settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவ உபவாசம் – வேதாகமம் என்ன சொல்லுகிறது?

பதில்


கிறிஸ்தவர்கள் உபவாசிக்க வேண்டும் என்று வேதம் கட்டளையிடுகிறதில்லை. தேவனும் கிறிஸ்தவர்கள் உபவாசிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறதுமில்லை. அதே நேரத்தில், உபவாசம் நல்லது, பயனுள்ளது, பிரயோஜனமானது என்று வேதாகமம் சொல்லுகிறது. மிக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் முன்பாக விசுவாசிகள் உபவாசிக்கிறதை அப்போஸ்த்தலருடைய நடபடிகளின் புத்தகம் குறிப்பிடுகிறது (அப்போஸ்தலர் 13:2; 14:23). உபவாசமும் ஜெபமும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதைக் கண்டுகொள்ளலாம் (லூக்கா 2:37; 5:33). பெரும்பாலும், உபவாசத்தின் கவனம் முழுவதும் சாப்பிடாமல் பட்டினியாய் இருப்பதன்மேலேயே செல்லுகிறது. ஆனால், மெய்யான உபவாசம் என்பது, உபவாசத்தின்போது நமது கவனம் இந்த உலகத்திலுள்ளவைகளின்மேல் வைக்காமல், நமது கண்களை இவைகளுக்கு விலக்கி தேவன்மேல் மட்டும் முழு கவனம் செலுத்துவதாகும். உபவாசமானது தேவனோடிருக்கும் நமது உறவை நாம் மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம் என்பதை தேவனுக்கும் நமக்கு நாமேயும் வெளிப்படுத்துகிற ஒரு செயலாக இருக்கிறது. உபவாசத்தின் மூலமாக நாம் தேவனைக் குறித்த ஒரு புதிய உளக்காட்சியைப் பெறுகிறோம். மேலும் தேவன்மேல் நமக்கிருக்கும் நம்பிக்கையும் புதுப்பிக்கப்படுகிறது.

வேதாகமத்தில் உபவாசம் என்பது பெரும்பாலும் அல்லது எப்பொழுதுமே ஆகாரத்தைப் புசிக்காமல் அதை விலக்குகிறதாக சொல்லப்பட்டிருந்தாலும், உபவாசிக்க மற்ற வழிகளும் உண்டு. தேவன்மேல் நம் முழு கவனத்தையும் செலுத்தும்படி நாம் தற்காலிகமாக நம்மிலிருந்து விலக்கி வைக்கிற காரியங்கள் கூட உபவாசம் எனக் கருதப்படும் (1 கொரிந்தியர் 7:1-5). உபவாசம் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குட்பட்டதாய் அல்லது நேரத்தை நிர்ணயிக்கிறதாக இருக்க வேண்டும், குறிப்பாக உணவை நாம் ஒதுக்கிவைத்து உபவாசிக்கும்போது. உணவில்லாமல் அதிக நாட்கள் அல்லது காலம் உபவாசமாக இருப்பது நம் சரீரத்திற்கு ஆபத்தானதாகும். உபவாசம் என்பது நம் மாம்சத்தை ஒடுக்குகிறதற்கல்ல, மாறாக நமது கவனம் முழுவதையும் தேவனிடத்தில் செலுத்துகிறதற்கே என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். உபவாசம் என்பதை ஒரு “உணவு கட்டுப்பாட்டு முறை” எனக் கருதிவிடக்கூடாது. வேதாகமம் கூறுகிற உபவாசத்தின் நோக்கம், நமது சரீர எடையைக் குறைத்துக்கொள்வதல்ல மாறாக தேவனோடு ஆழமான உறவுவைத்துக்கொள்வதற்கேயாகும். யார் வேண்டுமானாலும் உபவாசிக்கலாம், ஒரு சிலரால் உணவை ஒதுக்கிவைத்து உபவாசிக்க முடியாமல் போகலாம் (உதாரணமாக, சக்கரைவியாதி உள்ளவர்கள்). தேவனோடு கிட்டிச் சேருவதற்காக தற்காலிகமாக சில காரியங்களை எல்லோராலும் விட முடியும்.

இந்த உலகத்தில் உள்ளவைகளிலிருந்து நமது கண்களை அதாவது கவனத்தை எடுத்துவிட்டு, கிறிஸ்துவின்மேல் நமது கவனத்தை செலுத்துவதன் மூலம் நாம் ஜெயமுள்ளவர்களாக இருக்கமுடியும். உபவாசம் என்பது நமக்கு வேண்டிய காரியங்களை தேவனைக்கொண்டு செய்யவைக்கின்ற ஒரு வழி அல்ல. உபவாசமானது நம்மைத்தான் மாற்றுகிறது, தேவனை அல்ல. உபவாசம் என்பது மற்றவர்களைக் காட்டிலும் நம்மை மிகுந்த ஆவிக்குரியவர்களாக காண்பித்துக்கொள்வதற்காக அல்ல, தாழ்மையுள்ள ஆவியோடும் மகிழ்ச்சியான மனதோடும் நாம் உபவாசிக்க வேண்டும். மத்தேயு 6:16-18 கூறுகிறது, “நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்.”

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவ உபவாசம் – வேதாகமம் என்ன சொல்லுகிறது?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries