settings icon
share icon
கேள்வி

ஏரியனிசம் என்றால் என்ன?

பதில்


ஏரியனிசம் என்பது கி.பி. நான்காம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எகிப்திலுள்ள அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்த ஒரு பாதிரியார் மற்றும் கள்ளப்போதகரான ஏரியஸ் என்பவரின் பெயரிலிருந்து பெயரிடப்பட்ட ஒரு திரிபுக் கொள்கையுள்ள கலாபேதம் ஆகும். ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே முதன்முதலாக மற்றும் மிக முக்கியமான விவாதங்களில் ஒன்று கிறிஸ்துவின் தெய்வீகமாகும். இயேசு மாம்சத்தில் வந்த மெய்யான தேவனா, அல்லது இயேசு தேவனால் படைக்கப்பட்ட ஒருவரா? இயேசு தேவனா இல்லையா? தேவனுடைய குமாரனாகிய இயேசுவினுடைய தெய்வீகத்தை ஏரியஸ் மறுத்தார், இயேசு தேவனால் படைக்கப்பட்ட படைப்பின் முதல் செயலாகவும், கிறிஸ்துவின் இயல்பு பிதாவாகிய தேவனுடைய அனோமியோஸ் (“போலல்லாமல்”) என்றும் கூறினார். அப்படியானால், ஏரியனிசம் என்பது இயேசு சில தெய்வீக பண்புகளுடன் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்டவர், ஆனால் அவர் நித்தியமானவர் அல்ல, தன்னிலும் தானும் தெய்வீகமல்ல.

இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் இருப்பதைப் பற்றிய வேதாகமக் குறிப்புகளை ஏரியனிசம் தவறாகப் புரிந்துகொள்கிறது (யோவான் 4:6) மற்றும் அவர் தான் மீண்டும் வரப்போகிற அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான் என்று கூறியதையும் அவருக்கு தெரியாது என்கிற தவறான அர்த்தத்தைக் கொண்டுள்ளனர் (மத்தேயு 24:36). தேவன் எப்படி இளைப்படைந்தவராய் இருக்கலாம் அல்லது எப்படி அவருக்கு ஏதாவது தெரியாமல் இருப்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் இந்த வசனங்கள் இயேசுவின் மனித இயல்பைப் பற்றி பேசுகின்றன. இயேசு பரிபூரண தேவன், ஆனால் அவர் பரிபூரண மனிதனும் கூட. நாம் அவதாரம் என்று அழைக்கும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தேவனுடைய குமாரன் ஒரு மனிதனாக மாறவில்லை. ஆகையால், ஒரு மனிதனாக இயேசுவின் வரம்புகள் அவருடைய தெய்வீக இயல்பு அல்லது அவரது நித்தியத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஏரியனிசத்தில் இரண்டாவது பெரிய தவறான விளக்கம் கிறிஸ்துவுக்குப் பொருந்திய முதற்பேறானவர் என்னும் சொல்லின் பொருளைப் பற்றியது. ரோமர் 8:29-ல், கிறிஸ்துவை "தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு" என்று பவுல் கூறுகிறார் (கொலோசெயர் 1:15-20 ஐயும் காண்க). இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முதற்பேறானவர் என்பதை ஏரியஸ் கொள்கைகளை பின்பற்றுவோர், தேவனுடைய குமாரன் அவருடைய படைப்பின் முதல் செயலாக “படைக்கப்பட்டார்” என்று புரிந்துகொள்கிறார்கள். ஆனால் இது அப்படி இல்லை. இயேசு தம்முடைய இருப்பு மற்றும் நித்தியத்தை அவரே அறிவித்திருக்கிறார் (யோவான் 8:58; 10:30). வேதாகம காலங்களில், ஒரு குடும்பத்தின் முதல் மகன் மிகுந்த கனம் மற்றும் மரியாதைக்குரியவனாக நடத்தப்பட்டான் (ஆதியாகமம் 49:3; யாத்திராகமம் 11:5; 34:19; எண்ணாகமம் 3:40; சங்கீதம் 89:27; எரேமியா 31:9). இந்த அர்த்தத்தில்தான் இயேசு தேவனுடைய “முதற்பேறானவர்” என்று அழைக்கப்படுகிறார். தேவனுடைய திட்டத்தில் முதன்மையானவர் மற்றும் எல்லாவற்றிற்கும் வாரிசு இயேசுவேயாகும் (எபிரெயர் 1:2). இயேசு அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு” (ஏசாயா 9:6).

கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலத்துப் பல்வேறு ஆரம்பகால திருச்சபை ஆலோசனை சங்கங்களின் விவாதத்திற்குப் பிறகு, கிறிஸ்தவ திருச்சபை ஏரியனிசத்தை ஒரு தவறான கோட்பாடு/உபதேசம் என்று அதிகாரப்பூர்வமாகக் கண்டித்தது. அப்போதிருந்து, ஏரியனிசம் ஒருபோதும் கிறிஸ்தவ விசுவாசத்தின் சாத்தியமான கோட்பாடாக/உபதேசமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எவ்வாறாயினும், ஏரியனிசம் இறந்துவிடவில்லை. ஏரியனிசம் பல நூற்றாண்டுகளாக மாறுபட்ட வடிவங்களில் தொடர்கிறது. இன்றைய யெகோவாவின் சாட்சிகளும் மோர்மன்களும் கிறிஸ்துவின் தன்மையின் சுபாவம் குறித்து ஏரியஸ் போன்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர். ஆரம்பகால திருச்சபையின் முன்மாதிரியைப் பின்பற்றி, நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் தெய்வீகத்தின் மீதான எந்தவொரு மற்றும் அனைத்து தாக்குதல்களையும் நாம் கண்டிக்க வேண்டும்.

English



முகப்பு பக்கம்

ஏரியனிசம் என்றால் என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries