settings icon
share icon
கேள்வி

மூதாதையர் வழிபாடு குறித்து வேதாகமம் என்னக் கூறுகிறது?

பதில்


மூதாதையர் வழிபாடு என்பது மத நம்பிக்கைகள் மற்றும் மரித்துப்போன உறவினர்களின் ஆவிகளிடத்தில் பிரார்த்தனை செய்தல் மற்றும் காணிக்கைகளைப் படைத்தல் நடைமுறைகளை உள்ளடக்கியது. உலகெங்கிலும் உள்ள பல கலாச்சாரங்களில் மூதாதையர் வழிபாடு காணப்படுகிறது. பிரார்த்தனைகள் மற்றும் காணிக்கைகள் படைக்கப்படுகின்றன, ஏனென்றால் மூதாதையர்களின் ஆவிகள் இயற்கை உலகில் வாழ்கின்றன என்று நம்பப்படுகிறது, இதனால் நிகழ்காலத்தில் வாழுகின்ற உறவினர்களின் எதிர்காலத்தையும் அதிர்ஷ்டத்தையும் பாதிக்க முடியும் என நம்பப்படுகிறது. மூதாதையரின் ஆவிகள் உயிரோடிருக்கிறவர்களுக்கும் சிருஷ்டிகருக்கும் இடையில் மத்தியஸ்தர்களாக செயல்படுவதாகவும் கருதப்படுகிறது.

மூதாதையராக வழிபடப்படுவதற்கான ஒரே அளவுகோல் மரணம் அல்ல. அந்த நிலையை அடைவதற்கு அந்த நபர் சமூக தனித்தன்மையுடன் நல்ல ஒழுக்க நெறியுடன் வாழ்ந்திருக்க வேண்டும். மூதாதையர்கள் பிற்கால தலைமுறையினரை ஆசீர்வதிப்பதன் மூலம் அல்லது சபிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துவதாகவும் நம்பப்படுகிறது, சாராம்சத்தில் அவர்கள் கடவுள்களாக செயல்படுகிறார்கள். எனவே அவர்களிடத்தில் பிரார்த்தனை செய்வது, காணிக்கைகளை செலுத்துவது மற்றும் படையல் படைப்பது அவர்களை அமைதிப்படுத்தவும் அவர்களைப் பிரியப்படுத்தி அவர்களின் அனுக்கிரகத்தைப் பெறவும் இவை யாவும் செய்யப்படுகிறது.

கி.மு. 7-ஆம் நூற்றாண்டிற்கு முன்பே எரிகோவில் மத்திய கிழக்கில் உள்ள இடங்களில் மூதாதையர் வழிபாட்டின் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்க மற்றும் ரோமானிய கலாச்சாரங்களிலும் இது இருந்தது. மூதாதையர் வழிபாடு சீன மற்றும் ஆப்பிரிக்க மதங்களில் அதன் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டுள்ளது மற்றும் இது ஜப்பானிய மற்றும் பூர்வீக அமெரிக்க மதங்களிலும் காணப்படுகிறது, அங்கு இது மூதாதையர் வணக்கம் என்று அழைக்கப்படுகிறது.

மூதாதையர் வழிபாடு குறித்து வேதாகமம் என்னச் சொல்லுகிறது? முதலாவதாக, மரித்தவர்களின் ஆவிகள் பரலோகத்திற்கோ நரகத்திற்கோ செல்கின்றன என்றும் இயற்கை உலகில் தங்குவதில்லை என்றும் வேதாகமம் சொல்லுகிறது (லூக்கா 16:20-31; 2 கொரிந்தியர் 5:6-10; எபிரெயர் 9:27; வெளிப்படுத்துதல் 20:11-15). ஆவிகள் மரித்த பிறகும் பூமியில் தொடர்ந்து தங்கி, மற்றவர்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்துகின்றன என்ற நம்பிக்கை வேதப்பூர்வமானது அல்ல.

இரண்டாவதாக, மரித்தவர்கள் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்படுகிறார்கள் என்று வேதாகமத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. ஆனால் இயேசு கிறிஸ்துவுக்கு மத்தியஸ்தர் என்னும் அந்தப் பாத்திரம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் பிறந்தார், பாவமில்லாத வாழ்க்கை வாழ்ந்தார், நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார், கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டார், தேவனால் உயிரோடு எழுப்பப்பட்டார், பல சாட்சிகளால் முகமுகமாய் காணப்பட்டார், பரலோகத்திற்கு ஏறிச்சென்று, இப்போது பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் மீது விசுவாசம் மற்றும் நம்பிக்கை வைத்தவர்களின் சார்பாக பரிந்துபேசுகிறார் (அப்போஸ்தலர் 26:23; ரோமர் 1:2-5; எபிரேயர் 4:15; 1 பேதுரு 1:3-4). தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஒரே ஒரு மத்தியஸ்தர் மட்டுமே இருக்கிறார், அது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து (1 தீமோத்தேயு 2:5-6; எபிரேயர் 8:6, 9:15, 12:24). கிறிஸ்துவால் மட்டுமே அந்தப் பாத்திரத்தை நிரப்ப முடியும்.

யாத்திராகமம் 20:3-6ல் நாம் கர்த்தராகிய தேவனைத் தவிர வேறு எந்த தெய்வங்களையும் வணங்கக்கூடாது என்று வேதாகமம் சொல்கிறது. மேலும், குறி சொல்பவர்களும் மந்திரவாதிகளும் அவர்களால் மரித்தவர்களைத் தொடர்பு கொள்ள முடியும் என்று கருதப்பட்டதால், அவர்கள் தேவனால் வெளிப்படையாகத் தடை செய்யப்பட்டனர் (யாத்திராகமம் 22:18; லேவியராகமம் 19:32, 20:6, 27; உபாகமம் 18:10-11; 1 சாமுவேல் 28 :3; எரேமியா 27:9-10).

சாத்தான் எப்பொழுதும் தேவனை மாற்றீடு செய்ய முற்படுகிறான், மேலும் தேவனுடைய இருப்பு பற்றிய சத்தியத்திலிருந்து ஜனங்களை வழிநடத்த முயற்சிப்பதற்காக மற்ற தெய்வங்களையும் மூதாதையர்களையும் வணங்குவது பற்றிய பொய்களைப் பயன்படுத்துகிறான். மூதாதையர் வழிபாடு தவறானது, ஏனெனில் இது அத்தகைய வழிபாடு பற்றிய தேவனுடைய குறிப்பிட்ட எச்சரிக்கைகளுக்கு எதிரானது, மேலும் இது தேவனுக்கும் மனிதகுலத்திற்கும் இடையே தெய்வீக மத்தியஸ்தராக இயேசு கிறிஸ்துவை அமைக்க முயல்கிறது.

English



முகப்பு பக்கம்

மூதாதையர் வழிபாடு குறித்து வேதாகமம் என்னக் கூறுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries