settings icon
share icon
கேள்வி

கிறிஸ்தவம் என்றால் என்ன? கிறிஸ்தவர்கள் என்ன விசுவாசிக்கிறார்கள்?

பதில்


கிறிஸ்தவ விசுவாசத்தின் மையப்பகுதி 1 கொரி. 15:1-4 வரையுள்ள வசனங்களில் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். அவர்மேல் விசுவாசம் வைக்கிற யாவருக்கும் இரட்சிப்பை வழங்குகிறார். பிற விசுவாசங்களை காட்டிலும் கிறிஸ்தவ விசுவாசம் எந்த வகையில் விசேஷித்து இருக்கிறது என்றால், அதற்கு காரணம் கிறிஸ்தவம் மத சடங்குகளை காட்டிலும் உறவுகளில் கரிசனையுள்ளதாக இருக்கிறது. இதைச் செய் அதைச் செய்யாதே என்கிற நியமங்களை விட தேவனோடு நெருங்கி வாழ்கிற உறவில் முக்கியத்துவம் காண்பிக்கிறதாக இருக்கிறது. இந்த உறவும் ஐக்கியமும் சாத்தியமானது இயேசு கிறிஸ்து செய்து முடித்த செயல்களிலும் ஆவியானவர் தொடர்ந்து நம்மில் செய்து வருகிற ஊழியத்திலும் அடங்கி இருக்கிறது.

இப்படிப்பட்ட பிரதான காரியங்களோடு சில முக்கியமான விசுவாச போதனைகளிலும் கிறிஸ்தவம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது என்றும் தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது என்றும் விசுவாசிக்கிறார்கள் (2 தீமோ. 3:16, 17; 2 பேதுரு 1:20-21). கிறிஸ்தவர்கள் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய மூன்று ஆள்தன்மைகளில் தேவன் நம்மை வெளிபடுத்துகிறார் என்றும் விசுவாசிக்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் தேவன் மனிதனை தன்னோடு ஐக்கியம் கொள்ள வேண்டும் என்பதற்காக படைத்தார் என்றும், ஆனால் அவனுடைய பாவம் தேவனை விட்டு அவனை பிரித்தது என்றும் விசுவாசிக்கிறார்கள் (ரோமர் 5:12; 3:23). இயேசு கிறிஸ்து இந்த பூமியில் முற்றிலும் மனிதனாகவும் முற்றிலும் தெய்வமாகவும் சுற்றி திரிந்தார் என்றும், அந்தபடியே சிலுவையிலும் மரித்தார் என்று கிறிஸ்தவம் போதிக்கிறது (பிலிப்பியர் 2:6-11). இயேசு கிறிஸ்து மரித்தபின் அடக்கம் பண்ணபட்டு, உயிர்த்தெழுந்து விசுவாசிகளுக்காக பிதாவின் வலது பாரிசத்தில் இருந்துகொண்டு பரிந்து பேசுகிறார் (எபிரெயர் 7:25) என்று கிறிஸ்தவர்கள் விசுவாசிக்கிறார்கள். இயேசுவின் சிலுவை மரணம் பாவங்கள் மன்னிக்கபடுவதற்கும் தேவனுடன் முறிக்கப்பட்டதான மனித உறவு மீண்டும் சரிபடவும் போதுமானது என்று கிறிஸ்தவம் பறைசாற்றுகிறது (எபிரெயர் 9:11-14; 10:10; ரோமர் 5:8; 6:23).

ஒருவர் இரட்சிக்கபட வேண்டும் மற்றும் மரணத்திற்கு பின்பு பரலோகம் செல்வதற்கு அனுமதி வேண்டும் என்றால் அவர் சிலுவையில் இயேசு பரிபூரணமாக செய்து முடித்ததான பணியின் மேல் விசுவாசத்தை வைக்கவேண்டும். இயேசு நம்முடைய பாவத்திற்காக நம்முடைய ஸ்தானத்தில் மரித்து, நம்முடைய பாவத்தின் விலையை செலுத்தி, மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று விசுவாசித்தால், நாம் இரட்சிக்கப்பட்டு இருக்கிறோம். இரட்சிக்கப்படுவதற்கு இதை காட்டிலும் அதிகமானதை யாரும் செய்யவேண்டிய அவசியிமல்லை. நாம் நம்முடைய சொந்த நற்கிரியைகளினால் தேவனை பிரியபடுத்த முடியாது, ஏனென்றால்! நாம் அனைவரும் பாவிகளாக இருக்கிறோம் (ஏசாயா 53:6; 64:6-7). இனி நாம் அதிகமானதொன்றும் செய்யவேண்டியது இல்லை! ஏனென்றால் கல்வாரி சிலுவையில் இயேசு கிறிஸ்து எல்லா பணியையும் செய்து முடித்து “முடிந்தது” என்று கூறிவிட்டார் (யோவான் 19:30), அதாவது இரட்சிப்பின் வேலையை பரிபூரணமாக முடித்து விட்டார்.

கிறிஸ்தவத்தின் படி, இரட்சிப்பு என்பது பழைய பாவ சுபாவத்தில் இருந்து விடுதலை மற்றும் தேவனோடு உள்ள சரியான உறவை தொடருவதற்கான விடுதலையும் ஆகும். நாம் முன்னே பாவத்திற்கு அடிமைகளாக இருந்தோம் இப்பொழுது கிறிஸ்துவுக்கு அடிமைகளாய் இருக்கிறோம் (ரோமர் 6:15-22). விசுவாசிகள் தாங்கள் இந்த பாவ சரீரத்தில் இந்தப் பூமியில் வாழ்கிறவரை, அவர்களுக்கு பாவத்தோடு தொடர்ந்து போராட்டம் உண்டு.

எனினும், கிரிஸ்தவர்கள் தங்கள் வாழ்வில் தேவனுடைய வார்த்தையை படித்து தங்களுடைய வாழ்வில் நடைமுறைப் படுத்தி, பரிசுத்த ஆவியானவரின் கட்டுப்படுத்துதலுக்கு தங்களை முற்றிலுமாய் ஒப்புக்கொடுப்பதன் மூலம் பாவம் போராட்டத்தில் இருந்து வெற்றி பெற முடியும் - அதாவது, அன்றாட சூழ்நிலைகளில் ஆவியானவரின் நடத்துதலுக்கு சமர்ப்பித்து நடப்பதன் மூலமாகும்.

ஆக, பல மத அமைப்புகள் ஒரு நபர் சில காரியங்களைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்று கூறுகிற வேளையில், கிறிஸ்தவம் நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து சிலுவையில் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார் என விசுவாசிக்கும் விசுவாசத்திலும் அதன் மூலமாக நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கலாம் என்கிற உறவிலும் கரிசனையை காண்பிக்கிறது. நம்முடைய பாவங்களுக்கான கடனை கிறிஸ்து செலுத்தி முடித்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார், அதனால் நாம் நம் தேவனோடு ஐக்கியப்பட்டு இருக்கலாம். நாம் நமது பாவ சுபாவத்தின்மேல் வெற்றிபெற முடியும், தேவனுக்கு கீழ்படிந்து அவரோடு உறவில் ஐக்கியப்பட்டிருப்போம். இதுதான் மெய்யான கிறிஸ்தவம்.

English



முகப்பு பக்கம்

கிறிஸ்தவம் என்றால் என்ன? கிறிஸ்தவர்கள் என்ன விசுவாசிக்கிறார்கள்?
இந்தப் பக்கத்தைப் பகிரவும்: Facebook icon Twitter icon Pinterest icon Email icon
© Copyright Got Questions Ministries