settings icon
share icon
கேள்வி

வேதாகமத்தில் உள்ள உடன்படிக்கைகள் யாவை?

பதில்


வேதாகமம் ஏழு வெவ்வேறு உடன்படிக்கைகளைக் குறித்துப் பேசுகிறது, அவற்றில் நான்கு (ஆபிராம், பாலஸ்தீனம், மோசே, தாவீது) தேவன் இஸ்ரவேல் தேசத்துடன் செய்தார் மற்றும் அவை இயற்கையில் நிபந்தனையற்றவை ஆகும். அதாவது, இஸ்ரவேலின் கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையைப் பொருட்படுத்தாமல், தேவன் இஸ்ரவேலுடன் இந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றுவார். உடன்படிக்கைகளில் ஒன்றான மோசேயின் உடன்படிக்கை இயற்கையில் நிபந்தனைக்கு உட்பட்டது. அதாவது, இந்த உடன்படிக்கை இஸ்ரவேலின் கீழ்ப்படிதல் அல்லது கீழ்ப்படியாமையைப் பொறுத்து ஆசீர்வாதத்தையோ அல்லது சாபத்தையோ கொண்டுவரும். மூன்று உடன்படிக்கைகள் (ஆதாம், நோவா, மற்றும் புதிய உடன்படிக்கை) பொதுவாக கடவுளுக்கும் மனிதகுலத்துக்கும் இடையே செய்யப்பட்டவை, அவை இஸ்ரவேல் தேசத்திற்கு மட்டும் உரியது அல்ல.

ஆதாமின் உடன்படிக்கையை இரண்டு பகுதிகளாகக் காணலாம்: ஏதேனின் உடன்படிக்கை (அறியாமை) மற்றும் ஆதாமின் உடன்படிக்கை (கிருபை) (ஆதியாகமம் 3:16-19). ஏதேனின் உடன்படிக்கை ஆதியாகமம் 1:26-30; 2:16-17 இல் காணப்படுகிறது. ஏதேனின் உடன்படிக்கை சிருஷ்டிப்பின் மீதான மனிதனின் பொறுப்பையும் நன்மை தீமை அறியும் விருட்சத்தைப் பற்றிய தேவனுடைய கட்டளையையும் கோடிட்டுக் காட்டியது. ஆதாம் மற்றும் ஏவாளின் பாவத்திற்காக மனிதகுலத்திற்கு எதிராக உச்சரிக்கப்படும் சாபங்களையும், அந்த பாவத்திற்கான தேவனுடைய ஏற்பாட்டையும் ஆதாமின் உடன்படிக்கையானது உள்ளடக்கியுள்ளது (ஆதியாகமம் 3:15).

நோவாவின் உடன்படிக்கை என்பது தேவன் மற்றும் நோவா (குறிப்பாக) மற்றும் மனிதகுலம் (பொதுவாக) இடையே செய்த நிபந்தனையற்ற உடன்படிக்கை ஆகும். ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, பூமியில் உள்ள அனைத்து உயிர்களையும் வெள்ளத்தால் அழிக்க மாட்டேன் என்று தேவன் மனிதகுலத்திற்கு வாக்குறுதி அளித்தார் (ஆதியாகமம் 9-ஆம் அதிகாரத்தைப் பார்க்கவும்). தேவன் உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லைக் கொடுத்தார், அது முழு பூமிக்கும் இனி ஒருபோதும் ஜலப்பிரளயம் வராது என்ற வாக்குறுதியும், தேவனால் பாவத்தை நியாயந்தீர்க்க முடியும் என்பதையும் நினைவூட்டுகிறது (2 பேதுரு 2:5).

ஆபிரகாமின் உடன்படிக்கை (ஆதியாகமம் 12:1-3, 6-7; 13:14-17; 15; 17:1-14; 22:15-18). இந்த உடன்படிக்கையில், தேவன் ஆபிரகாமுக்கு பலவற்றை வாக்குறுதி அளித்தார். ஆபிரகாமைப் பெரிய ஜாதியாக்கி அவனின் பேரைப் பேரைப் பெருமைப்படுத்துவேன் என்றும் (ஆதியாகமம் 12:2), ஆபிரகாமுக்கு திரளான சரீர சந்ததிகள் இருப்பார்கள் என்றும் (ஆதியாகமம் 13:16) அவர் தனிப்பட்ட முறையில் வாக்குறுதி அளித்தார் (ஆதியாகமம் 17:4-5). இஸ்ரவேல் என்ற தேசத்தைக் குறித்தும் தேவன் வாக்குறுதிகளை அளித்தார். உண்மையில், ஆதியாகமம் புத்தகத்தில் (12:7; 13:14-15; 15:18-21) ஆபிரகாமின் உடன்படிக்கையின் புவியியல் எல்லைகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளன. ஆபிரகாமிய உடன்படிக்கையில் உள்ள மற்றொரு ஏற்பாடு என்னவென்றால், ஆபிரகாமின் பௌதிக வரிசையின் மூலம் உலகின் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படும் (ஆதியாகமம் 12:3; 22:18). இது ஆபிரகாமின் பரம்பரையில் வரும் மேசியாவைப் பற்றிய குறிப்பு.

பாலஸ்தீனிய உடன்படிக்கை (உபாகமம் 30:1-10). பாலஸ்தீனிய உடன்படிக்கை ஆபிரகாமின் உடன்படிக்கையில் விவரிக்கப்பட்ட நில அம்சத்தை விரிவுபடுத்துகிறது. இந்த உடன்படிக்கையின் விதிமுறைகளின்படி, ஜனங்கள் கீழ்ப்படியாமல் போனால், தேவன் அவர்களை உலகம் முழுவதும் சிதறடிக்கச் செய்வார் (உபாகமம் 30:3-4), ஆனால் அவர் இறுதியில் தேசத்தை மீட்டெடுப்பார் (வசனம் 5). தேசம் மீட்கப்படும்போது, அவர்கள் அவருக்கு பரிபூரணமாக கீழ்ப்படிவார்கள் (வசனம் 8), மேலும் தேவன் அவர்களை செழிக்க வைப்பார் (வசனம் 9).

மோசேயின் உடன்படிக்கை (உபாகமம் 11; மற்றும் பல.). மோசேயின் உடன்படிக்கை ஒரு நிபந்தனையோடுள்ள உடன்படிக்கையாகும், இது கீழ்ப்படிதலுக்கான தேவனுடைய நேரடி ஆசீர்வாதத்தை அல்லது இஸ்ரவேல் தேசத்தின் மீது கீழ்ப்படியாமைக்காக தேவனுடைய நேரடி சாபத்தை கொண்டு வந்தது. மோசேயின் உடன்படிக்கையின் ஒரு பகுதியானது பத்து கட்டளைகள் (யாத்திராகமம் 20) மற்றும் 600 க்கும் மேற்பட்ட கட்டளைகளை உள்ளடக்கிய நியாயப்பிரமாணத்தின் மீதமுள்ளவை - தோராயமாக 300 நேர்மறை மற்றும் 300 எதிர்மறை கட்டளைகள். பழைய ஏற்பாட்டின் வரலாற்றுப் புத்தகங்கள் (யோசுவா முதல் எஸ்தர் வரை) இஸ்ரவேல் எவ்வாறு நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதில் வெற்றி பெற்றது அல்லது இஸ்ரவேல் எவ்வாறு நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிவதில் மோசமாகத் தோல்வியடைந்தது என்பதை விவரிக்கிறது. உபாகமம் 11:26-28 ஆசீர்வாதம் / சபித்தல் ஆகிய மையக்கருத்தை விவரிக்கிறது.

தாவீதின் உடன்படிக்கை (2 சாமுவேல் 7:8-16). தாவீதின் உடன்படிக்கை ஆபிரகாமின் உடன்படிக்கையின் "வித்து" என்னும் அம்சத்தைப் விவரிக்கிறது. இந்த பத்தியில் தாவீதுக்கு அளித்த வாக்குறுதிகள் குறிப்பிடத்தக்கவை. தாவீதின் பரம்பரை என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் அவனுடைய ராஜ்யம் நிரந்தரமாக அழியாது என்றும் தேவன் வாக்குறுதி அளித்தார் (வசனம் 16). வெளிப்படையாக, தாவீதின் சிங்காசனம் எல்லா காலங்களிலும் இடத்தில் இல்லை. எவ்வாறாயினும், தாவீதின் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் சிங்காசனத்தில் அமர்ந்து ராஜாவாக ஆட்சி செய்யும் காலம் வரும். இனி வரவிருக்கிற அந்த வருங்கால ராஜா இயேசு (லூக்கா 1:32-33).

புதிய உடன்படிக்கை (எரேமியா 31:31-34). புதிய உடன்படிக்கை என்பது முதலில் இஸ்ரவேல் தேசத்துடனும், இறுதியில் அனைத்து மனிதகுலத்துடனும் செய்யப்பட்ட உடன்படிக்கையாகும். புதிய உடன்படிக்கையில், தேவன் பாவத்தை மன்னிப்பதாக வாக்களிக்கிறார், மேலும் கர்த்தரைப் பற்றிய உலகளாவிய அறிவு இருக்கும். இயேசு கிறிஸ்து மோசேயின் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்ற வந்தார் (மத்தேயு 5:17) மற்றும் தேவனுக்கும் அவருடைய ஜனங்களுக்கும் இடையே ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்கினார். இப்போது நாம் புதிய உடன்படிக்கையின் கீழ் இருப்பதால், யூதர்கள் மற்றும் புறஜாதிகள் இருவரும் நியாயப்பிரமாணத்தின் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படலாம். இரட்சிப்பை இலவச பரிசாகப் பெறுவதற்கான வாய்ப்பு இப்போது நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது (எபேசியர் 2:8-9).

வேதாகம உடன்படிக்கைகளின் விவாதத்தில், கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளாத சில விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, சில கிறிஸ்தவர்கள் உடன்படிக்கைகள் அனைத்தும் இயற்கையில் நிபந்தனைக்குட்பட்டவை என்று நினைக்கிறார்கள். உடன்படிக்கைகள் நிபந்தனைக்குட்பட்டதாக இருந்தால், அவற்றை நிறைவேற்றுவதில் இஸ்ரவேல் படுதோல்வி அடைந்தது. மற்றவர்கள் நிபந்தனையற்ற உடன்படிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றும், இஸ்ரேலின் கீழ்ப்படியாமையைப் பொருட்படுத்தாமல், எதிர்காலத்தில் எப்போதாவது பலனளிக்கும் என்றும் நம்புகிறார்கள். இரண்டாவதாக, இயேசு கிறிஸ்துவின் சபை உடன்படிக்கைகளுடன் எவ்வாறு தொடர்புடையது? சபை உடன்படிக்கைகளை நிறைவேற்றுகிறது என்றும், தேவன் மீண்டும் இஸ்ரவேலுடன் தொடர்பு கொள்ள மாட்டார் என்றும் சிலர் நம்புகிறார்கள். இது மாற்று இறையியல் என்று அழைக்கப்படுகிறது மற்றும் சிறிய வேத ஆதாரங்களைக் கொண்டுள்ளது. சபை ஆரம்பத்தில் அல்லது பகுதியாக இந்த உடன்படிக்கைகளை நிறைவேற்றும் என்று மற்றவர்கள் நம்புகிறார்கள். இஸ்ரேவேல் மீதான பல வாக்குறுதிகள் இன்னும் எதிர்காலத்தில் இருந்தாலும், சபை ஏதோவொரு விதத்தில் உடன்படிக்கைகளில் பங்கு கொள்கிறது என்று பலர் நம்புகிறார்கள். மற்றவர்கள் உடன்படிக்கைகள் இஸ்ரவேலுக்காகவும் இஸ்ரவேலுக்காக மட்டுமே இருப்பதாகவும், இந்த உடன்படிக்கைகளில் சபைக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் நம்புகிறார்கள்.

English



முகப்பு பக்கம்

வேதாகமத்தில் உள்ள உடன்படிக்கைகள் யாவை?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries