settings icon
share icon
கேள்வி

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரின் பங்கு என்ன?

பதில்


பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவ்ரின் பங்கு புதிய ஏற்பாட்டில் அவருடைய பங்கைப் போன்றது ஆகும். பரிசுத்த ஆவியின் பங்கைப் பற்றி நாம் பேசும்போது, பரிசுத்த ஆவியானவர் செயல்படும் நான்கு பொதுப் பகுதிகளை நாம் அறியலாம்: 1) மறுபிறப்பு, 2) உள்ளில் வாசித்தல் (அல்லது நிரப்புதல்), 3) தடைப்பண்ணுதல் மற்றும் 4) ஊழியம் செய்வதற்காகப் பெலப்படுத்தல். பரிசுத்த ஆவியின் கிரியையின் இந்தப் பகுதிகள் பற்றிய சான்றுகள் பழைய ஏற்பாட்டில் இருப்பது போலவே புதிய ஏற்பாட்டிலும் உள்ளது.

ஆவியானவரின் கிரியையின் முதல் பகுதி மறுபிறப்பு செயல்பாட்டில் உள்ளது. மறுபிறப்பு செய்வதற்கான மற்றொரு வார்த்தை "மீண்டும் ஜனனம் நல்குதல்" ஆகும், இதிலிருந்து நாம் "மறுபிறப்பு" என்ற கருத்தை பெறுகிறோம். இதற்கான உன்னதமான ஆதார பகுதியை யோவானின் நற்செய்தியில் காணலாம்: "ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்" (யோவான் 3:3). இது கேள்வியை எழுப்புகிறது: இதற்கும் பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியின் கிரியைக்கும் என்ன சம்பந்தம்? பின்னர் நிக்கொதேமுவுடனான உரையாடலில், இயேசு அவரிடம் இவ்வாறு கூறினார்: "நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா?" (யோவான் 3:10). பழைய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் பரிசுத்த ஆவியானவர் புதிய ஜீவனின் ஆதாரம் என்கிற உண்மையை நிக்கொதேமு அறிந்திருக்க வேண்டும் என்பதே இயேசு இங்கே சொல்ல வருகிற காரியம். உதாரணமாக, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைவதற்கு முன்பு மோசே இஸ்ரவேலர்களிடம் கூறினார், "உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி" (உபாகமம் 30:6). இருதயத்தின் இந்த விருத்தசேதனம் தேவனுடைய ஆவியின் கிரியை மற்றும் அவரால் மட்டுமே நிறைவேற்ற முடியும். எசேக்கியேல் 11:19-20 மற்றும் எசேக்கியேல் 36:26-29 ஆகியவற்றில் மறுபிறப்பு என்ற கருப்பொருளையும் நாம் காண்கிறோம்.

ஆவியின் மறுபிறப்பு செய்யும் கிரியையின் பலன் விசுவாசம் (எபேசியர் 2:8). பழைய ஏற்பாட்டில் விசுவாசமுள்ள மனிதர்கள் இருந்தனர் என்பதை இப்போது நாம் அறிவோம், ஏனென்றால் எபிரேயர் 11 அவர்களில் பலரின் பெயரைப் பட்டியலிடுகிறது. பரிசுத்த ஆவியின் மறுபிறப்பு அடையச்செய்யும் வல்லமையால் விசுவாசம் உற்பத்தி செய்யப்பட்டால், பழைய ஏற்பாட்டு மீட்பு பரிசுத்தவான்கள் சிலுவையை முன்னோக்கிப் பார்த்தார்கள், தேவன் தமது மீட்பைப் பற்றி வாக்குறுதியளித்தவை நிறைவேறும் என்று நம்புகிறார்கள். அவர்கள் வாக்குறுதிகளைக் கண்டார்கள் மற்றும் "இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு" (எபிரேயர் 11:13), தேவன் வாக்குறுதியளித்ததை அவர் நிறைவேற்றுவார் என்று விசுவாசத்தால் ஏற்றுக்கொண்டார்கள்.

பழைய ஏற்பாட்டில் உள்ள ஆவியின் கிரியையின் இரண்டாவது அம்சம் உள்ளில் வாசித்தல் அல்லது நிரப்புதல் ஆகும். பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளில் ஆவியின் பங்கிற்கான முக்கிய வேறுபாடு இங்கே தெளிவாகத் தெரிகிறது. புதிய ஏற்பாடு விசுவாசிகளில் அதாவது அவர்களுக்குள்ளில் பரிசுத்த ஆவியானவர் நிரந்தர வாசம் செய்கிறதைக் கற்பிக்கிறது (1 கொரிந்தியர் 3:16-17; 6:19-20). இரட்சிப்புக்காக நாம் கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வசிக்க வருகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இந்த நிரந்தர வாசத்தை "நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார்" என்று அழைக்கிறார் (எபேசியர் 1:13-14). புதிய ஏற்பாட்டில் இந்த கிரியைக்கு மாறாக, பழைய ஏற்பாட்டில் உள்ள வசிப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களில் மட்டும் மற்றும் தற்காலிகமானது ஆகும். யோசுவா (எண்ணாகமம் 27:18), தாவீது (1 சாமுவேல் 16:12-13) மற்றும் சவுல் (1 சாமுவேல் 10:10) போன்ற பழைய ஏற்பாட்டு நபர்கள் மேல் ஆவியானவர் இறங்கி "வந்தார்" என்று காண்கிறோம். நியாயாதிபதிகள் புத்தகத்தில், இஸ்ரவேலை தங்கள் அடக்குமுறையாளர்களிடமிருந்து விடுவிப்பதற்காக தேவன் எழுப்பிய பல்வேறு நியாயாதிபதிகளின் மீது ஆவியானவர் "வருவதை" நாம் காண்கிறோம். பரிசுத்த ஆவியானவர் குறிப்பிட்ட பணிகளுக்காக இந்த நபர்கள் மீது வந்தது தெளிவாகிறது. வசிப்பு தேவனுடைய தயவின் அடையாளமாக இருந்தது (தாவீது விஷயத்தில்), மற்றும் தேவனுடைய தயவு ஒரு நபரை விட்டுவிட்டால், ஆவியானவர் அவரை விட்டுப் புறப்படுவார் (எ.கா. 1 சாமுவேல் 16:14 இல் சவுலின் விஷயத்தில்). இறுதியாக, ஆவியானவர் ஒரு நபரின் மீது "வருவது" எப்போதும் அந்த நபரின் ஆவிக்குரிய நிலையை குறிக்காது (எ.கா., சவுல், சிம்சோன் மற்றும் பல நியாயாதிபதிகள்). எனவே, புதிய ஏற்பாட்டில் ஆவியானவர் விசுவாசிகளில் மட்டுமே வந்து வசிக்கிறார் மற்றும் அது நிரந்தரமானது ஆகும், ஆனால் பழைய ஏற்பாட்டில் ஆவிக்குரிய நிலைமையை பொருட்படுத்தாமல், ஒரு குறிப்பிட்ட செயலுக்காக சில பழைய ஏற்பாட்டு நபர்கள் மீது மட்டும் ஆவியானவர் வருகிறார், பணி முடிந்தவுடன், ஆவியானவர் அந்த நபரிடமிருந்து விலகிச் செல்கிறார்.

பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் கிரியையின் மூன்றாவது அம்சம் அவர் பாவத்தைக் கட்டுப்படுத்துவதாகும். ஆதியாகமம் 6:3 பரிசுத்த ஆவியானது மனிதனின் பாவத்தை கட்டுப்படுத்துகிறது என்பதையும், பாவத்தைப் பற்றிய தேவனுடைய பொறுமை ஒரு "கொதிநிலை"யை அடையும் போது அந்த கட்டுப்பாடு நீக்கப்படும் என்பதையும் குறிக்கிறது. இந்த சிந்தனை 2 தெசலோனிக்கேயர் 2:3-8-ல் எதிரொலிக்கிறது, கடைசி நாட்களில் பெருகி வரும் விசுவாசத் துரோகம் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் வருகையை குறிக்கிறது. "கேட்டின் மகனாகிய பாவமனுஷன்" (வசனம் 3) வெளிப்படும் முன்னரே முடிவு செய்யப்படும் வரை, பரிசுத்த ஆவியானவர் சாத்தானின் சக்தியைக் கட்டுப்படுத்தி, அவருடைய நோக்கங்களுக்கு ஏற்றவாறு அதை விடுவிப்பார்.

பழைய ஏற்பாட்டில் ஆவியானவர் கிரியையின் நான்காவது மற்றும் இறுதி அம்சம் சேவிப்பதற்கான பெலனை வழங்குவதாகும். புதிய ஏற்பாட்டில் ஆவிக்குரிய வரங்கள் செயல்படும் விதத்தைப் போலவே, ஆவியானவர் சில நபர்களை சேவைக்காக வரங்களை அளிக்கிறார். யாத்திராகமம் 31:2-5-ல் உள்ள பெசலெயேலின் உதாரணத்தைக் கவனியுங்கள். மேலும், மேலே விவாதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தற்காலிக வசிப்பை நினைவுபடுத்தி, இந்த நபர்கள் இஸ்ரவேல் மக்களை (எ.கா., சவுல் மற்றும் தாவீது) ஆள்வது போன்ற சில பணிகளைச் செய்ய வரமளித்ததை நாம் காண்கிறோம்.

சிருஷ்டிப்பில் ஆவியானவரின் பங்கையும் நாம் குறிப்பிடலாம். ஆதியாகமம் 1:2-ல் ஆவியானவர் "ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்" மற்றும் சிருஷ்டிப்பின் கிரியையை மேற்பார்வை செய்வது பற்றியும் பேசுகிறது. இதேபோன்ற பாணியில், புதிய சிருஷ்டிப்பின் கிரியைக்கு ஆவியானவர் பொறுப்பேற்கிறார் (2 கொரிந்தியர் 5:17) அவர் மறுபிறப்பு மூலம் மக்களை தேவனுடைய ராஜ்யத்திற்குள் கொண்டுவருகிறார்.

மொத்தத்தில், ஆவியானவர் பழைய ஏற்பாட்டில் அதே செயல்பாடுகளை இந்த தற்போதைய யுகத்திலும் செய்கிறார். முக்கிய வேறுபாடு என்னவெனில், இப்போது விசுவாசிகளில் ஆவியானவரின் நிரந்தர வாசம் ஆகும். ஆவியின் ஊழியத்தில் இந்த மாற்றம் குறித்து இயேசு சொன்னது போல், "அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்" (யோவான் 14:17).

English



முகப்பு பக்கம்

பழைய ஏற்பாட்டில் பரிசுத்த ஆவியானவரின் பங்கு என்ன?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries