settings icon
share icon
கேள்வி

விசுவாசத்தைப் பற்றி வேதாகமம் என்னச் சொல்லுகிறது?

பதில்


எபிரெயர் 11:1 விசுவாசமானது “நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்று நமக்குச் சொல்கிறது. விசுவாசத்தை விட கிறிஸ்தவ வாழ்க்கையின் வேறு எந்த காரியமும் முக்கியமானதாக இருக்காது. அதை வாங்கவோ, விற்கவோ, நண்பர்களுக்கு கொடுக்கவோ முடியாது. எனவே விசுவாசம் என்றால் என்ன, கிறிஸ்தவ வாழ்க்கையில் விசுவாசம் என்ன பங்கு வகிக்கிறது? அகராதி விசுவாசத்தை "யாரோ ஒருவரில் அல்லது ஏதோவொன்றில், குறிப்பாக தர்க்கரீதியான ஆதாரம் எதுவும் இல்லாமல், வைக்கும் நம்பிக்கை, பக்தி அல்லது உறுதி" என்று வரையறுக்கிறது. இது விசுவாசத்தை "தேவன் மீதான நம்பிக்கை மற்றும் பக்தி" என்றும் வரையறுக்கிறது. விசுவாசத்தைப் பற்றியும் அது எவ்வளவு முக்கியம் என்பதையும் பற்றி வேதாகமம் இன்னும் நிறைய சொல்லுகிறது. உண்மையில், விசுவாசம் இல்லாமல் தேவனுடன் நமக்கு எந்த உறவும் இடமுமில்லை என்பது மிகவும் முக்கியமானது, மேலும் விசுவாசமில்லாமல் அவரைப் பிரியப்படுத்துவது சாத்தியமற்றது (எபிரெயர் 11:6). விசுவாசம் என்பது ஒரு உண்மையான தேவனை நாம் மெய்யாகவே பார்க்காமல் நம்புவது ஆகும்.

விசுவாசம் எங்கிருந்து வருகிறது? விசுவாசம் என்பது நாம் சுயமாக கற்பனை செய்துகொள்ளும் ஒன்றல்ல, அல்லது நாம் பிறக்கும்போதே நம்மோடு இருக்கும் ஒன்றல்ல, அல்லது ஆவிக்குரிய வாழக்கையைக் குறித்துப் படிப்பதில் விடாமுயற்சி அல்லது பின்தொடர்வதன் விளைவாக வருவது விசுவாசம் இல்லை. எபேசியர் 2:8-9, விசுவாசம் என்பது தேவனிடமிருந்து கிடைத்த பரிசு என்பதைத் தெளிவுபடுத்துகிறது, நாம் அதற்குத் தகுதியானவர்கள், சம்பாதித்தோம், அல்லது அதைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்பதற்காக அல்ல. அது நம்மிடமிருந்து அல்ல; அது தேவனிடமிருந்தே வருகிறதாய் இருக்கிறது. இது நமது பெலத்தியினாலோ அல்லது நமது விருப்பத்தினாலோ பெறப்படவில்லை. இது தேவனால், அவருடைய பரிசுத்த திட்டம் மற்றும் நோக்கத்தின்படி, அவருடைய கிருபை மற்றும் இரக்கத்தின்படி எளிமையாக நமக்கு வழங்கப்படுகிறது, அதன் காரணமாக, அவர் எல்லா மகிமையையும் பெறுகிறார்.

ஏன் விசுவாசம் இருக்கவேண்டும்? தேவன் தனக்குச் சொந்தமானவர்களையும் தனக்குச் சொந்தமில்லாதவர்களையும் வேறுபடுத்துவதற்கான ஒரு வழியை வடிவமைத்தார், அது விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது. மிக எளிமையாக கூறுவோமானால், தேவனைப் பிரியப்படுத்த நமக்கு விசுவாசம் தேவை. நாம் அவரைப் பார்க்க முடியாவிட்டாலும், நாம் அவரை நம்புவது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தேவன் கூறுகிறார். எபிரெயர் 11:6-ன் ஒரு முக்கிய பகுதி, “அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” என்று நமக்குச் சொல்கிறது. தேவனிடமிருந்து எதையாவது பெற வேண்டும் என்பதற்காகவே நாம் தேவன் மீது விசுவாசம் வைத்துள்ளோம் என்று சொல்ல முடியாது. இருப்பினும், கீழ்ப்படிதலையும் உண்மையுள்ளவர்களையும் ஆசீர்வதிக்க தேவன் விரும்புகிறார். லூக்கா 7:50ல் இதற்கு ஒரு சிறந்த உதாரணத்தைக் காண்கிறோம். விசுவாசம் ஏன் மிகவும் பலனளிக்கிறது என்பதைப் பற்றிய ஒரு பார்வையை நமக்குத் தரும்போது, இயேசு ஒரு பாவமுள்ள பெண்ணுடன் உரையாடலில் ஈடுபட்டுள்ளார். “உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்." அந்தப் பெண் இயேசு கிறிஸ்துவை விசுவாசத்தால் நம்பினாள், அதற்காக அவர் அவளுக்கு வெகுமதி அளித்தார். முடிவில், விசுவாசமே நம்மை இறுதிவரை நிலைநிறுத்துகிறது, நாம் நித்தியத்திற்கும் தேவனுடன் பரலோகத்தில் இருப்போம் என்பதை விசுவாசத்தின் மூலம் அறிந்துகொள்வது. “அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள்" (1 பேதுரு 1:8-9).

விசுவாசத்தின் எடுத்துக்காட்டுகள். எபிரேயர் 11-ஆம் அதிகாரம் "விசுவாச அதிகாரம்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அதில் விசுவாசத்தின் பெரிய செயல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. விசுவாசத்தினால் ஆபேல் கர்த்தருக்குப் பிரியமான பலியைச் செலுத்தினான் (வசனம் 4); விசுவாசத்தினால் நோவா மழையை அறிந்திராத காலத்தில் பேழையைத் தயார் செய்தார் (வசனம் 7); விசுவாசத்தின் மூலம் ஆபிரகாம் தனது வீட்டை விட்டு வெளியேறி, எங்கு செல்ல வேண்டும் என்ற தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார், அவர் எங்கு போகிறோம் என்கிற இடம் தெரியாமலே அங்குச் சென்றார், பின்னர் தனது ஒரே மகனை மனவிருப்பத்துடன் ஒப்புக்கொடுத்தார் (வசனங்கள் 8-10, 17); விசுவாசத்தினாலே மோசே இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து வெளியேக் கொண்டுவந்தார் (வசனங்கள் 23-29); விசுவாசத்தினாலே ராகாப் இஸ்ரவேலின் உளவாளிகளைப் வரவேற்றுக்கொண்டு அவர்கள் உயிரைக் காப்பாற்றினாள் (வசனம் 31). விசுவாசத்தின் மேலும் பல வீரர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர், “விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள்” (வசனங்கள் 33-34). தெளிவாக, விசுவாசத்தின் இருப்பானது செயலால் நிரூபிக்கப்படுகிறது.

விசுவாசமே கிறிஸ்தவத்தின் மூலக்கல்லாயிருக்கிறது. தேவன் பேரில் விசுவாசம் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தாமல் அவருடன் நமக்கு இடமில்லை. விசுவாசத்தினால் தேவன் இருப்பதை நாம் நம்புகிறோம். பெரும்பாலான ஜனங்கள் தேவன் யார் என்பதில் தெளிவற்ற, முரண்பாடான கருத்தைக் கொண்டுள்ளனர், ஆனால் அவர்களின் வாழ்க்கையில் அவருடைய உயர்ந்த நிலைக்குத் தேவையான கனம் இல்லை. தங்களை நேசிக்கும் தேவனுடன் நித்திய உறவைப் பேணுவதற்குத் தேவையான உண்மையான விசுவாசம் இந்த ஜனங்களுக்கு இல்லை. விசுவாசம் சில சமயங்களில் நம்மைத் தோல்வியடையச் செய்யலாம், ஆனால் அது தேவனுடைய பரிசு, அவருடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்டதால், நம்முடைய விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபிக்கவும், அதைக் கூர்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் அவர் சோதனை மற்றும் சோதனை நேரங்களை வழங்குகிறார். அதனால்தான் யாக்கோபு அதை "மிகுந்த சந்தோஷம்" என்று கருதுகிறார், ஏனென்றால் நமது விசுவாசத்தின் சோதனை விடாமுயற்சியை உருவாக்குகிறது மற்றும் நம்மை பக்குவப்படுத்துகிறது, நமது விசுவாசம் உண்மையானது என்பதற்கான ஆதாரத்தை வழங்குகிறது (யாக்கோபு 1:2-4).

English



முகப்பு பக்கம்

விசுவாசத்தைப் பற்றி வேதாகமம் என்னச் சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries