settings icon
share icon

1 ராஜாக்களின் புத்தகம்

எழுத்தாளர்: 1 ராஜாக்களின் புத்தகம் குறிப்பாக அதன் எழுத்தாளரின் பெயரை யார் என்று குறிப்பாக குறிப்பிடவில்லை. மரபு வழியாக தொன்றுதொட்டு நம்பி வருவது என்னவென்றால், இது எரேமியா தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டது என்பதாகும்.

எழுதப்பட்ட காலம்: 1 ராஜாக்களின் புத்தகம் கி.மு. 560 முதல் கி.மு. 540 வரையிலுள்ள காலக்கட்டத்தின் இடையில் எழுதப்பட்டதாகும்.

எழுதப்பட்டதன் நோக்கம்: இந்த புத்தகம் 1 மற்றும் 2 சாமுவேல் புத்தகங்களின் தொடர்ச்சியாகும், மேலும் தாவீதின் மரணத்திற்குப் பிறகு சாலமோன் ராஜ்யபாரத்திற்கு வந்ததன் மூலம் தொடங்குகிறது. கதை ஒரு இஸ்ரவேலின் ஐக்கிய ராஜ்யத்துடன் தொடங்குகிறது, ஆனால் யூதா மற்றும் இஸ்ரவேல் என்று அழைக்கப்படும் 2 ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்ட நிலையில் முடிகிறது. 1 மற்றும் 2 ராஜாக்கள் புத்தகங்கள் எபிரேய மொழி வேதாகமத்தில் ஒரு புத்தகமாக இணைக்கப்பட்டுள்ளன.

திறவுகோல் வசனங்கள்: 1 ராஜாக்கள் 1:39, “உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன்.”

1 ராஜாக்கள் 9:3, “கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.”

1 ராஜாக்கள் 12:16, “ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.”

1 ராஜாக்கள் 12:28, “ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொன்னான்.”

1 ராஜாக்கள் 17:1, “கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.”

சுருக்கமான திரட்டு: 1 ராஜாக்களின் புத்தகம் சாலமோனிலிருந்து தொடங்கி எலியாவுடன் முடிவடைகிறது. இரண்டிற்கும் இடையிலான வேறுபாடு என்னவென்பதைப் பற்றிய ஒரு கருத்தை இந்த இடப்பட்ட காலம் உங்களுக்குத் தருகிறது. தாவீதுக்கும் பத்சேபாளுக்கும் இடையில் ஒரு அரண்மனை ஊழலுக்குப் பிறகு சாலமோன் பிறந்தார். அவரது தந்தையைப் போலவே, சாலமோனுக்கும் பெண்களுக்குமாக உள்ள ஒரு பலவீனம் இருந்தது, அது அவரை வீழ்த்தும்படி செய்தது. சாலமோன் முதலில் எல்லாவற்றையும் மிக நன்றாகச் செய்தார், ஞானத்திற்காக தேவனிடத்தில் ஜெபித்து, ஏறக்குறைய ஏழு வருடங்கள் எடுத்து தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டினார். ஆனால் பின்னர் அவர் தனக்காக ஒரு அரண்மனையை கட்ட 13 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். அவர் பல மனைவிகளைக் குவித்ததால், அது அவர்களுடைய சிலைகளை வணங்க அவரை வழிநடத்தியது, அவரை தேவனிடமிருந்து விலக்கியது. சாலமோனின் மரணத்திற்குப் பிறகு, இஸ்ரவேல் தொடர்ச்சியான ராஜாக்களால் ஆளப்பட்டது, அவர்களில் பெரும்பாலோனோர் தீயவர்களும் விக்கிரகாராதனையுமானவர்களாக இருந்தார்கள். இது, தேசத்தை தேவனிடமிருந்து விலக்கிக் கொண்டு சென்றது, எலியாவின் பிரசங்கத்தால் கூட அவர்களை மீண்டும் கொண்டு வர முடியவில்லை. இஸ்ரவேலில் பாகாலின் வழிபாட்டை புதிய உயரத்திற்குக் கொண்டுவந்த ஆகாபும் அவருடைய ராணியான யேசபேலும் மிகவும் தீய ராஜாக்களில் அடங்குவர். எலியா இஸ்ரவேலரை யெகோவாவின் வழிபாட்டிற்கு திருப்ப முயன்றார், பாகாலின் விக்கிரகாராதனை ஆசாரியர்களை கர்மேல் மலையில் தேவனுடன் மோதிக் கொள்ள சவால் விட்டார். இறுதியில் தேவனே வென்றார். இது யேசபேல் மகாராணியை கோபப்படுத்தியது. எலியாவின் மரணத்திற்கு அவள் கட்டளையிட்டாள், அதனால் அவன் ஓடிப்போய் வனாந்தரத்தில் ஒளிந்து கொண்டான். மனச்சோர்வடைந்து சோர்ந்துபோன அவர் இப்படியாக கூறினார்: “தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொன்னான்.” ஆனால் தேவன் தீர்க்கதரிசியிடம் உணவையும் ஊக்கத்தையும் அனுப்பி, "அமைதியான மெல்லிய சத்தத்தில்" அவரிடம் பேசினார், மேலும் இந்த செயல்பாட்டில் அவரது உயிரை பாதுகாத்து மேலும் தமது வேலைக்காக பயன்படுத்தினார்.

முன்னிழல்கள்: எருசலேமிலுள்ள ஆலயத்தில், மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவனுடைய ஆவியானவர் வசிப்பது, நாம் கிறிஸ்துவை விசுவாசித்து நம்முடைய சொந்த இரட்சராக ஏற்றுக்கொண்ட நம்முடைய இரட்சிப்பின் தருணத்திலிருந்து பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வசிக்கிறார் என்பதை முன்னறிவிக்கிறது. விக்கிரகாராதனையை இஸ்ரவேலர் கைவிட்டதைப் போலவே, தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கும் எதையும் நாம் தள்ளி ஒதுக்கி வைக்கவேண்டும். நாம் அவருடைய ஜனங்கள், ஜீவனுள்ள தேவனுடைய ஆலயம். 2 கொரிந்தியர் 6:16 நமக்கு சொல்கிறது, “தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.”

எலியா தீர்க்கதரிசி கிறிஸ்துவின் மற்றும் புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலர்களுக்கு முன்னோடியாக இருக்கிறார். எலியா மெய்யாகவே தேவனுடைய மனிதன் என்பதை நிரூபிக்க அற்புதமான காரியங்களைச் செய்யும்படிக்கு தேவன் அவருக்கு உதவினார். அவர் சாறிபாத்தின் விதவையின் மகனை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பினார், “நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன்" என்று அந்த விதபை சொன்னாள். அதேபோல், தேவனுடைய மனிதர்கள் தம்முடைய வல்லமையின் மூலம் அவருடைய வார்த்தைகளைப் பேசியவர்கள் என்பது புதிய ஏற்பாட்டில் தெளிவாகத் தெரிகிறது. இயேசு லாசருவை மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பியது மட்டுமல்லாமல், நாயீன் ஊர் விதவையின் மகனையும் (லூக்கா 7:14-15), யவீருவின் மகளையும் (லூக்கா 8:52-56) உயிரோடு எழுப்பினார். அப்போஸ்தலனாகிய பேதுரு தொற்காளை உயிரோடு எழுப்பினார் (அப்போஸ்தலர் 9:40), பவுல் ஐத்திகுவை உயிரோடு எழுப்பினார் (அப்போஸ்தலர் 20:9-12).

நடைமுறை பயன்பாடு: 1 ராஜாக்களின் புத்தகம் விசுவாசிகளுக்கு பல போதனைகளைக் கொண்டுள்ளது. நாம் வைத்திருக்கும் நிறுவனத்தைப் பற்றியும், குறிப்பாக நெருங்கிய தொடர்புகள் மற்றும் திருமணத்தைப் பற்றியும் ஒரு எச்சரிக்கையை நாம் காண்கிறோம். சாலமோனைப் போலவே, அந்நிய ஜாதி பெண்களை மணந்த இஸ்ரவேலின் ராஜாக்கள் தங்களையும் அவர்கள் தீமைக்கு ஆளானதோடு இல்லாமல் ஜனங்களையும் அம்பலப்படுத்தினர். கிறிஸ்துவ விசுவாசிகள் என்கிற வகையில், நண்பர்கள், வணிக கூட்டாளிகள், வாழ்க்கைத் துணைவர்கள் என நாம் யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். "மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்" (1 கொரிந்தியர் 15:33).

வனாந்தரத்தில் எலியாவின் அனுபவம் ஒரு மதிப்புமிக்க பாடத்தை கற்பிக்கிறது. கர்மேல் மலையில் பாகாலின் 450 தீர்க்கதரிசிகள் மீது அவர் பெற்ற நம்பமுடியாத வெற்றிக்கு பின்னர், யேசபேலைப் பின்தொடர்ந்து உயிரோடு தப்பி ஓடியபோது அவரது மகிழ்ச்சி துக்கமாக மாறியது. இத்தகைய “மலை உச்சியின்” அனுபவங்கள் பெரும்பாலும் ஒரு மந்தநிலை மற்றும் மனச்சோர்வு மற்றும் ஊக்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து கொண்டுவரும். கிறிஸ்தவ வாழ்க்கையில் இந்த வகை அனுபவங்களுக்கு நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆனால் நம்முடைய தேவன் உண்மையுள்ளவர், அவர் ஒருபோதும் நம்மை விட்டு விலகுவதில்லை, மற்றும் ஒருபோதும் கைவிடமாட்டார். எலியாவை ஊக்குவித்த அமைதியான, மெல்லிய சத்தம் நம்மையும் ஊக்குவிக்கும்.

English



முகப்பு பக்கம்

1 ராஜாக்களின் புத்தகம்
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries