settings icon
share icon

ஒபதியாவின் புத்தகம்

எழுத்தாளர்: ஒபதியா புத்தகத்தின் முதலாவது வசனம், ஒபதியா புத்தகத்தின் எழுத்தாளரை ஓபதியா தீர்க்கதரிசி என்று அடையாளப்படுத்துகிறது.

எழுதப்பட்ட காலம்: ஒபதியா புத்தகம் கி.மு. 848 முதல் கி.மு. 840 வரையிலான காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.

எழுதப்பட்டதன் நோக்கம்: பழைய ஏற்பாட்டின் புத்தகங்களுள் மிகச் சிறிய புத்தகமான ஒபதியா 21 வசனங்கள் மட்டுமே கொண்டுள்ள புத்தகமாகும். தேவனுக்கும் இஸ்ரவேலுக்கும் எதிரான பாவங்களுக்காக ஏதோமைக் கண்டிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்தும் தேவனுடைய தீர்க்கதரிசி ஒபதியா, இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளை உரைக்கிறார். ஏதோமியர்கள் ஏசாவின் சந்ததியினர், இஸ்ரவேலர்கள் அவனுடைய இரட்டை சகோதரரான யாக்கோபின் சந்ததியினர் ஆகும். சகோதரர்களுக்கிடையில் ஒரு சண்டை அவர்களின் சந்ததியினரை 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பாதித்துள்ளது. எகிப்திலிருந்து புறப்பட்டு இஸ்ரவேலர்கள் வெளியேறியப்போது ஏதோமியர்கள் இஸ்ரவேல் ஜனம் தங்கள் தேசத்தைக் கடக்க தடை விதித்தனர். ஏதோமின் பெருமையின் பாவங்களுக்கு இப்போது கர்த்தரிடமிருந்து ஒரு வலுவான நியாயத்தீர்ப்பு தேவைப்படுகிறது.

திறவுகோல் வசனங்கள்: ஒபதியா வசனம் 4, “நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்.”

ஒபதியா வசனம் 12, “உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும் அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.”

ஒபதியா வசனம் 15, “எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும்.”

சுருக்கமான திரட்டு: ஒபதியாவின் செய்தி இறுதியானது, மற்றும் அது நிச்சயமானது: ஏதோம் ராஜ்யம் முற்றிலுமாக அழிக்கப்படும். ஏதோம் திமிர்பிடித்தவனாக இருக்கிறான், இஸ்ரவேலின் துரதிர்ஷ்டங்களைப் பற்றி மகிழ்ச்சியடைகிறான், எதிரிப் படைகள் இஸ்ரேலைத் தாக்கும்போது, இஸ்ரவேலர் உதவி கேட்கும்போது, ஏதோமியர்கள் மறுத்து, அவர்களுக்காக உதவி செய்யாமல், அவர்களுக்கு எதிராகப் போராடத் தேர்வு செய்கிறார்கள். பெருமையின் இந்த பாவங்களை இனி கவனிக்க முடியாது. கடைசி நாட்களில் சீயோனின் நிறைவேற்றம் மற்றும் விடுதலையின் வாக்குறுதியுடன் புத்தகம் முடிவடைகிறது, அப்போது தேவனுடைய ஜனங்களுக்கு அவர் ஆட்சி செய்யும்போது அவர்களது தேசம் மீண்டுமாக மீட்கப்படும்.

முன்னிழல்கள்: ஒபதியா புத்தகத்தின் 21-வது வசனம் கிறிஸ்துவையும் அவருடைய திருச்சபையையும் முன்னறிவிக்கிறது. “ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன்பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்”. இந்த "இரட்சகர்கள்" (பல பதிப்புகளில் "விடுவிப்பவர்கள்" என்றும் அழைக்கப்படுகிறார்கள்) கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள் ஆகும், அதாவது தேவனுடைய வார்த்தையின் ஊழியர்கள் மற்றும் குறிப்பாக இந்த பிந்தைய நாட்களில் நற்செய்தியின் போதகர்கள் அடங்குவார்கள். அவர்கள் "இரட்சகர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் நம்முடைய இரட்சிப்பைப் பெறுவதால் அல்ல, மாறாக அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியின் மூலம் இரட்சிப்பைப் பிரசங்கிப்பதாலும், அந்த இரட்சிப்பைப் பெறுவதற்கான வழியை நமக்குக் காண்பிப்பதாலும் அவர்கள் இரட்சகர்கள் என்று கருதப்படுகிறார்கள். அவர்களும், அவர்களால் பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையும், இரட்சிப்பின் நற்செய்தி எல்லா மனிதர்களுக்கும் வழங்கப்படும் வழிமுறையாகும். இரட்சிப்பை வழங்குவதற்கு வந்த ஒரே இரட்சகராக கிறிஸ்து மட்டுமே இருக்கிறார், அவரே அதன் காரணகர்த்தாவாக இருக்கிறார், சுவிசேஷத்தை இரட்சகர்களும் விடுவிப்பவர்களும் யுகத்தின் முடிவில் மேலும் மேலும் இவைகளுக்கு ஆதாரமாக இருப்பார்கள்.

நடைமுறை பயன்பாடு: நாம் அவரிடம் உண்மையாக இருந்தால் தேவன் நம் சார்பாக வெல்வார். ஏதோமைப் போலல்லாமல், தேவைப்படும் காலங்களில் மற்றவர்களுக்கு உதவ நாம் தயாராக இருக்க வேண்டும். பெருமை என்பது ஒரு பெரும் பாவம். இயேசு கிறிஸ்துவையும் அவர் நமக்காகச் செய்ததையும் தவிர நாம் வேறு எதைக் குறித்தும் பெருமைப்பட ஒன்றுமில்லை.

English



முகப்பு பக்கம்

ஒபதியாவின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries