settings icon
share icon
கேள்வி

சாத்தான் எப்படி இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருக்கிறான் (2 கொரிந்தியர் 4: 4)?

பதில்


"இப்பிரபஞ்சத்தின் தேவன்" (அல்லது "இந்த யுகத்தின் தேவன்") என்ற சொற்றொடர், பெரும்பாலான ஜனங்களின் இலட்சியங்கள், கருத்துக்கள், குறிக்கோள்கள், நம்பிக்கைகள் மற்றும் பார்வைகளில் சாத்தான் முக்கிய செல்வாக்கு செலுத்துவதைக் குறிக்கிறது. அவனது செல்வாக்கு உலகின் தத்துவங்கள், கல்வி மற்றும் வணிகத்தையும் உள்ளடக்கியது. உலகின் எண்ணங்கள், யோசனைகள், ஊகங்கள் மற்றும் தவறான மதங்கள் அவனது கட்டுப்பாட்டில் உள்ளன மற்றும் அவனது பொய்கள் மற்றும் வஞ்சகத்திலிருந்து தோன்றின.

எபேசியர் 2:2 இல் சாத்தான் "ஆகாயத்து அதிகாரப் பிரபு" என்றும் அழைக்கப்படுகிறான். அவர் யோவான் 12:31 இல் "உலகத்தின் அதிபதி" எனக் குறிப்பிடப்படுகிறான். இந்த தலைப்புகள் மற்றும் பல சாத்தானின் திறன்களைக் குறிக்கின்றன. உதாரணமாக, சாத்தான் "ஆகாயத்து அதிகாரப் பிரபு" என்று சொல்வது, ஏதோ ஒரு வகையில் அவன் உலகத்தையும் அதிலுள்ள ஜனங்களையும் ஆளுகிறான் என்பதைக் குறிக்கிறது.

அவர் உலகை முழுவதுமாக ஆட்சி செய்கிறான் என்று சொல்ல முடியாது; தேவன் இன்னும் இறையாண்மை கொண்டவர். ஆனால் தேவன், தனது எல்லையற்ற ஞானத்தில், சாத்தான் இந்த உலகத்தில் தேவன் தனக்கு நிர்ணயித்த எல்லைக்குள் செயல்பட அனுமதித்தார் என்று அர்த்தம். சாத்தானுக்கு உலகத்தின் மீது அதிகாரம் இருப்பதாக வேதாகமம் கூறும்போது, தேவன் அவனுக்கு அவிசுவாசிகள் மீது மட்டுமே ஆதிக்கம் கொடுத்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். விசுவாசிகள் இனி சாத்தானின் ஆதிக்கத்தில் இல்லை (கொலோசெயர் 1:13). மறுபுறம், அவிசுவாசிகள் "பிசாசின் கண்ணியில்" (2 தீமோத்தேயு 2:26), "பொல்லாங்கனின் சக்தியில்" (1 யோவான் 5:19), மற்றும் சாத்தானின் அடிமைத்தனத்தில் (எபேசியர் 2:2) இருக்கிறது.

எனவே, சாத்தான் "இப்பிரபஞ்சத்தின் தேவன்" என்று வேதாகமம் கூறும்போது, அவனுக்கு முடிவான அதிகாரம் இருப்பதாக அது கூறவில்லை. அவிசுவாச உலகத்தை சாத்தான் ஒரு குறிப்பிட்ட வழியில் ஆள்கிறான் என்ற கருத்தை இது உணர்த்துகிறது. 2 கொரிந்தியர் 4:4 இல், அவிசுவாசிகள் சாத்தானின் வழியைப் பின்பற்றுகிறார்கள்: "தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்." சாத்தானின் திட்டம் உலகில் பொய்யான தத்துவங்களை ஊக்குவிப்பதை உள்ளடக்குகிறது—நற்செய்தியின் உண்மையை நம்பாதவர்களைக் குருடாக்கும் தத்துவங்கள் ஆகும். சாத்தானின் தத்துவங்கள் ஜனங்கள் சிறைவைக்கப்பட்டுள்ள கோட்டைகளாகும், அவை கிறிஸ்துவால் விடுவிக்கப்பட வேண்டும்.

அத்தகைய ஒரு தவறான தத்துவத்தின் உதாரணம், மனிதன் ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது செயல்களால் தேவனுடைய தயவைப் பெற முடியும் என்கிற நம்பிக்கையாகும். ஏறக்குறைய ஒவ்வொரு பொய்யான மதத்திலும், தேவனின் தயவைப் பெறுவது அல்லது நித்திய ஜீவனை சம்பாதிப்பது ஒரு முக்கிய கருப்பொருள் ஆகும். கிரியைகள் மூலம் இரட்சிப்பைப் பெறுவது, வேதாகம வெளிப்பாட்டிற்கு முரணானது. தேவனுடைய தயவைப் பெற மனிதன் கிரியை செய்ய முடியாது; நித்திய ஜீவன் ஒரு இலவச பரிசு (எபேசியர் 2:8-9 பார்க்கவும்). அந்த இலவச பரிசு இயேசு கிறிஸ்து மூலமாக மட்டுமே கிடைக்கிறது (யோவான் 3:16; 14:6). மனிதகுலம் ஏன் இரட்சிப்பின் இலவசப் பரிசைப் பெறவில்லை என்று நீங்கள் கேட்கலாம் (யோவான் 1:12). பதில் என்னவென்றால், இந்த உலகத்தின் தேவனான சாத்தான் மனிதகுலத்தை அதற்குப் பதிலாக அவனது பெருமையைப் பின்பற்றும்படி தூண்டினான். சாத்தான் அவனுக்கு சொந்தமான நிகழ்ச்சி நிரலை அமைக்கிறான், அவிசுவாச உலகம் அதைப் பின் தொடர்கிறது, மனிதகுலம் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறது. வேதம் சாத்தானை பொய்யன் என்று அழைப்பதில் ஆச்சரியமில்லை (யோவான் 8:44).

English



முகப்பு பக்கம்

சாத்தான் எப்படி இப்பிரபஞ்சத்தின் தேவனாக இருக்கிறான் (2 கொரிந்தியர் 4: 4)?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries