settings icon
share icon

மீகாவின் புத்தகம்

எழுத்தாளர்: மீகா புத்தகத்தின் எழுத்தாளர் மீகா தீர்க்கதரிசியாகும் (மீகா 1:1).

எழுதப்பட்ட காலம்: மீகாவின் புத்தகம் கி.மு. 735 முதல் கி.மு. 700 வரையிலான காலக்கட்டத்தின் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டதாக நம்பபடுகிறது.

எழுதப்பட்டதன் நோக்கம்: மீகா புத்தகத்தின் செய்தியானது, நியாயத்தீர்ப்பு மற்றும் நம்பிக்கையின் சிக்கலான கலவையாகும். ஒருபுறம், தீர்க்கதரிசனங்கள் சமூக தீமைகள், ஊழல் நிறைந்த தலைமை மற்றும் உருவ வழிபாடு ஆகியவற்றிற்காக இஸ்ரவேல் மீது நியாயத்தீர்ப்பை அறிவிக்கின்றன. இந்த தீர்ப்பு சமாரியா மற்றும் எருசலேமின் அழிவில் உச்சம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மறுபுறம், புத்தகம் தேசத்தின் மறுசீரமைப்பை மட்டுமல்ல, இஸ்ரவேல் மற்றும் எருசலேமின் மாற்றத்தையும் உயர்த்தலையும் அறிவிக்கிறது. நம்பிக்கை மற்றும் அழிவின் செய்திகள் முரண்பாடானவை அல்ல, இருப்பினும், மறுசீரமைப்பு மற்றும் மாற்றம் நியாயத்தீர்ப்புக்குப் பிறகுதான் நடைபெறுகின்றன.

திறவுகோல் வசனங்கள்: மீகா 1:2, “சகல ஜனங்களே, கேளுங்கள், பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார்.”

மீகா 5:2, “எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதி நாட்களாகிய பூர்வத்தினுடையது.”

மீகா 6:8, “மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.”

மீகா 7:18-19, “தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார்.”

சுருக்கமான திரட்டு: ஜனங்களை சுரண்டி தவறாக வழிநடத்தும் இஸ்ரவேலின் ஆட்சியாளர்கள், ஆசாரியர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை மீகா தீர்க்கதரிசி கடுமையாகக் கண்டிக்கிறார். அவர்களுடைய செயல்களால் தான் எருசலேம் அழிக்கப்படும். எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் செல்லும் மக்களின் விடுதலையை மீகா தீர்க்கதரிசி அறிவித்து, தனக்கு எதிராகக் கூடியிருந்த தேசங்களை அழிக்க எருசலேமுக்கு ஒரு புத்திமதியுடன் முடிக்கிறார். தேசத்தைப் பாதுகாக்க சிறந்த ஆட்சியாளர் பெத்லகேமில் இருந்து வருவார் என்று, தீர்க்கதரிசி யாக்கோபின் எஞ்சியவர்களின்/மீதியானவர்களின் வெற்றியை அறிவிக்கிறார், மேலும் ஒரு நாள் யெகோவா விக்கிரகாராதனை மற்றும் இராணுவ வலிமையை நம்பியிருக்கும் தேசத்தை சுத்திகரிக்கும் ஒரு நாளை முன்னறிவிப்பார். நீதி மற்றும் விசுவாசத்திற்கான யெகோவாவின் தேவையின் ஒரு சக்திவாய்ந்த மற்றும் சுருக்கமான திரட்டை தீர்க்கதரிசி முன்வைக்கிறார், மேலும் ஓம்ரி மற்றும் ஆகாபின் வழிகளைப் பின்பற்றியவர்கள் மீது நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறார். ஒரு புலம்பலின் கூறுகளை உள்ளடக்கிய ஒரு தீர்க்கதரிசன வழிபாட்டுடன் புத்தகம் நிறைவடைகிறது. இஸ்ரவேல் தனது பாவத்தை ஒப்புக்கொள்கிறது மற்றும் யெகோவாவின் வல்லமைமிக்க செயல்களின் மூலம் விடுதலையை உறுதி செய்கிறது.

முன்னிழல்கள்: மீகா 5:2-ல், பெத்லகேமில் பிறந்த ராஜாவைத் தேடிய சாஸ்திரிகளால் மேற்கோள் காட்டப்பட்ட ஒரு மேசியா தீர்க்கதரிசனம் (மத்தேயு 2:6) கொடுக்கப்பட்டுள்ளது. கிழக்கிலிருந்து வந்த இந்த சாஸ்திரிகள் எபிரெய வேதாகமத்தை நன்கு அறிந்திருந்ததால், பெத்லகேம் என்ற சிறிய கிராமத்திலிருந்து உலகத்தின் மெய்யான ஒளியான சமாதான பிரபு வெளியே வருவார் என்பதை அவர்கள் அறிந்தார்கள். மீகாவின் பாவம், மனந்திரும்புதல் மற்றும் மீட்டெடுப்பு பற்றிய செய்தி அதன் இறுதி நிறைவேற்றத்தை இயேசு கிறிஸ்துவில் காண்கிறது, அவர் நம்முடைய பாவங்களுக்கான பரிகாரம் (ரோமர் 3:24-25) மற்றும் தேவனிடத்திற்கு செல்வதற்கான ஒரே வழியாகும் (யோவான் 14:6).

நடைமுறை பயன்பாடு: தேவன் எச்சரிக்கைகளை அளிக்கிறார், எனவே அவருடைய கோபத்தை நாம் அனுபவிக்க வேண்டியதில்லை. தேவனுடைய எச்சரிக்கைகள் செவிசாய்க்கப்படாவிட்டால், அவருடைய குமாரனின் பலியில் பாவத்திற்கான அவரது ஏற்பாடு நிராகரிக்கப்பட்டால் நியாயத்தீர்ப்பு நிச்சயமாக வரும். கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு, தேவன் நம்மை ஒழுங்குபடுத்துவார் – அதாவது வெறுப்பிலிருந்து அல்ல, ஆனால் அவர் நம்மை நேசிப்பதால் அப்படிச் செய்வார். பாவம் அழிக்கிறது என்பதை அவர் நன்கு அறிவார், நாம் பரிபூரணராய் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். மறுசீரமைப்பின் வாக்குறுதியாக இருக்கும் இந்த பரிபூரணம் அவருக்குக் கீழ்ப்படிந்தவர்களுக்காக காத்திருக்கிறது.

English



முகப்பு பக்கம்

மீகாவின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries