settings icon
share icon
கேள்வி

உடன்படிக்கைப் பெட்டிக்கு என்ன ஆனது?

பதில்


உடன்படிக்கைப் பெட்டிக்கு என்ன நேர்ந்தது என்கிற காரியம் இறையியலாளர்கள், வேதாகம மாணாக்கர்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை பல நூற்றாண்டுகளாக கவர்ந்த ஒரு கேள்வியாகும். யூதாவின் ராஜாவாகிய யோசியா தனது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், உடன்படிக்கைப் பெட்டியைக் கவனிப்பவர்களுக்கு அதை எருசலேமில் உள்ள ஆலயத்திற்கு திருப்பித் தரும்படி கட்டளையிட்டார் (2 நாளாகமம் 35:1-6; 2 ராஜா. 23:21-23). இதுதான் உடன்படிக்கைப்பெட்டியின் இருப்பிடம் வேதவசனங்களில் குறிப்பிடப்பட்ட கடைசி முறையாகும். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, பாபிலோனின் மாமன்னன் நேபுகாத்நேச்சார் எருசலேமைக் கைப்பற்றி ஆலயத்தை சோதனை செய்தார். அதன்பிறகு பத்து வருடங்களுக்குள், அவன் மீண்டுமாய் எருசலேம் திரும்பி வந்து, தேவாலயத்தில் எஞ்சியிருந்தவற்றை எடுத்துக்கொண்டு, பின்னர் நகரத்தை தீயினால் தரைமட்டமாக சுட்டெரித்தார். எனவே உடன்படிக்கைப்பெட்டிக்கு என்ன ஆனது? இது நேபுகாத்நேச்சரால் எடுக்கப்பட்டதா? அல்லது அது நகரத்துடன் சேர்ந்து தீயினால் அழிக்கப்பட்டதா? சாலமோனின் குமாரன் ரெகொபெயாமின் ஆட்சிக் காலத்தில் எகிப்தைச் சேர்ந்த பார்வோன் ஷிஷாக் தேவாலயத்தில் சோதனை நடத்தியபோது நடந்ததைப் போல, அது அகற்றப்பட்டு பாதுகாப்பாக மறைக்கப்பட்டதா? (“வெளிப்படையாக” ஏனென்றால், ஷிஷாக் ஒருவேளை உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துச் சென்றிருந்தால், அதை திருப்பித் தரும்படி யோசியா லேவியர்களிடம் ஏன் கேட்கவேண்டும்? உடன்படிக்கைப் பெட்டி எகிப்தில் இருந்திருந்தால், இழந்துபோன உடன்படிக்கைப் பேட்டியின் ரைடர்ஸின் கதைக்களம் - லேவியர்கள் அதை வைத்திருக்க மாட்டார்கள், எனவே அதை திருப்பி தந்திருக்க முடியாது.)

தள்ளுபடியாகம நியமனமற்ற-புத்தகம் 2 மக்காபியர்கள், பாபிலோனிய படையெடுப்பிற்கு சற்று முன்பு, எரேமியா, “ஒரு தெய்வீக வெளிப்பாட்டைத் தொடர்ந்து, ஆசரிப்புக்கூடாரமும் உடன்படிக்கைப் பெட்டியும் தன்னுடன் வர வேண்டும் என்று கட்டளையிட்டார்... தேவன் வாக்குப்பண்ணின சுதந்தரத்தைக் காணும்படி மோசே ஏறிச்சென்ற மலைக்குச் சென்றார் [அதாவது நேபோ மலையில்மேல்; உபாகமம் 34:1]. எரேமியா அங்கு வந்தபோது, ஒரு குகையில் ஒரு அறையைக் கண்டார், அதில் கூடாரம், உடன்படிக்கைப் பெட்டி, தூப பீடம் ஆகியவற்றை வைத்தார்; பின்னர் அவர் நுழைவாயிலை மூடினார்” (2:4-5). இருப்பினும், “அவரைப் பின்தொடர்ந்தவர்களில் சிலர் பாதையைக் குறிக்க எண்ணம் கொண்டு வந்தார்கள், ஆனால் அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதைக் கேட்ட எரேமியா அவர்களைக் கடிந்துகொண்டார்: ‘தேவன் தம் ஜனங்களை மீண்டும் ஒன்றுகூட்டி அவர்களுக்கு இரக்கம் காட்டும் வரை அந்த இடம் அறியப்படாமல் இருக்க வேண்டும். கர்த்தர் இவற்றை வெளிப்படுத்துவார், மோசேயின் காலத்திலும், ஆலயம் மகிமையுடன் பரிசுத்தப்படுத்தப்பட வேண்டும் என்று சாலமோன் ஜெபித்தபோதும், கர்த்தருடைய மகிமை மேகத்தில் காணப்படும்” (2: 6-8). இந்த இரண்டாம்பட்ச கணக்கு துல்லியமாக இருக்கிறதா என்று தெரியவில்லை (2: 1 ஐக் காண்க); அது இருந்தாலும், அந்த கணக்கு விவரம் கூறுவதுபோல் மீண்டும் கர்த்தர் திரும்பி வரும் வரை நமக்குத் தெரியாது.

காணாமல்போன உடன்படிக்கைப் பெட்டி இருக்கும் இடத்தைப் பற்றிய பிற கோட்பாடுகள், ரபீக்கள் ஸ்லோமோ கோரன் மற்றும் யெஹுதா கெட்ஸ் ஆகியோர் தேவாலய மலையின் அடியில் மறைந்திருப்பதாகக் கூறுகின்றனர், நேபுகாத்நேச்சார் அதைக் கொள்ளையாக கொண்டுபோவதற்கு முன்பு அங்கேயே புதைத்து விட்டார். துரதிர்ஷ்டவசமாக, தேவாலயம் இருந்த மலை இப்போது இஸ்லாமிய புனித தளமான டோம் ஆஃப் தி ராக் அமைந்துள்ளது, உள்ளூர் முஸ்லீம் சமூகம் அதை அகழ்வாராய்ச்சி செய்ய மறுக்கிறது. எனவே ரபீக்கள் கோரனும் கெட்ஸும் கூறும் காரியங்கள் சரியானவைகளா என்பதை நாம் அறிய முடியாது.

ஆய்வுப்பயணம் செய்பவராகிய வெண்டில் ஜோன்ஸ், சவக்கடல் சுருள்களில் காணப்படும் ஒரு கலைப்பொருள், கும்ரான் குகை 3 இன் புதிரான “செப்புச் சுருள்” உண்மையில் பாபிலோனியர்கள் எருசலேமிற்கு வருவதற்கு முன்பு தேவாலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பல விலைமதிப்பற்ற பொக்கிஷங்களின் இருப்பிடத்தை விவரிக்கும் வகையான புதையல் வரைபடம் என்றும் அவர்கள் கண்டுபிடிக்க முடியாமல் இழந்தவைகளில் உடன்படிக்கைப் பெட்டியும் அடங்கும் என்று நம்புகிறார்கள். சுருளில் பட்டியலிடப்பட்டுள்ள தேவையான அனைத்து புவியியல் அடையாளங்களையும் இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால் இது உண்மையா இல்லையா என்பதை ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். சுவாரஸ்யமாக, சில அறிஞர்கள் செப்புச் சுருள் உண்மையில் 2 மக்காபியர்கள் 2:1 மற்றும் 4 இல் குறிப்பிடப்பட்டுள்ள பதிவாக இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர், இது எரேமியா உடன்படிக்கைப்பெட்டியை மறைத்து வைத்திருப்பதை விவரிக்கிறது. இது ஒரு சுவாரஸ்யமான ஊகம் என்றாலும், இது ஆதாரமற்றதாக இருக்கிறது.

"தி எகனாமிஸ்ட்" -ன் முன்னாள் கிழக்கு ஆபிரிக்க நிருபர் கிரஹாம் ஹான்காக் 1992-ல் தி சைன் அண்ட் தி சீல்: இழந்த உடன்படிக்கைப் பெட்டியின் தேடல், என்னும் தலைப்புள்ள புத்தகத்தை பிரசுரம் செய்தார், அதில் எத்தியோப்பியாவின் பண்டைய நகரமான அக்சூமில் உள்ள செயிண்ட் மேரியின் சீயோன் திருச்சபை என்ற இடத்தில் உடன்படிக்கைப் பெட்டி வைக்கப்பட்டிருப்பதாக அவர் வாதிட்டார். ராபர்ட் கார்னூக்கின் B.A.S.E கல்வி நிறுவனம், உடன்படிக்கைப் பெட்டி இப்போது அக்சூமில் இருக்கக்கூடும் என்று நம்புகிறது. இருப்பினும், இதுவரை யாரும் அதை அங்கு கண்டுபிடிக்கவில்லை. இதேபோல், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் மைக்கேல் சாண்டர்ஸ், இஸ்ரவேலர்களின் கிராமமான டிஜஹார்யாவில் உள்ள ஒரு பண்டைய எகிப்திய கோவிலில் உடன்படிக்கைப் பெட்டி மறைந்திருப்பதாக நம்புகிறார், ஆனால் அவர் உண்மையில் அதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

சந்தேகத்திற்குரிய அயர்லாந்தைச் சார்ந்த பாரம்பரியம், உடன்படிக்கைப் பெட்டி அயர்லாந்தில் தாரா மலையின் கீழ் புதைக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. சில அறிஞர்கள் இது அயர்லாந்தின் “வானவில்லின் முடிவில் தங்கப் பானை” என்னும் புராணத்தின் ஆதாரம் என்று நம்புகிறார்கள். ரான் வியாட் மற்றும் டாம் க்ரோட்சர் ஆகியோரின் கூற்றுக்கள் இன்னும் குறைவாக நம்பக்கூடியவைகளாக இருக்கின்றன, வியாட் கல்வாரி மலையின் கீழ் புதைக்கப்பட்ட இழந்துபோன உடன்படிக்கைப் பெட்டியை உண்மையில் பார்த்ததாகக் கூறுகிறார் மற்றும் க்ரோட்சர் இதை நேபோ மலையின் அருகிலுள்ள பிஸ்கா மலையில் இதைப் பார்த்ததாகக் கூறுகின்றனர். இந்த இரண்டு பேரும் தொல்பொருள் சமூகத்தால் குறைந்த மதிப்பில் வைக்கப்பட்டுள்ளனர், மேலும் எந்தவொரு ஆதாரங்களுடனும் மேற்கோள்காட்டி உரிமைகோரல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.

இறுதியில், உடன்படிக்கைப் பெட்டியானது தேவனைத் தவிர மற்ற அனைவருக்கும் இழந்துவிட்ட ஒன்றாக இருக்கிறது. மேலே வழங்கப்பட்ட கோட்பாடுகள் போன்ற சுவாரஸ்யமான கோட்பாடுகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன, ஆனால் உடன்படிக்கைப் பெட்டியானது இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒருவேளை 2 மக்காபியர்கள் புத்தகத்தின் எழுத்தாளர் சரியாக இருக்கலாம்; கர்த்தர் திரும்பி வரும் வரை காணாமல் போன உடன்படிக்கைப் பெட்டிக்கு என்ன ஆனது என்பதை நாம் கண்டுபிடிக்க முடியாது.

English



முகப்பு பக்கம்

உடன்படிக்கைப் பெட்டிக்கு என்ன ஆனது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries