settings icon
share icon
கேள்வி

கர்த்தருடைய ஜெபத்தில் ஸ்தோத்திரம் செலுத்துவது ஏன் இல்லை? நம்முடைய எல்லா ஜெபங்களும் ஸ்தோத்திரம் செலுத்துவத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் அல்லவா?

பதில்


1 தெசலோனிக்கேயர் 5:17-18ல் “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்” மற்றும் “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்” என்கிற அப்போஸ்தலன் பவுலின் அறிவுரையின்படி, கர்த்தருடைய ஜெபத்தில் ஸ்தோத்திரஞ்செய்வதற்கான வழிமுறைகள் இல்லை என்பது விந்தையாகத் தெரிகிறது. சுவிசேஷப் புத்தகங்களின் மற்ற இடங்களில் ஜெபத்தில் இயேசு ஸ்தோத்திரஞ்செய்வதை மாதிரியாகக் காட்டுவதால் இது மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறது.

5,000 (மத்தேயு 14:16-21) மற்றும் 4,000 பேருக்கு (மத்தேயு 15:35-38) அற்புதமாக உணவளித்தல் உட்பட, அவர் வழங்கிய உணவுக்காக இயேசு தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்கிறார். அவர் கடைசி இராப்போஜனத்தில் அப்பத்திற்கும் பாத்திரத்திற்கும் ஸ்தோத்திரம் பண்ணினார் (அப்போஸ்தலர் 27:35). லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழச் செய்யும் தேவனுடைய வேண்டுகோளைக் கேட்டதற்காக அவர் தேவனுக்கு நன்றி கூறினார் (யோவான் 11:41). ராஜ்யத்தின் இரகசியங்களை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன் என்றார் (மத்தேயு 11:25). ஆயினும் அவர் கர்த்தருடைய ஜெபத்தில் ஸ்தோத்திரம் செலுத்துவதை விட்டுவிடுகிறார்.

கர்த்தருடைய ஜெபம் (மத்தேயு 6:9-13) அடங்கிய வேதப்பகுதியை நாம் ஆராய்ந்தால், இயேசு ஏன் ஒரு குறிப்பிட்ட முறையில் ஜெபிக்குமாறு சீஷர்களுக்குக் கற்பித்தார் என்பதை முதலில் கவனிக்கிறோம். பரிசேயர்கள் ஜெபித்த விதத்தை இயேசு விமர்சித்தார். அனைவரும் பார்க்கவும் கேட்கவும் கூடிய திறந்த வெளியில் அவர்கள் ஜெபம் செய்தனர். அவர்கள் எவ்வளவு புனிதமானவர்கள் மற்றும் பக்தி கொண்டவர்கள் என்பதை பொதுமக்களுக்குக் காண்பிப்பதற்கு இது ஒரு வழியாகும். ஜெபிக்கும் இந்த முறையை இயேசு கண்டனம் செய்கிறார்: “அவர்களுடைய பலன் அவர்களுக்கு கிடைத்தாயிற்று,” அந்த பலன் மனிதர்களால் பார்க்கப்படும். இயேசு பொதுவான ஜெபத்தைக் கண்டிக்கவில்லை, "மனிதர்களால் பார்க்கப்பட வேண்டும்" என்கிற குறிக்கோளுடன் ஜெபிக்கும் நடைமுறையை மட்டுமே அவர் கண்டித்தார். 1 ராஜாக்கள் 18 இல் உள்ள கர்மேல் மலையில் உள்ள பாகாலின் ஆசாரியர்களைப் போல, தங்கள் தேவன் கேட்டதை உறுதிசெய்வது போல, புறஜாதியார் தொடர்ந்து ஜெபித்ததை இயேசு விமர்சிப்பதையும் காண்கிறோம்.

இந்த ஜெப முறைகளுக்கு எதிராக இயேசு செய்த திருத்தம், அவருடைய சீடர்களுக்கு ஒரு மாதிரி ஜெபத்தைக் கொடுப்பதாகும். இப்போது, ரோமன் கத்தோலிக்கர்களைப் போல நாம் கர்த்தருடைய ஜெபத்தை வெறுமனே வாசிப்பதன் மூலம் ஜெபிப்பதில்லை. கர்த்தருடைய ஜெபத்தை கூட்டாகப் பாடுவது தவறு என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. இயேசு இங்கே தனிப்பட்ட ஜெபத்தைக் குறிப்பிடுகிறார், கூட்டு பிரார்த்தனை அல்ல.

ஜெபத்திற்கான பொதுவான வழிகாட்டியாக கர்த்தருடைய ஜெபத்தை நினைப்பது சிறந்தது — நமது ஜெப வாழ்க்கையை வடிவமைக்கும் வழிமுறையாகும். ஜெபம் ஆறு விண்ணப்பங்களைக் கொண்டுள்ளது. முதல் மூன்று தேவனோடு தொடர்புடையது, கடைசி மூன்று நம்மோடு தொடர்புடையது. தேவனை “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே” என்று அழைத்த பிறகு, தேவனுடைய நாமம் மகிமைப்படுத்தப்படவும் பரிசுத்தப்படவும் முதலில் ஜெபிக்கிறோம். அடுத்து, தேவனுடைய ராஜ்யம் வர வேண்டும் என்று ஜெபிக்கிறோம். கிறிஸ்துவின் வருகையிலிருந்து தேவனுடைய ராஜ்யம் ஏற்கனவே இருப்பதாக ஒரு உணர்வு உள்ளது, ஆனால் ராஜ்யம் அதன் முழுமையில் வர நாம் ஜெபம் செய்கிறோம். மூன்றாவதாக, தேவனுடைய சித்தம் — அவருடைய தார்மீக, அல்லது வெளிப்படுத்தப்பட்ட, சித்தம் — இங்கே பூமியில், நம்மில் சித்தம் செய்யப்பட வேண்டும் என்று நாம் ஜெபிக்கிறோம். தேவனுடைய மகிமையையும் மகத்துவத்தையும் குறிப்பிடும் இந்த மூன்று விண்ணப்பங்களுக்குப் பிறகு, நம்முடைய அனுதின பராமரிப்பு, பாவத்திலிருந்து நமக்கு மன்னிப்பு மற்றும் தீமையிலிருந்து விடுவித்தல் என நம்மைப் பற்றிய விண்ணப்பங்களைத் தொடர்கிறோம்.

கர்த்தருடைய ஜெபத்தில் நாம் ஏன் ஸ்தோத்திரஞ்செய்தலைக் காணவில்லை என்பதற்கு, சிறந்த பதில் என்னவென்றால், ஸ்தோத்திரஞ்செய்தல் என்பது நாம் தேவனிடம் ஜெபிக்கும் மனப்பான்மையாகும். தேவனுடைய பிள்ளைகளாக இருப்பவர்களுக்கு, ஸ்தோத்திரம் நம் இருதயங்களை நிரப்பி, நம் உதடுகளிலிருந்து தேவனிடத்தில் ஊற்றப்படும், ஏனென்றால் மற்றவற்றுடன், நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன, மேலும் இயேசு கிறிஸ்துவின் மூலம் நாம் நித்திய ஜீவனைப் பெறுகிறோம். தேவன் நமக்காக என்ன செய்திருக்கிறார் என்பதை நாம் எவ்வளவு அதிகமாக சிந்தித்துப் பார்க்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். எல்லா நேரங்களிலும், எல்லா நிலைகளிலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் தேவனுடனான நமது உறவில் ஸ்தோத்திரம் செலுத்துதல் இயற்கையானது. 1 தெசலோனிக்கேயர் 5:18ல் பவுல் எழுதுகிறார், “எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”

English



முகப்பு பக்கம்

கர்த்தருடைய ஜெபத்தில் ஸ்தோத்திரம் செலுத்துவது ஏன் இல்லை? நம்முடைய எல்லா ஜெபங்களும் ஸ்தோத்திரம் செலுத்துவத்தையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் அல்லவா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries