settings icon
share icon
கேள்வி

மறுபிறப்படைந்த கிறிஸ்தவன் என்பதன் அர்த்தம் என்ன?

பதில்


மறுபிறப்படைந்த கிறிஸ்தவன் என்பதன் அர்த்தம் என்ன? என்றால் என்ன? வேதாகமத்தில் இந்த கேள்விக்கு பதில் தருகிற ஒரு உன்னதமான பகுதிதான் யோவான் 3: 1-21 வரையிலுள்ள வசனங்கள். சனகெரிப் சங்கத்தின் (யூதர்களின் ஆளும் குழு) உறுப்பினர் மற்றும் சமூகத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிக்கோதேமு என்னும் பரிசேயனிடம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பேசுகிறார். இந்த நிக்கோதேமு இராக்காலத்தில் இயேசுவிடம் சில கேள்விகளோடு வந்திருந்தார்.

நிக்கோதேமுவுடன் இயேசு பேசிகொண்டிருந்த வேளையில் அவனுக்குப் பிரதியுத்தரமாக: “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்” என்று கூறினார் (யோவான் 3: 3-7).

"மறுபடியும் பிறத்தல்" என்னும் சொற்றொடரின் எழுத்தியியல் பிரகாரமான அர்த்தம் "மேலே இருந்து பிறத்தல்" என்பதாகும். நிக்கோதேமுவுக்கு உண்மையான தேவை இருந்தது. மாற்றம் அடைந்த ஒரு இருதயம் அவருடைய தேவையாயிருந்தது, அதாவது ஒரு ஆவிக்குரிய மாற்றம். புதிய பிறப்பு, மறுபடியும் பிறத்தல் போன்றவை விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை பகிர்ந்தளிக்கிற ஒரு தேவனுடைய செயலாக இருக்கிறது (2 கொரிந்தியர் 5:17; தீத்து 3: 5; 1 பேதுரு 1: 3; 1 யோவான் 2:29; 3: 9; 4: 7; 5:1-4, 18). யோவான் 1:12, 13 ஆகிய வசனங்கள், "மறுபடியும் பிறப்பது" என்பது இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்மேல் நம்பிக்கை வைப்பதன் மூலம் "தேவனுடைய பிள்ளைகளாக" மாறுகிற கருத்தை காண்பிக்கிறதாக இருக்கிறது.

"ஏன் மீண்டும் ஒரு மனிதன் பிறக்க வேண்டும்?" என்கிற தர்க்கரீதியான கேள்வி வருகிறது. அப்போஸ்தலனாகிய பவுல் எபேசியர் 2: 1ல் “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” என்று கூறுகிறார். “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களானார்கள்” (ரோமர் 3:23) என ரோமர்களுக்கு அவர் எழுதினார். பாவிகள் யாவரும் ஆவிக்குரிய நிலையில் "மரித்தவர்கள்"; கிறிஸ்துவை விசுவாசித்து ஆவிக்குரிய வாழ்வைப் பெறுகையில், மறுபிறப்பு அடைந்ததற்கு துல்லியமாக வேதாகமம் அதை ஒப்பிடுகிறது. மறுபடியும் பிறந்தவர்கள் மட்டும்தான் தேவனாலே தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டும் அவரோடு நல்லுறவிலும் இருக்கமுடியும்.

அது எப்படி சாத்தியமாகிறது? எபேசியர் 2: 8-9 கூறுகிறது: “கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமை பாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல.” ஒருவர் இரட்சிக்கப்படுகிறபோது, அவர் (ஆணோ பெண்ணோ) மறுபடியும் பிறந்தவராகிறார், ஆவிக்குரிய நிலையில் புதுப்பிக்கப்பட்டு, புதிய பிறப்பின் மூலம் இப்பொழுது தேவனுடைய பிள்ளையாக இருக்கிறார். பாவத்தின் தண்டனைக்குரிய விலையை தமது சிலுவை மரணத்தினால் செலுத்தி முடித்திருக்கிற இயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை வைக்கும் செயல் தான் அவர்கள் மறுபடியும் பிறந்ததற்கு முகாந்தரமாய் இருக்கிறது. “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” (2 கொரிந்தியர் 5:17).

ஒருவேளை நீங்கள் இன்னும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்து அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், இப்பொழுது உங்கள் உள்ளத்தில் உங்களோடு பேசிக்கொண்டிருக்கிற பரிசுத்த ஆவியானவருடைய சத்தத்திற்கு செவிகொடுத்து சற்று சிந்தித்துப் பார்ப்பீர்களா? நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. நீங்கள் கிறிஸ்துவில் ஒரு புதிய சிருஷ்டியாக மாறும் மனந்திரும்புதலின் ஜெபத்தை இன்று ஏறெடுப்பீர்களா? “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” (யோவான் 1) : 12-13).

நீங்கள் இயேசு கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும், மறுபடியும் பிறக்க வேண்டுமென்றும் விரும்பினால், நீங்கள் ஜெபிக்க வேண்டிய ஒரு மாதிரி ஜெபம் இதோ. நீங்கள் ஜெபிக்கிற இந்த ஜெபமோ அல்லது இதுபோன்ற மற்ற ஜெபங்களோ உங்களை இரட்சிப்பது இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவில் நீங்கள் வைக்கிற நம்பிக்கை மட்டுமே உங்களை உங்கள் பாவங்களிலிருந்து இரட்சிக்கும். அவர்மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கை மற்றும் அவரால் நீங்கள் பெற்றிருக்கிற இரட்சிப்பை வெளிப்படுத்துகிற ஒரு செயல் தான் இந்த ஜெபம். "ஆண்டவரே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்திருக்கிறேன் என்றும் அதினிமித்தம் பாவத்திற்கான தண்டனையை அடைவதற்கு பாத்திரமாய் இருக்கிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து அவரில் நான் மன்னிப்பை பெறத்தக்கதாக நான் அடையவேண்டிய தண்டனையை அவர் ஏற்றுக்கொண்டார் எனவும் அறிந்திருக்கிறேன். இரட்சிப்பிற்காக உம்மில் எனது பரிபூரண நமிக்கையை வைக்கிறேன். ஈவாகிய நித்திய ஜீவனுக்காக நீர் காண்பித்திருக்கிற அற்புதமான கிருபைக்காகவும் மன்னிப்பிற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன்! ஆமென்!"

நீங்கள் இங்கே வாசித்த காரியங்கள் நிமித்தம் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வதற்கு தீர்மானித்திருக்கிறீர்களா? அப்படியானால், கீழேயுள்ள “கிறிஸ்துவை நான் இன்று ஏற்றுக்கொண்டிருக்கிறேன்” என்கிற பொத்தானை அழுத்தவும்.

English



முகப்பு பக்கம்

மறுபிறப்படைந்த கிறிஸ்தவன் என்பதன் அர்த்தம் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries