settings icon
share icon
கேள்வி

வேலையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


“யாரும் வேலை செய்யக்கூடாது. உலகில் உள்ள அனைத்து துன்பங்களுக்கும் வேலைதான் ஆதாரம். நீங்கள் பெயரிட விரும்பும் எந்தவொரு தீமையும் வேலை செய்வதன் மூலமோ அல்லது வேலைக்காக வடிவமைக்கப்பட்ட உலகில் வாழ்வதிலிருந்தோ வருகிறது. துன்பத்தை நிறுத்த வேண்டுமானால், நாம் வேலை செய்வதை நிறுத்த வேண்டும்.” இந்த வார்த்தைகள் 1985 இல் பாப் பிளாக் எழுதிய "வேலை ஒழிப்பு (The Abolition of Work)" என்ற கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டுள்ள வரிகளாகும். ஒரு ஓய்வை-விரும்பும் கலாச்சாரத்தில், பலர் முழு மனதுடன் பிளாக்கின் உணர்வை எதிரொலிப்பார்கள். அமெரிக்கர்கள் சுமார் 50 சதவிகிதம் விழித்திருக்கும் நேரங்களை வேலைக்குச் செலவிடுகிறார்கள். வேலை ஒரு சாபமா, அல்லது அது மனிதர்கள் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒன்றா? பாப் பிளாக்கின் கூற்றுகளுக்கு முற்றிலும் மாறாக, வேலையின் முக்கியத்துவமும் நன்மை பயக்கும் தன்மையும் வேதாகமத்தில் ஒலிக்கும் கருப்பொருளாகும்.

வேலையின் தோற்றம் ஆதியாகமம் புத்தகத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பத்தியில், தேவன் முதன்மையான தொழிலாளி அல்லது வேலைக்காரர், உலக சிருஷ்டிப்பில் மும்முரமாக இருக்கிறார் (ஆதியாகமம் 1:1-15). தேவன் ஆறு நாட்கள் வேலை செய்து ஏழாவது நாளில் ஓய்ந்திருந்தார் என்று வேதாகமம் கூறுகிறது. பூமியில் முதலில் வேலை செய்தவர் தேவன்; எனவே, முறையான வேலை தேவனின் செயல்பாட்டை பிரதிபலிக்கிறது. கடவுள் இயல்பாகவே நல்லவராக இருப்பதால், வேலையும் இயல்பாகவே நல்லது (சங்கீதம் 25:8; எபேசியர் 4:28). மேலும், ஆதியாகமம் 1:31, தேவன் தம் கிரியையின் பலனைப் பார்த்தபோது, அதை “மிகவும் நல்லது” என்று அழைத்தார் என்று அறிவிக்கிறது. தேவன் அவரது வேலையின் தரத்தை ஆராய்ந்து மதிப்பீடு செய்தார், மேலும் அவர் ஒரு நல்ல வேலையைச் செய்தார் என்று அவர் தீர்மானித்தபோது, அவர் முடிவில் மகிழ்ச்சியடைந்தார். இந்த உதாரணத்தின் மூலம், வேலை பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. மிக உயர்ந்த தரமான விளைவை உருவாக்கும் வகையில் வேலை செய்யப்பட வேண்டும். வேலைக்கான வெகுமதி என்பது ஒரு நல்ல வேலையிலிருந்து கிடைக்கும் கனம் மற்றும் திருப்தி.

சங்கீதம் 19 கூறுகிறது, தேவன் தம்முடைய கிரியையின் மூலம் தன்னை உலகுக்கு வெளிப்படுத்துகிறார். இயற்கையான வெளிப்பாட்டின் மூலம், தேவனுடைய இருப்பு பூமியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தெரியப்படுத்தப்படுகிறது. இவ்வாறு, வேலை செய்பவரைப் பற்றி வேலை வெளிப்படுத்துகிறது. இது அடிப்படை குணம், உந்துதல்கள், திறன்கள், திறமைகள் மற்றும் ஆளுமைப் பண்புகளை வெளிப்படுத்துகிறது. மத்தேயு 7:15-20 ல் இயேசு இந்த கொள்கையை எதிரொலித்தார், நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும் என்று அறிவித்தார். ஏசாயா 43:7, தேவன் தம்முடைய மகிமைக்காக மனிதனைப் படைத்தார் என்று குறிப்பிடுகிறது. 1 கொரிந்தியர் 10:31ல் நாம் எதைச் செய்தாலும் அது அவருக்கு மகிமையாக இருக்க வேண்டும் என்று வாசிக்கிறோம். மகிமை செலுத்துதல் (Glorify) என்ற சொல்லுக்கு "ஒரு துல்லியமான பிரதிநிதித்துவத்தை வழங்குவது" என்று பொருள். எனவே, கிறிஸ்தவர்கள் செய்யும் வேலை, நீதி, உண்மை, மேன்மை ஆகியவற்றில் தேவனைப் பற்றிய துல்லியமான சித்திரத்தை உலகுக்கு அளிக்க வேண்டும்.

தேவன் மனிதனை தம்மைப் போன்ற குணாதிசயங்களுடன் தம் சாயலில் படைத்தார் (ஆதியாகமம் 1:26-31). உலகில் தன்னுடன் வேலை செய்ய மனிதனைப் படைத்தார். தேவன் ஒரு தோட்டத்தை நாட்டி, அதை பயிரிடவும் பராமரிக்கவும் ஆதாமை வைத்தார் (ஆதியாகமம் 2:8, 15). கூடுதலாக, ஆதாமும் ஏவாளும் பூமியை ஆட்கொண்டு ஆட்சி செய்ய வேண்டியிருந்தது. இந்த முதல் வேலை ஆணையின் அர்த்தம் என்ன? வளர்ப்பது என்பது வளர்ச்சியை வளர்ப்பது மற்றும் மேம்படுத்துவது. பராமரிப்பது என்பது தோல்வி அல்லது வீழ்ச்சியிலிருந்து பாதுகாப்பதாகும். அடக்குவது என்பது கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது. மேலாதிக்கம் என்பது நிர்வாகம், பொறுப்பேற்பது மற்றும் முடிவுகளை எடுப்பது என்பதாகும். இந்த ஆணை அனைத்து தொழில்களுக்கும் பொருந்தும். 15 ஆம் நூற்றாண்டின் சீர்திருத்தத் தலைவர்கள் தேவனுக்கு முன்பாக செய்யப்படும் ஒரு ஊழியமாக வேலையைப் பார்த்தனர். தேவனுக்கு முன்பாக ஒரு ஊழியமாக பார்க்கும்போது, வேலைகள் ஊழியங்களாக ஒப்புக் கொள்ளப்பட வேண்டும், மேலும் பணியிடங்கள் ஊழியத் துறைகளாக கருதப்பட வேண்டும்.

ஆதியாகமம் 3 இல் சித்தரிக்கப்பட்டுள்ள மனிதனின் வீழ்ச்சி வேலையின் தன்மையில் மாற்றத்தை உருவாக்கியது. ஆதாமின் பாவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, தேவன் ஆதியாகமம் 3:17-19 இல் பல நியாயத்தீர்ப்புகளை அறிவித்தார், அவற்றில் மிகவும் கடுமையானது மரணம். இருப்பினும், மற்ற நியாயத்தீர்ப்புகளில் உழைப்பு மற்றும் உழைப்பின் முடிவுகள் மையமாக உள்ளன. தேவன் நிலத்தை சபித்தார். வேலை கடினமாகிவிட்டது. உழைப்பு என்ற சொல் சவால், சிரமம், சோர்வு மற்றும் போராட்டம் ஆகியவற்றைக் குறிக்கிறது. வேலை இன்னும் நன்றாக இருந்தது, ஆனால் அது "தன் நெற்றியின் வியர்வையால்" நிறைவேற்றப்படும் என்று மனிதன் எதிர்பார்க்க வேண்டும். மேலும், முடிவு எப்போதும் நேர்மறையாக இருக்காது. மனிதன் வயலின் செடிகளை உண்டாலும், வயல் முட்களையும் முட்செடிகளையும் உற்பத்தி செய்யும். உழைப்பாளி எதிர்பார்க்கும் அல்லது விரும்பும் விதத்தில் கடின உழைப்பும் முயற்சியும் எப்போதும் பலனளிக்காது.

மனிதன் தோட்டத்திலிருந்து அல்ல, அவன் விதைக்கும் வயலின் விளைச்சலில் இருந்துதான் சாப்பிடுவான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு தோட்டம் என்பது தேவன் ஒரு பாதுகாப்பான உறையாக உருவாக்கிய பூமிக்குரிய பரலோகத்தின் அடையாளமாகும். தோட்டங்கள் தூய்மை மற்றும் அப்பாவித்தனத்தை அடையாளப்படுத்துகின்றன. பூமி அல்லது புலம், மறுபுறம், ஒரு எல்லையற்ற, பாதுகாப்பற்ற இடத்தைப் பிரதிபலிக்கிறது மற்றும் தடை மற்றும் உலகத்தன்மையின் இழப்பை வலியுறுத்துகிறது. எனவே, வேலைச்செய்யும் சூழல் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இருக்கலாம் (ஆதியாகமம் 39:1-23; யாத்திராகமம் 1:8-22; நெகேமியா 4).

மனிதனுக்கு வாழ்க்கையில் மூன்று அடிப்படைத் தேவைகள் உள்ளன என்று கூறப்படுகிறது: அன்பு, நோக்கம் மற்றும் முக்கியத்துவம். பல நேரங்களில், மனிதர்கள் வேலையில் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். பிரசங்கி 2:4-11 இல், சாலமோன் பல்வேறு திட்டங்கள் மற்றும் அனைத்து வகையான வேலைகளிலும் அர்த்தத்தைத் தேடுவதை விவரிக்கிறார். அந்த வேலை ஓரளவுக்கு நிறைவைத் தந்தாலும், அவருடைய முடிவு: “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை."

வேலையைப் பற்றிய பிற முக்கியமான வேதாகமக் கோட்பாடுகள்:

• வேலை செய்வது தொழிலாளிக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும் பயன்படுகிறது (யாத்திராகமம் 23:10-11; உபாகமம் 15:7-11; எபேசியர் 4:28).

• வேலை என்பது தேவனிடமிருந்து கிடைத்த பரிசு, அவருடைய ஜனங்களுக்கு, ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு காரியம் (சங்கீதம் 104:1-35; 127:1-5; பிரசங்கி 3:12-13; 5:18-20; நீதிமொழிகள் 14:23).

• தேவன் தம்முடைய ஜனங்களை அவர்களுடைய வேலைக்காகச் சீர்பொருந்தப்பண்ணுகிறார் (யாத்திராகமம் 31:2-11).

சமூகத்தில் வேலையில்லாதவர்கள், காப்பீடு இல்லாதவர்கள் மற்றும் படிக்காதவர்களுக்கான சமூகப் பொறுப்புகள் மற்றும் கடமைகள் பற்றி சமீபத்தில் அதிக விவாதம் உள்ளது. வேதாகம நலத்திட்ட அமைப்பு ஒரு வேலை முறை (லேவியராகமம் 19:10; 23:22) என்பதைக் குறிப்பிடுவது சுவாரஸ்யமானது. சோம்பேறித்தனத்தைக் கண்டிப்பதில் வேதாகமம் கடுமையாக உள்ளது (நீதிமொழிகள் 18:9). பவுல் கிறிஸ்தவ பணி நெறிமுறைகளை மிகத் தெளிவாகக் கூறுகிறார்: "ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்" (1 தீமோத்தேயு 5:8).

கூடுதலாக, வேலை செய்ய விரும்பாதவர்களைக் குறித்து மற்றொரு திருச்சபைக்கு எழுதிய பவுலின் அறிவுரை என்னவென்றால், "நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற போதனையின்படி வாழாமல் சோம்பேறியாய் இருக்கும் ஒவ்வொரு சகோதரனையும் விட்டு விலகி இருங்கள்." மேலும், "ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே”. அதற்குப் பதிலாக, வேலைச்செய்யாமல் சும்மா இருந்தவர்களை பவுல் அறிவுறுத்துகிறார், "இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்” (2 தெசலோனிக்கேயர் 3:12).

வேலைக்கான தேவனுடைய முதல் வடிவமைப்பு பாவத்தால் சிதைக்கப்பட்டிருந்தாலும், பாவம் அறிமுகப்படுத்திய சுமைகள் இல்லாமல் தேவன் ஒரு நாள் வேலையை மீட்டெடுப்பார் (ஏசாயா 65:17-25; வெளிப்படுத்துதல் 15:1-4; 22:1-11.) புதிய வானங்களும் புதிய பூமியும் அமைக்கப்படும் அந்த நாள் வரை, வேலையைப் பற்றிய கிறிஸ்தவ மனப்பான்மை இயேசுவைப் பிரதிபலிக்க வேண்டும்: "நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது" (யோவான் 4:34) .

English



முகப்பு பக்கம்

வேலையைக் குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries