settings icon
share icon

பிலிப்பியருக்கு எழுதின நிருபம்

எழுத்தாளர்: பிலிப்பியர் 1:1-வது வசனம், பிலிப்பியருக்கு எழுதின நிருபத்தின் எழுத்தாளரை அப்போஸ்தலனாகிய பவுல் என்று அடையாளம் காட்டுகிறது, மேலும் பவுல் இந்த நிருபத்தை தீமோத்தேயுவின் உதவியுடன் எழுதியிருக்கலாம்.

எழுதப்பட்ட காலம்: பிலிப்பியர் புத்தகம் ஏறக்குறைய கி.பி. 61-ல் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: பவுலின் சிறையிருப்பின் காலத்தில் எழுதப்பட்ட நிருபங்களில் ஒன்றான பிலிப்பியர் எழுதிய நிருபம் ரோமாபுரியிலிருந்து எழுதப்பட்டதாகும். பிலிப்பு பட்டணத்திற்கு அப்போஸ்தலனாகிய பவுல் தனது இரண்டாவது மிஷனரி பயணத்தில் (அப்போஸ்தலர் 16:12) விஜயம் செய்தார், லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ மற்றும் சிறை அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் கிறிஸ்துவுக்குள் மாற்றப்பட்டனர். இப்போது, சில ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சபை அங்கு நிறுவப்பட்டது என்பது, இந்த நிருபத்தின் ஆரம்ப வரிகளில் பவுல், “பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது” (பிலிப்பியர் 1:1) என்பதிலிருந்து தெளிவாக விளங்குகிறது.

இந்த நிருபத்தின் சூழ்நிலை சந்தர்ப்பம், பிலிப்பியில் உள்ள திருச்சபையிலிருந்து ஒரு காணிக்கைப் பரிசை ஏற்றுக்கொள்வதாகும், அதன் சபை உறுப்பினர்களில் ஒருவரான எப்பாப்பிரோதீத்துவின் கையில் கொடுத்தனுப்பப்பட்டது (பிலி 4:10-18). இது பவுலின் இருதயத்திற்கு குறிப்பாக நெருக்கமாக இருந்த ஒரு கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்ட நிருபமாகும் (2 கொரிந்தியர் 8:1-6), மற்றும் ஒப்பீட்டளவில் உபதேச கோட்பாட்டு பிழையைப் பற்றி மிகவும் குறைவாகவே இந்த நிருபத்தில் கூறப்பட்டுள்ளது.

திறவுகோல் வசனங்கள்: பிலிப்பியர் 1:21, “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.”

பிலிப்பியர் 3:7, “ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன்.”

பிலிப்பியர் 4:4, “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”

பிலிப்பியர் 4:6-7, “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”

பிலிப்பியர் 4:13, “என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.”

சுருக்கமான திரட்டு: பிலிப்பியர் நிருபம் "துன்பத்தின் மூலம் வளங்கள்" என்று அழைக்கப்படலாம். இந்த புத்தகம் நம் வாழ்க்கையில் கிறிஸ்துவைப் பற்றியும், நம் மனதில் கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்து நம் இலக்காகவும், கிறிஸ்து நம்முடைய பலமாகவும், மற்றும் பாடுகளின் துன்பத்தின் மூலம் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இது ரோமாபுரியில் பவுலின் சிறைவாசத்தின் போது எழுதப்பட்டது, கிறிஸ்துவின் பரமேறுதலுக்கு சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அல்லது பிலிப்பியில் பவுல் முதன்முதலில் பிரசங்கித்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்டதாகும்.

பவுல் ரோமச் சக்கிரவர்த்தி நீரோவின் கைதியாக இருந்தார், ஆனால் இந்த நிருபம் சந்தோஷமாயிருங்கள் சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லி வெற்றியுடன் பறைச்சாட்டுகிறது (பிலிப்பியர் 1:4, 18, 25, 26; 2:2, 28; பிலிப்பியர் 3:1, 4:1 , 4, 10). சரியான கிறிஸ்தவ அனுபவம் என்பது நம் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், நம்மில் வாழும் கிறிஸ்துவின் ஜீவன், சுபாவம் மற்றும் மனம் ஆகியவற்றின் செயல்பாடாகும் (பிலிப்பியர் 1:6, 11; 2:5, 13). நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் தாழ்மைப்படுத்தப்பட்ட அவமானப்படுத்துவதும் பின்பு மேலாக உயர்த்துவதும் பற்றிய மகிமையான மற்றும் ஆழமான அறிவிப்புடன் பிலிப்பியர் 2:5-11 வரையிலுள்ள வேதப்பாகம் உச்சத்தை அடைகிறது.

பிலிப்பியர் நிருபத்தைப் பின்வருமாறு பிரிக்கலாம்:
முன்னுரை, 1:1-7
I. கிறிஸ்தவனின் ஜீவனாகிய கிறிஸ்து: துன்பத்தின் மத்தியிலும் மகிழ்ச்சி, 1:8-30
II. கிறிஸ்தவனின் முறையாகிய கிறிஸ்து: தாழ்ந்த சேவையில் மகிழ்ச்சி, 2:1-30
III. கிறிஸ்தவனின் விசுவாசம், விருப்பம் மற்றும் எதிர்பார்ப்பின் பொருளாகிய கிறிஸ்து, 3:1-21
IV. கிறிஸ்தவனின் பெலனாகிய கிறிஸ்து: கவலையின் மூலம் மகிழ்ச்சி, 4:1-9
முடிவுரை, 4: 10-23

இணைப்புகள்: பவுல் தனது பல நிருபங்களைப் போலவே, பிலிப்பி பட்டணத்து திருச்சபையில் புதிய விசுவாசிகளை ஆரம்பகால திருச்சபைகளில் தொடர்ந்து வளர்த்துக் கொண்ட பழக்கவழக்கமான போக்கைப் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரித்தார். பழைய ஏற்பாட்டுச் நியாயப்பிரமாண சட்டத்துடன் பிணைக்கப்பட்ட யூதர்கள், யூதர்கள் கிரியைகளின் மூலம் இரட்சிப்பு என்னும் போதனைக்குத் திரும்புவதற்கான ஒரு நிலையான முயற்சி இருந்தது. ஆனால், இரட்சிப்பு என்பது கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே என்றும் விசுவாசிப்பதால் மட்டுமே இரட்சிப்பு உண்டாகிறது என்று பவுல் மீண்டும் வலியுறுத்தினார், யூதர்களை "நாய்கள்" மற்றும் "தீமை செய்யும் மனிதர்கள்" என்று முத்திரை குத்தினார். குறிப்பாக, கிறிஸ்துவில் இரட்சிக்கப்பட்டு வந்த புதிய விசுவாசிகள் தேவைகளுக்கு ஏற்ப விருத்தசேதனம் செய்யப்பட வேண்டும் என்று நியாயப்பிரமாண சட்டத்தை மேற்கோள்காட்டி பழைய உடன்படிக்கையின் (ஆதியாகமம் 17:10-12; லேவியராகமம் 12:3) ஆசரிப்பை யூதர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த வழியில், அவர்கள் தங்கள் சொந்த முயற்சியால் தேவனைப் பிரியப்படுத்தவும், சடங்கில் பங்கேற்காத புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு மேலாக தங்களை உயர்த்தவும் முயன்றனர். ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள் இனி தூய்மையான இருதயத்தின் அவசியத்தைக் குறிக்கும் சடங்கைச் செய்ய மாட்டார்கள் என்று பவுல் விளக்கினார்.

நடைமுறை பயன்பாடு: பிலிப்பியருக்கு எழுதின நிருபம் பவுலின் மிகவும் தனிப்பட்ட நிருபங்களில் ஒன்றாகும், மேலும் இது விசுவாசிகளுக்கு பல தனிப்பட்ட நடைமுறைப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. ரோமாபுரியில் சிறைவாசம் அனுபவித்தபோது எழுதப்பட்ட பிலிப்பியர் நிருபம், பவுல் தனது முன்மாதிரியைப் பின்பற்றும்படி அறிவுறுத்துகிறார், துன்புறுத்தலின் போது அல்லது பாடுகளின் மத்தியில் “கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிவு கொள்ளவேண்டும்” (பிலிப்பியர் 1:14). கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் நற்செய்திக்கு எதிரான அவிசுவாசிகளின் விரோதத்தை ஒரு காலத்தில் அல்லது இன்னொரு காலத்தில் அனுபவித்திருக்கிறார்கள். ஆகவே இதை நாம் எதிர்பார்க்க வேண்டும். உலகம் அவரை வெறுத்தது மெய்யானால், அது அவருடைய சீஷர்களையும் வெறுக்கும் என்று இயேசு கூறினார் (யோவான் 15:18). துன்புறுத்தல்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடன் இருக்கவும், “ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கவும்” வேண்டும் என்று பவுல் நமக்கு அறிவுறுத்துகிறார் (பிலிப்பியர் 1:27).

பிலிப்பியர் நிருபத்தின் மற்றொரு பயன்பாடு, கிறிஸ்தவர்கள் மனத்தாழ்மையுடன் ஒன்றுபட வேண்டும் என்பதாகும். நாம் கிறிஸ்துவோடு ஐக்கியமாக இருக்கிறோம், அதே வழியில் ஒருவருக்கொருவர் சக விசுவாசிகளுடன் ஐக்கியமாக இருக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். பவுல் நமக்கு " நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள் என்றும் ஒன்றையும் வாதினாலாவது வீண்பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள் என்றும் அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” (பிலிப்பியர் 2:2-4) என்று அறிவுறுத்துகிறார். பவுலின் ஆலோசனையை நாம் அனைவரும் மனதில் கொண்டால் இன்று திருச்சபைகளில் மிகக் குறைவான மோதல்களே இருக்கும்.

பிலிப்பியர் நிருபத்தில் காணப்படும் மற்றொரு பயன்பாடு, அவருடைய நிருபம் முழுவதும் காணப்படும் மகிழ்ச்சியையும் சந்தோஷமுமாகும். எப்படியோ கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் என்று பவுல் மகிழ்ச்சியடைகிறார் (பிலிப்பியர் 1:8); அவர் தனது துன்புறுத்தலில் மகிழ்ச்சியடைகிறார் (2:18); கர்த்தரிடத்தில் சந்தோஷப்படும்படி அவர் மற்றவர்களுக்கும் அறிவுறுத்துகிறார் (3:1); அவர் பிலிப்பி சபை சகோதரர்களை தனது "மகிழ்ச்சி மற்றும் கிரீடம்" என்று குறிப்பிடுகிறார் (4:1). விசுவாசிகளுக்கு இந்த அறிவுரையை அவர் சுருக்கமாகக் கூறுகிறார்: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்” (4:4-7). விசுவாசிகளாகிய, நம்முடைய எல்லா கவலைகளையும் அவர்மீது வைப்பதன் மூலம் நாம் மகிழ்ச்சியடைந்து, தேவனுடைய சமாதானத்தை அனுபவிக்க முடியும், “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” (4:6). பவுலின் சந்தோஷமானது, அவருக்கு துன்பம் மற்றும் சிறைவாசம் இருந்தபோதிலும், இந்த நிருபத்தின் மூலம் பிரகாசிக்கிறது, மேலும் நம்முடைய எண்ணங்களை தேவன் மீது மையப்படுத்தும்போது பவுல் அனுபவித்த அதே சந்தோஷம் நமக்கும் உண்டாயிருக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்படுகிறது (பிலிப்பியர் 4:8).

English



முகப்பு பக்கம்

பிலிப்பியருக்கு எழுதின நிருபம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries