தியமானது அகநிலையில் நமக்குத் தோன்றுவது அல்ல (யோவான் 17:17); மாறாக சத்தியம் முழுமையானது, மேலும் ஒவ்வொரு கலாச்சாரத்தின் அனைத்து ஜனங்களும் பொறுப்புக்கூற வேண்டிய ஒரு தார்மீக தரநிலையைக் கொண்டுள்ளது (வெளிப்படுத்துதல் 20:11-12).

மிஷனரிகளாகிய நமது குறிக்கோள் உலகை மேற்கத்தியமயமாக்குவது அல்ல. மாறாக, கிறிஸ்துவினுடைய இரட்சிப்பின் நற்செய்தியை உலகுக்குக் கொண்டு செல்வதாகும். தேவனுடைய தார்மீக நெறிமுறைகளுக்கு எதிரான எந்த சமூகமும் மாறும் அளவிற்கு நற்செய்தியின் செய்தி சமூக சீர்திருத்தத்தை தூண்டும் - உருவ வழிபாடு, பலதார மணம் மற்றும் அடிமைத்தனம், எடுத்துக்காட்டாக, தேவனுடைய வார்த்தை மேலோங்கும்போது முடிவுக்கு வரும் (அப்போஸ்தலர் 19 ஐப் பார்க்கவும்). தார்மீக பிரச்சினைகளில், மிஷனரிகள் தாங்கள் சேவை செய்யும் ஜனங்களின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் மதிக்கவும் முயல்கிறார்கள்.

English



முகப்பு பக்கம்

கலாச்சார சார்பியல்வாதம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries