settings icon
share icon
கேள்வி

நித்திய பாதுகாப்பு வேதாகமத்தின்படியானதுதானா?

பதில்


மக்கள் கிறிஸ்துவை இரட்சகராக அறிந்துகொள்ளும்பொழுது, நித்திய பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கும், தேவனோடுக்கூடிய ஒர் உறவுக்குள் கொண்டுவரப்படுகிறார்கள். “வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்” என்று யூதா 24 பறைசாற்றுகிறது. கர்த்தரின் வல்லமை விசுவாசியை வழுவாமல் காக்க முடியும். தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே நம்மை நிறுத்துவது அவரைப் பொறுத்ததாகும் நம்மைப் பொறுத்ததல்ல. நமது நித்திய பாதுகாப்பு என்பது நாம் நமது சொந்த முயற்சியினால் நம்முடைய இரட்சிப்பை பாதுகாத்துக்கொள்வதல்ல, அது தேவனே நம்மைக் காப்பதன் பலனாகும்.

“நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது” (யோவான் 10:28-29) என்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உரைக்கிறார். இயேசுவும் பிதாவும் தங்களுடைய கரங்களில் நம்மை உறுதியாகப் பிடித்திருக்கிறார்கள். பிதா மற்றும் குமாரன் ஆகிய இருவருடைய இறுக்கமான பிடியிலிருந்து நம்மைப் பிரிப்பவர் யார்?

விசுவாசிகள் யாவரும் அவர்களுடைய “மீட்பின் நாளுக்கென்று முத்திரையிடப்பட்டிருக்கிறார்கள்” என்று எபேசியர் 4:30 கூறுகிறது. விசுவாசிகளுக்கு நித்தியமான பாதுகாப்பு இல்லையெனில், முத்திரையிடப்படுவது மீட்பின் நாளுக்கென்பதாக இருக்காது மாறாக பாவத்தில் விழும் நாள்வரை, விசுவாசத்தை மறுதலிக்கும் நாள்வரை, மற்றும் நம்பிக்கையை இழக்கும் நாள்வரை என்றுதான் இருக்கக்கூடும். யாரெல்லாம் இயேசுக் கிறிஸ்துவை விசுவாசிக்கிறார்களோ அவர்களுக்கு “நித்திய ஜீவன் உண்டு” என்பதாக யோவான் 3:15-16 கூறுகிறது. ஒருவருக்கு நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டு பின்னர் அது எடுக்கப்பட்டுவிடுமெனில் அது முதலாவது “நித்தியமாக” இருக்கமுடியாது. நித்திய பாதுகாப்பு உண்மையில்லையெனில், வேதாகமத்தில் நித்திய ஜீவனைக் குறித்தான வாக்குத்தத்தங்கள் அனைத்தும் தவறானதாக அல்லது பிழைகளாக இருக்கும்.

நித்திய பாதுகாப்பிற்கான மிக வலிமையான வாதம் ரோமர் 8:38-39 ஆகும், “மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்”. .நம்முடைய நித்திய பாதுகாப்பு, தம்மால் மீட்கப்பட்டவர்களுக்காக தேவன் காண்பிக்கும் அன்பை ஆதாரமாகக் கொண்டது ஆகும். நம்முடைய நித்திய பாதுகாப்பு, கிறிஸ்துவினாலே வாங்கப்பட்டும், பிதாவினாலே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டும், பரிசுத்த ஆவியினாலே முத்திரையிடப்பட்டுமிருக்கிறது.

English



முகப்பு பக்கம்

நித்திய பாதுகாப்பு வேதாகமத்தின்படியானதுதானா?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries